குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அருவிகள் அனைத்தும் வறண்டு காட்சி அளிக்கின்றன.
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால், சுமார் 6 மாதங்கள் குற்றாலத்தில் தொடர்ச்சியாக ஓரளவு தண்ணீர் விழும்.
இதனால் சீசன் காலம் மட்டும் இன்றி விடுமுறை நாட்களிலும் ஏராளமானோர் குடும்பத்துடன் குற்றாலம் வருகை தருகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் ஓரளவு கூட்டம் காணப்படும்.
இந்த ஆண்டு ஜனவரி முடிந்து பிப்ரவரி துவங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தண்ணீரின்றி அருவிகள் வறண்டு காணப்படுகின்றன. புலியருவி அடியோடு வறண்டு விட்டது. பிரதான அருவியில் பாறையை ஒட்டினாற்போல் சிறிதளவு தண்ணீர் கசிகிறது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் சிறிதளவு தண்ணீர் கசிகிறது. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் வெகுவாக குறைந்தே காணப்படுகின்றது.
கொளுத்தும் வெயில் மற்றும் தண்ணீர் இல்லாததால் குற்றாலம் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. ஆண்டில் பல மாதங்கள் வெறிச்சோடிய நிலையில், குற்றாலம் காணப்படுவதால் சீசன் இல்லாத நாட்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறுவர் விளையாட்டு பூங்கா, வாட்டர் தீம் பார்க், எக்கோ டூரிசம், மலையேற்றம், இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதன் மூலம் ஆண்டு முழுவதும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
|