இந்திய விமானப் படைக்கு இத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில், ராணுவ அமைச்சகம், பாதுகாப்பு துறையும் பல நிலைகளில் விதிமுறைகளை மீறியுள்ளதாக, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) நடாளமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக 12 அதி நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்ததில், பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. பாதுகாப்பு துறை கொள்முதல் குறித்த விதிமுறைகளை, ராணுவ அமைச்சகம் மீறியுள்ளது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனம், ஹெலிகாப்டர் கொள்முதலுக்காக 3, 966 கோடி ரூபாய் கோரியிருந்தது. ஆனால், ஒப்பந்த பேச்சுவார்த்தை கமிட்டி அதை விட, அதிகமான தொகையாக 4, 871 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளது. எந்தவித காரணமும் இல்லாமல், அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான சோதனை ஓட்டங்களை, இந்தியாவில் நடத்தப்படாமல், வெளிநாடுகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களுக்கான சோதனை ஓட்டங்களை, வெளிநாடுகளில் நடத்தியது ஏன்?அப்போது, (2007ல்) விமானப் படை தளபதியாக இருந்தவர் தான், வெளிநாடுகளில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கு பரிந்துரைத்துள்ளார். வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்குவதற்கான, "டெண்டர்' துவங்கியதிலிருந்து, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது வரை, பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து, எந்த ரக ஹெலிகாப்டர் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதோ, அந்த ரக ஹெலிகாப்டர்களை சோதனை ஓட்டத்துக்கு உட்படுத்தாமல், வேறு ரக ஹெலிகாப்டர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், "ஹெலிகாப்டர் பறக்கும் திறன், 6,000 மீட்டராக இருக்க வேண்டும்' என, ராணுவ அமைச்சகம் ஏற்கனவே நிபந்தனை வரையறை செய்திருந்தது. ஆனால், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்ட ஹெலிகாப்டரின் பறக்கும் திறன், இதை விட குறைவானது.இவ்வாறு, சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
|