|
|||||
கண்காணிப்பு கமராக்கள் பிடியில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் !! பத்திர பதிவில் புதிய நடைமுறைகளும் அமலுக்கு வருகின்றன !! |
|||||
தமிழகத்தில் உள்ள அனைத்து சார் - பதிவாளர் அலுவலக செயல்பாடுகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உயர் அதிகாரிகள் கண்காணிக்க தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் பத்திரப் பதிவிலும், சில நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும், நில மோசடி, பத்திர பதிவின் போது ஆள்மாறாட்டம் போன்ற புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை அடுத்து, இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி, 'எல்காட்' உதவியுடன் முடிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பத்திரப் பதிவு நடைமுறைகளிலும் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அவை பின்வருமாறு,
மூன்று காமராக்கள் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பொருத்தப்படும், இதில் ஒன்று, உட்புறமிருந்து நுழைவாயிலை நோக்கி அமைக்கப்படும். இந்த கமிரா அலுவலகத்திற்கு வந்து செல்பவர்களை கண்காணிக்கும், இதற்கு அடுத்தபடியாக, சார் - பதிவாளர் இருக்கையை நோக்கி இருக்கும் வகையில், ஒலி, ஒளி காட்சிகள் பதிவாகும் வகையில், ஒரு கேமரா செயல்படும். பத்திரப்பதிவின் போது, சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள், உடன் இருப்பவர் என, அனைவரது செயல்பாடுகளும் இதில் துல்லியமாக பதிவாகும்.
ஒவ்வொரு பத்திரப்பதிவு குறித்த நிகழ்வுகள், 20 நிமிடம் வரை பதிவாகும். இந்த பதிவின் பிரதியை மட்டும், சொத்து விற்பவர், வாங்கு வோர், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, குறுந்தகடாக பெற்றுக் கொள்ளலாம். இவ்விரு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, அந்தந்த மண்டலத்துக்குரிய பதிவுத் துறை துணை தலைவர் அலுவலகத்தில் இருந்தும், சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்தும் நேரடியாக கண்காணிக்க முடியும். மேலும், சந்தேகத்திற்குரிய நிகழ்வு நடைபெறும் பட்சத்தில், பதிவுத் துறை துணை தலைவர் அல்லது பதிவுத் துறை தலைவர், நேரடியாக சம்பந்தப்பட்ட சார் - பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கவும் முடியும்.
தற்போது பத்திரப்பதிவின் போது, விற்பவர், வாங்குபவர் இருவரது புகைப்படம், கைரேகை போன்றவை பத்திரத்தின் முதல் பக்க பின்புறம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, பதிவுக்கு வருவோர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எடுத்து வரவேண்டியிருந்தது. இனி, பதிவுக்கு வருவோரின் புகைப்படம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள, மூன்றாவது கேமரா மூலமே நேரடியாக எடுக்கப்படும். மேலும், இதுவரை 'மை' பயன்படுத்தி கைரேகை பதிவு செய்த நடைமுறை மாற்றப்பட்டு, 'பயோ மெட்ரிக்' முறையில் இனி கைரேகை பதிவு செய்யப்படும்.இப்புதிய நடைமுறைகள் சார் - பதிவாளரை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். இந்த மாற்றங்கள் அனைத்தும், நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த 12 நாட்களில் இந்த புதிய நடைமுறை முழுவதும் அமலுக்கு வரும் என பத்திர பதிவுத் துறை தெரிவித்துள்ளது. |
|||||
by Swathi on 04 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|