பொதுவாக சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி அப்ரூவல் மனைகளில் பெரிய அளவில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனைக்கான கிரயப் பத்திரத்தில் தொடக்கி, பட்டா உள்ளிட்ட பல ஆவணங்களையும் தொடர்புடைய அமைப்புகள் அலசி ஆராய்ந்து விடும். மேலும் விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட லே அவுட்களுக்கு மட்டுமே அவை அனுமதி கொடுக்கின்றன. ஆனால் பஞ்சாயத்து அப்ரூவலில் மனைக்கான ஆவணங்கள், லே அவுட் பிளான்கள் எதையும் பஞ்சாயத்துத் தலைவரோ, பஞ்சாயத்து அதிகாரிகளோ பெரிய அளவில் பார்ப்பதில்லை. எனவே ஆவணங்கள் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தவை என்பதில் வங்கிகளுக்கு சந்தேகம் வருவதுண்டு.
சென்னை முழுவதும், காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில பகுதிகள் சி.எம்.டி.ஏ அப்ரூவல் கீழ் வருகின்றன. மற்ற அனைத்துப் பகுதிகளும் டி.டி.சி.பி அப்ரூவல் கீழ்தான் வருகின்றன. பொதுவாக வீடு கட்டும்போது சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி அப்ரூவல் வாங்குவதோடு உள்ளாட்சி அமைப்புகளிடமும் அனுமதி பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என எதுவாக இருந்தாலும் இதுதான் நடைமுறை.
இப்படி இரு அமைப்புகளிடமும் அனுமதி பெற்ற வீட்டு மனைகளுக்கு வங்கிகள் கடன் அளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வெறும் பஞ்சாயத்து அப்ரூவல் மட்டும் வாங்கி விட்டு கடன் கேட்டால் வங்கிகள் கடன் அளிக்காது. நீங்கள் வாங்கிய இடத்தில் அரசு திட்டம் ஏதேனும் வருகிறதா என்பது சி,எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்புகளுக்குத்தான் தெரியும். இதற்கு விடை கிடைக்காமல் வங்கிகள் கடன் அளிக்காது. எனவே, பஞ்சாயத்து அப்ரூவலுடன், டி.டி.சி.பி அப்ரூவல் வாங்கிய பிறகு வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்தால் கடன் எளிதாக பெற்று விடலாம்.
|