சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், ஓட்டுனர் பத்திரமாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு உயிரிழந்த சம்பவம் அப்பேருந்தில் பயணித்த பயணிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் 14 விமானப் பணிப்பெண்களுடன் தனியார் சொகுசுப் பேருந்து புறப்பட்டது. அப்பேருந்தை சென்னை புரசைவக்கத்தை சேர்ந்த சம்பத் ஓட்டி வந்தார். பரங்கிமலை நெடுஞ்சாலை அருகே பேருந்து வந்தபோது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஓட்டுனர் சம்பத், ஒரு கையினால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையினால் பேருந்து ஸ்டியரிங்கினை பிடித்து சமாளித்து ஆஸர்கானா வரை ஓட்டி, பத்திரமாக சாலை ஓரம் நிறுத்தினார்.
பேருந்து நின்றதும் ஓட்டுநர் சம்பத் திடீர் என நெஞ்சைப் பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பத் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சம்பத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சம்பத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பேருந்தில் பயணம் செய்த பயணிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
|