செல் போன் டவர்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை என இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் மும்பை பிரிவு தலைவர், டாக்டர், எஸ்.கே., ஜோஷி மற்றும் டாக்டர், பார்திவ் சங்வி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது : செல் போன் டவர்களால், கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்றும், அதனால், புற்றுநோய், தோல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய வதந்திகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லை.
நாட்டில் ஏராளமான செல் போன் டவர்கள் உள்ளன. இவற்றிலிருந்து உமிழப்படும் கதிர்வீச்சுகள், வீட்டில் தினமும் பயன்படுத்தும், தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்கள் வெளியிடும் கதிர்வீச்சுகளை விட மிகக் குறைவு. செல் போன் டவர்களை விட, தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்கள், பத்து மடங்கு அதிக கதிர்வீச்சுகளை உமிழ்கின்றன. அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளை விட, இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே கதிர்வீச்சு உமிழப்படுகிறது. இந்த கதிர்வீச்சுகளால், புற்று நோய், தோல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதுகுறித்து, பொதுமக்களிடையே தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. மேலும் மைக்ரோ வேவ் ஓவன்கள், எக்ஸ் - ரே கருவிகள், எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் கருவிகள் போன்றவை வெளியிடும் கதிர்வீச்சுகளை விட செல் போன் டவர்களிலிருந்து உமிழப்படும் கதிர்வீச்சின் அளவு, மிகக் குறைவே. எனவே, பொதுமக்கள் செல் போன் டவர்கள் கதிர்வீச்சு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.
|