|
|||||
வெற்றிலையை பற்றி தெரிந்ததும் ! தெரியாததும் ! |
|||||
தமிழர்களின் கலாச்சாரத்தை பொறுத்த வரை பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் எல்லாவிதமான சுக, துக்கங்களிலும் பங்கெடுக்கும் ஒரே மூலிகை வெற்றிலை தான் ! இப்படி நற்பெயர் பெற்ற வெற்றிலை பல்வேறு வகையான மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. வெற்றிலையில் உள்ள அத்யாவசிய எண்ணெய் பசியைத் தூண்டுவதுடன், செரிமானத்தையும் துரிதப்படுத்தும். டைஃபாய்டு, காலரா போன்ற நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆற்றலும் வெற்றிலைக்கு உண்டு. வெற்றிலையில் உள்ள சப்ரல் (Saprol) என்ற வேதிப்பொருளுக்குப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் இயல்பு உண்டு என்றாலும், பாக்கு மற்றும் சுண்ணாம்போடு சேரும்போது புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வலுவிழந்துவிடுகிறது.
வெற்றிலையின் வகைகள் :
கம்மாறு வெற்றிலை :
கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பதுதான் கம்மாறு வெற்றிலை.
கற்பூர வெற்றிலை :
கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை.
சாதாரண வெற்றிலை :
மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.
வெற்றிலையின் பயன்கள் :
தாய்மார்களுக்கு மார்பில் அதிக பால் சுரக்க !
குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் உண்டாகும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறு நீங்க !
சிறு குழந்தைகளுக்கு செரிமான கோளாறு ஏற்பட்டால் பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.
உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்க !
பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.
நுரையீரல் நோய் குணமாக !
வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.
தோல் நோய்கள் குணமாக !
அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் ஐந்து வெற்றிலைகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு, வெற்றிலை நன்றாகச் சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி, சொரி, சிரங்கு, படைகளின் மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.
கட்டிகள் உடைய !
இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.
சிறுநீர் பிரச்சனை நீங்க !
வெற்றிலைச் சாறுடன் சிறிது தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்து அருந்திவர, சிறுநீர் பிரச்சனை நீங்கும்.
தலைவலி குணமாக !
கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும். |
|||||
by Swathi on 24 Apr 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|