சென்னை நகர மக்களின் முக்கிய பிரச்னைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக, பொது மக்களே தங்களின் குறைகளை பதிவு செய்யும் வசதியை, கால் பார் சேன்ஜ் என்ற அமைப்பு துவக்கியுள்ளது.
இதுதொடர்பாக அந்த பிரசார இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை நகரவாசியாக நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல 011-66030009 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டவுடன் உங்களது அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என்றாலும், உடனடியாக மீண்டும் உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, உங்கள் சென்னை நகரில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை உங்கள் குரலில் பதிவு செய்யலாம்.
இந்த குரல் பதிவு www.oursay.org/chennai என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என கால் ஃபார் சேன்ஜ் பிரசார இயக்கம் தெரிவித்துள்ளது.
|