ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கியது.
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில், நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. செயல்பாட்டு மூலதனம் மற்றும் வட்டி கட்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வரும் ஏர் இந்தியா நிறுவனம், எண்ணெய் நிறுவனங்களிடம் சுமார் 4200 கோடி ரூபாய் கடன் வைத்து உள்ளது.
இதனால் எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் சூழல் உருவாகி உள்ளதால், மத்திய அரசிடம் உதவி கோரியது. மேலும் மத்திய அரசு உத்தரவாதத்தின் அடிப்படையில் நிதி திரட்டி வருகிறது. இந்த பணிகள் அடுத்த வாரத்துக்குள் நிறைவு பெற்று விடும் என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் ரூ.2,131 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் ஏர் இந்தியா கோரிக்கை வைத்தது. இதனையடுத்து தேசிய சிறுசேமிப்பு நிதியகத்தின் மூலம் ஏர் இந்தியாவுக்கு ரூ.1,000 கோடி மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.
இது குறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி, "கடனில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனம் தற்போது திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கான வட்டியைக் கட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறது" என்று கூறி உள்ளார். எனவே வரும் வாரத்தில் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் பெற உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
|