மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 4.12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதில்:
கடந்த 2016, 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் 4,123 மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 1,767 ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இவற்றில் 900 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 59 வழக்குகளில் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
89 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 900 வழக்குகளில் 19 வழக்குகள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 9 வழக்குகளில் குற்றவாளிகள் இல்லையென தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. ஊழலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல், மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலமாக பதிலளித்த ஜிதேந்திர சிங், ‘மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 4.12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 15,284 இடங்கள் குரூப் ஏ பணியிடங்கள். குரூப்-பி.யில் 77,050 பணியிடங்கள், குரூப் -சி பிரிவில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 418 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறைகளால் தகுதி தேர்வு நடத்தப்பட்டு விதிமுறைகளின்படி நிரப்பப்படும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். |