ரூபாய் நோட்டுகளில், ஏதேனும் எழுதப்பட்டிருந்தாலோ அல்லது கிறுக்கியிருந்தாலோ, அந்த நோட்டுகள், ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது என கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதனால் பலர் பீதியடைந்தனர். இந்நிலையில், ரூபாய் நோட்டுக்களில் எழுதினால் அது செல்லாது என்று இதுவரை அறிவிக்கவில்லை என்றும். இருப்பினும் ரூபாய் நோட்டுக்களில் எழுதும் போக்கு மக்களிடையே குறைய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரூபாய் நோட்டுகளை சுத்தமாகவும், அழுக்குபடாமலும் பாதுகாக்க, கடந்த ஆகஸ்ட் மாதம், ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், 'நீட் அண்டு கிளீன் பாலிசி' சுற்றறிக்கை அனுப்பியது. அதில், வங்கி ஊழியர்களுக்கு சில ஆலோசனைகள் சொல்லப்பட்டிருந்தன. ரூபாய் நோட்டுகளை சுத்தமாக வைத்திருக்கவும், அசிங்கப்படுத்தாமலும் இருக்க, 'வாடிக்கையாளர்களை அதில் எவ்வித எழுத்துக்களையும் எழுத வேண்டாம்' என, அறிவுறுத்துமாறு ஆர்.பி.ஐ., கூறியிருந்தது. மேலும், சில வங்கி ஊழியர்களிடம், ரூபாய் நோட்டுகளில் எழுதும் பழக்கம் உள்ளது. அவர்களை இனி, அவ்வாறு எழுத வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டடனர். இந்த நடவடிக்கைகளின் மூலம், எதிர்காலத்தில் அழுக்கற்ற ரூபாய் நோட்டுகளை பராமரிக்க முடியும். எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள், வங்கிகளில் வாங்கப்படாது என்ற வதந்தியை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து வங்கிகளும், அவ்வகை நோட்டுகளை பெற்றுக் கொள்ளும். என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.
|