முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்து உள்ளார். மேலும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் 70-வது குடியரசு தினவிழாவில், டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் உரையாற்றிய போது அவர் கூறியதாவது: நாட்டின் விடுதலைக்காக உயர்நீத்தவர்களை இந்த நேரத்தில் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை நாம் போற்ற வேண்டும். டிஜிட்டல் தொடர்பு அளிப்பதில் இந்தியா பெரும் புரட்சியை நிகழ்த்தி உள்ளது. இந்திய விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். கல்வி, கலை , மருத்துவத் துறைக்கு அப்பாற்பட்டு முப்படைகளிலும் நமது பெண்கள் முத்திரை பதித்து உள்ளனர். இந்த ஆண்டு, அனைத்து குடிமகன்களுக்கும் தங்களது மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்து உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் பிறந்த வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
|