தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து, அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், காங்கிரஸ், பாரதீய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் ஆகிய ஆறு தேசிய கட்சிகளும் பொருந்தும். அதனால், பொதுமக்கள் கேட்கும் தகவல்களை, அந்தக் கட்சிகள் தர வேண்டும் என அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால், அரசியல் கட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தகவல் பெரும் உரிமைச் சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வரலாம் என, சமீபத்தில் தகவல் வெளியானது. அது தற்போது உண்மையாகியுள்ளது. தகவல் பெரும் உரிமைச் சட்டத்தில், திருத்தங்கள் கொண்டு வர, நேற்று கூடிய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இது தொடர்பான மசோதா வருகிற 5 ந்தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|