|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும் டிசம்பர் 18 முதல் 25 வரை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொன்மையான நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும், கலைகளிலும் உலகத்திற்கே முன்னோடியான நமது இந்திய தேசத்தில் எண்ணற்ற அரிய கலைகள் தோன்றி மக்களை மகிழ்வித்து சென்றிருக்கின்றன. அவ்வாறாக தோன்றிய அருங்கலைகளில் இன்றும் உயிர்ப்போடு காண்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்துகின்ற ஒன்று என்று சொன்னால் தென்னிந்தியாவின் "கர்நாடக சங்கீதம்" என்பதை யாரும் மறுக்க இயலாது. அவ்வரிய கலைகளில் முக்கியமானதும் முதன்மையானதுமான கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில், புதிய பரிமாணத்தில் கடந்த பனிரெண்டு வருடங்களாக "சென்னையில் திருவையாறு" என்கிற விழாவினை "லஷ்மன் ஸ்ருதி இசையகம்" (Lakshman Sruthi Musicals) சார்பாக வெகு விமரிசையாக நடத்தி வருகிறோம்.
பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, இசைத்துறையில் வித்வத்தன்மை கொண்டோரையும், வித்தியாசமான ரசிப்புத்தன்மை கொண்டோரையும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும், அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும் தேர்வுக்குழுவாய் அமைத்து, எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான் "சென்னையில் திருவையாறு" விழா!
ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் "சென்னையில் திருவையாறு" விழா திகழ்கின்றது.
இந்த ஆண்டு எமது இசைவிழாவிற்கு வயது பதிமூன்று.
இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு ”டி.வி.ராஜகோபால் பிள்ளை” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
”சென்னையில் திருவையாறு” - ஒரு சிறிய அறிமுகம்
‘சென்னையில் திருவையாறு’ என்கிற பெயர் தற்போது உலகெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் தென்னிந்திய பாரம்பரிய இசை சார்ந்தோர் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
இந்த இசைவிழா ஏன் இப்பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது ?, எப்படி வடிவமைக்கப்பட்டது ? என்பதற்கான ஒரு சிறு விளக்கமே இந்த அறிமுகம்.
”லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) சார்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு கர்நாடக சங்கீத விழாவை நடத்த ஆலோசனை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்களிலிருந்து சற்றே வித்தியாசமாகவும், தனித்துவத்துடனும் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்த விழாவின் துவக்கமே புதியதாய், நமது கலாசாரத்துடன் ஒட்டியதாய், அனைவரது மனமும் இசையோடு ஒன்றி, அமைதியும் ஆனந்தமும் பெறுகின்ற வகையில் அமைய வேண்டும் என்று சிந்தித்தோம்.
திருவையாறு தியாகராஜரின் ஸ்தலத்தில் வருடந்தோறும் இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி, அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை தெய்வீக உணர்வோடு பாடுகிறார்கள். அந்த இனிய உணர்வுமிக்க இசை அலையை ஏன் சென்னைக்குக் கொண்டு வரக்கூடாது என்று எங்களுக்குள் விவாதித்தோம்.
அப்போது திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே ஒரு விழாவை சென்னை மக்கள் கண்டுகளிக்கும்படி உருவாக்க எண்ணினோம். இதன் விளைவாகவே ஶ்ரீதியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு இசை விழாவைத் துவங்குவதென்றும், அந்த விழாவுக்கு "சென்னையில்-திருவையாறு" என்று பெயர் சூட்டுவதென்றும் முடிவு செய்தோம்.
மார்கழியும் இசையும்
இப்போது மார்கழி மாதத்துக்கும் இசைக்குமான தொடர்பையும், ‘சென்னையில் திருவையாறு' விழா எப்படி துவங்கப்படுகிறது என்பதையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்…
சுருங்கச் சொன்னால் கடவுளைக் காணவும் அடையவும் இசை ஒன்றுதான் வழி. இசைக்கு திசையில்லை, தேசமில்லை, மொழியில்லை, மதமில்லை, சாதியில்லை, பேதமில்லை, நிறமில்லை. இசை மட்டுமே ஒருமை நிலையை உருவாக்கக்கூடியது. எந்த ஒரு நிர்ப்பந்தமுமின்றி இயற்கையாய் எல்லோர் மனதையும் சென்றடைவது இசையே.
இயற்கை என்பது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை. இந்த ஐம்பெரும் சக்திகளையும் அடக்கி ஆளக்கூடிய வல்லமை படைத்தது இசை என்றால் அது மிகையாகாது. உலகின் பொது மொழி என்பது மௌனமாகப் பேசப்படும் சைகை மொழி. அதையடுத்து பொதுவான மொழியென்றால் அது இசை ஒன்றே.
இயற்கை அமைப்புகளுக்கு இறைவன் 'பருவம்' என்ற ஒரு குறிப்பிட்ட காலத்தை உருவாக்கினான். அதன்படி சில பருவத்தில் மட்டுமே பூக்கும் மலர், பெய்யும் மழை, வீசும் காற்று, கொட்டும் பனி, விளையும் பயிர்கள் என படைத்துள்ளான். அதுபோல் இறைவன் இசைக்கென்றும் ஒரு பருவத்தைப் படைத்திருக்கின்றான். அதுவே மார்கழி.
மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். இந்த மாதத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படும் மாதம். பகவத் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி'' என்று கிருஷ்ண பரமாத்மாவே குறிப்பிடும் மாதம். தில்லையில் நடராஜர் நடனம் புரிந்த திருவாதிரைத் திருநாள் இடம்பெறும் மாதம் திருவெம்பாவையை மாணிக்கவாசர் அருளிய மாதம். மனுக்குலம் தழைக்க இப்பூவுலகில் மாமரிச்செல்வனாம் இயேசுபிரான் அவதரித்த மாதம். ஹரி நாமசங்கீர்த்தனம் எனும் புனைப்பாடல்களைப் பலர் ஒன்றுகூடிப் பாடும் மாதம். வாசலில் வண்ண வண்ணக் கோலங்களிடும் மாதம். கோவில் கோபுரங்களில் மணியோசைகள் தொடர்ந்திடும் மாதம். ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் இடைவிடாது நடக்கும் மாதம். இப்படி எத்தனையோ சிறப்புகள் சேர்ந்ததுதான் மார்கழி. அப்படிப்பட்ட மார்கழி மாதத்தையும், இயற்கையை அரவணைத்து வெற்றி கொள்ளும் இசையையும் இணைப்பதே மார்கழி இசை விழா. அதுவே தியாகராஜர் ஆராதனை விழா.
ஸ்ரீ தியாகராஜர்
“எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்கார் தியாகராஜர். எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள். இவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீ தியாகராஜர்” திகழ்கின்றார். இவர் இயற்றிய சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்” ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகமெங்கும் இசைக்கலைஞர்களால் இன்றும் பாடப்பட்டு வருகிறது.
எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” செவி மடுத்துக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி அயல்நாட்டவரும் கூட தியாகராஜரின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.
எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் ”லஷ்மன் ஸ்ருதி”யின் சார்பாக உங்கள் பேராதரவுடன் ”சென்னையில்-திருவையாறு” என்ற வடிவத்தில் பதிமூன்றாவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம்.
மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும் நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.
பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டுவரும் ஒர் அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”
”சென்னையில் திருவையாறு” துவக்க நாளான டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாபோல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியர், ஸ்ரீஅனுமன் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு சிறப்பு சாஸ்த்ரிய சம்பிரதாய பூஜையுடன் காண்பதற்கரிய வைபவமாக துவங்குகிறது.
கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய ”திருமதி. சுகுணா வரதாச்சாரி” அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் ஐநூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர். பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.
இந்நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம், விழா துவங்கும் முன் வழங்கப்படும்.
திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நேரில் சென்று காண இயலாத இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் “சென்னையில் திருவையாறு” துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கேட்டு இறைவனருள் பெற வேண்டுகிறோம். இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம் ! அனைவரும் வருக !
”சென்னையில் திருவையாறு” துவக்க விழா
பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் வைபவம் நிறைவுற்றதும் சரியாக மாலை 4.00 மணிக்கு ”சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் துவக்க விழா நடைபெறும்.
இசை ஆழ்வார் விருது
துவக்க விழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும் ”சென்னையில் திருவையாறு” அமைப்பின் சார்பாக கர்நாடக சங்கீத மற்றும் நாட்டிய உலகின் தலைசிறந்த கலைஞர் ஒருவருக்கு அவரது இசைச்சேவை மற்றும் வாழ்நாள் சாதனையை பாராட்டும் விதமாக ”இசைஆழ்வார்” என்ற கெளரவ விருதும், தங்கப்பதக்கமும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
கர்நாடக இசையில் முக்கியமனதொரு பங்காற்றக்கூடிய இசைக்கருவி மிருதங்கம். உலக அளவில் எல்லா நாட்டவரும் தமது இசையோடு இணைத்துக் கொள்ளக் கூடிய நுட்பமானதொரு கருவியும் மிருதங்கமே.
அப்படிப்பட்ட மிருதங்கத்தில் சாதனைகள் பல செய்தவரும், சர்வதேச கலைஞர்கள் பலருடன் பணியாற்றியவரும், இன்றளவும் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகவும், ரசிகர்களின் மனதில் தன் திறமையால் நிரந்தர இடத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவருமான ”பத்ம விபூஷண்” திரு.உமையாள்புரம் சிவராமன் அவர்களின் இசைச்சேவையைப் பாராட்டும் முகமாக இசை ஆழ்வார் பட்டம்மும் தங்கப் பதக்கமும் வழங்கி கெளரவம் செய்யப்பட உள்ளது.
டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா திருவுருவ மெழுகுச்சிலை
சென்னையில் திருவையாறு துவக்கவிழாவில் தன் காந்தர்வக்குரலால் நம் அனைவரது உள்ளங்களையும் ஆட்கொண்ட இசைப்பேரரசர் “பத்மவிபூஷண்” டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களை கெளரவிக்கும் வகையில் லண்டன் வேக்ஸ் மியூசியத்தில் உள்ளதைப்போல் தத்ரூபமான மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது.
உலகத் தரம் வாய்ந்த சிற்பக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்படும் இந்த மெழுகுச்சிலை பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வியப்பில் ஆழ்த்த உள்ளது.
வளரும் இளம் கலைஞர்கள் மட்டுமல்லாது, கர்நாடக இசையுலகில் இன்று நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் பிரபலங்களும் தங்களின் மானசீக குருவாகவே போற்றி வணங்கும் டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் திருவுருவச் சிலையுடன் பொதுமக்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள காமராஜர் அரங்கின் நுழைவு மண்டபத்தில் வசதி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் ”பாரத ரத்னா” ஏ.பி.ஜே.அப்துல்கலாம், "பாரத ரத்னா" எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் "பாரத ரத்னா" எம்.ஜி.ஆர் அவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
துவக்க விழாவினைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு மஹதி அவர்களின் வாய்ப்பாட்டிசை நிகழ்ச்சியோடு ”சென்னையில் திருவையாறு” இசை நிகழ்வுகள் துவங்குகின்றன. மஹதியுடன் இணைந்து அனில் ஸ்ரீநிவாஸ் அவர்களின் பியானோ மற்றும் சுதாராஜா குழுவினரின் வாய்ப்பாட்டிசையும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ”திரு. ராஜேஷ் வைத்யா” அவர்களின் வீணையிசையுடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
19ஆம் தேதி முதல் தினமும் எட்டு நிகழ்ச்சிகள், காலை 7.00 மணிக்குத் துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெறும்.
கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையுலகின் மூத்த இசைக்கலைஞர்களும், வளர்ந்து வரும் திறமையாளர்களும், நாட்டியக் கலைஞர்களும் சேர்ந்து மொத்தம் அறுபது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். மேலே உள்ள பட்டியலில் காணப்படும் ஒவ்வொரு கலைஞரும் ஒவ்வொரு விதமான வகையில் இவ்விழாவிற்காக மிக நுணுக்கமான வகையில் பயிற்சியும் முயற்சியும் செய்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.
காமராஜர் அரங்கத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே கொண்டுவரும் வகையில் பிரமாண்டமான முறையில் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை, பாடுவோர்க்கும், இசைப்போர்க்கும், நடனமாடுவோர்க்கும், நிகழ்ச்சியைக் காண்போர்க்கும் சந்தோஷமளிக்கும் வகையில் இருக்கும்.
அரங்கின் எல்லா பகுதிகளிலிருந்தும் இசைக்கருவிகளையும் பாடகர்களையும் நடனக்கலைஞர்களையும் அவர்களது திறமைகளை துல்லியமாகக் காணும் வகையில் மேடையின் இருபுறமும் அகன்ற திரைகள் அமைக்கப்படுகின்றன.
அரங்கத்தின் எல்லா இடங்களிலும் சீராகக் கேட்கும் படியான செவிக்கினிய ஒலி அமைப்புக்கும், கண்கவர் ஒளி அமைப்புக்கும் முக்கிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் கண்டுகளிக்கும் ”சென்னையில் திருவையாறு” இசை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ”ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுமையான மற்றும் புதிய தொழில் நுட்பத்துடன் பல்வேறு வகையான கேமராக்களுடன் ஜீ தமிழ் ஒளிப்பதிவாளர்கள் நிகழ்ச்சிகளை படம்பிடித்து ஜீ தமிழ் நேயர்களுக்கு விருந்தளிக்க உள்ளார்கள்.
டிக்கெட் விற்பனை
அனைத்து நிகழ்ச்சிகளையும் காண்பதற்கென தொடர் அனுமதிச்சீட்டும் (Season Ticket), தனித்தனியாக நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துக் காண்பதற்கான அனுமதிச்சீட்டும் (Individual Show Ticket) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள்
1. லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் – வடபழநி
2. காமராஜர் அரங்கம் - தேனாம்பேட்டை
3. நாயுடு ஹால் - அண்ணா நகர்,
4. நாயுடு ஹால் - தி நகர்,
5. நாயுடு ஹால் - வேளச்சேரி,
6. நாயுடு ஹால் - தாம்பரம் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இணையதளம் மூலமாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட இணையதளங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது www.lakshmansruthi.com,
மேலும் விவரங்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள:
044-44412345, 86070445521 / 044 - 48562170
www.chennaiyilthiruvaiyaru.com, ,
email : ct@lakshmansruthi.com
https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial
இலவச நிகழ்ச்சிகள்
தினமும் காலை 7.00 மணி, 8.30 மணி, 9.45 மணி, 11.00 மணி, பிற்பகல் 1.00 மணி, 2.45 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்.
மாலை 4.30 மணி, இரவு 7.15 ஆகிய காட்சிகளுக்கு மட்டும் டிக்கெட் விற்பனை உண்டு.
ரசிகர்களுக்கான இலவச இரவுப்பேருந்து
ரசிகர்களின் வசதிக்காக தினமும் இரவு 7.15 மணி காட்சி நிறைவுற்றதும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வசதியாக சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காமராஜர் அரங்கத்திலிருந்து இலவசமாக பேருந்துகள் (Free Buses) இயக்கப்படும். இலவச பேருந்தில் செல்ல விரும்புவோர் தங்கள் பெயரையும், செல்ல வேண்டிய இடத்தையும், உடன் வருவோர் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு 98416 98512, 98416 98499 ஆகிய எண்களில் ஒன்றிற்கு எஸ்.எம்.எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் (Whatsapp) செய்து தங்கள் இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம். பேருந்துகள் உதவி : ஸ்ரீ பாக்யலஷ்மி டூர்ஸ் & டிராவல்ஸ். மேலும் விவரங்களுக்கு 044 - 4666 4666, www.sblt.co.in
வாகனங்கள் நிறுத்தும் வசதி
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு காமராஜர் அரங்கத்தை ஒட்டியிருக்கும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காங்கிரஸ் மைதானத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விற்பனை அரங்குகள்
நாள்தோறும் பல ஆயிரம் பேர் கூடுவதால், அரங்கின் வெளி மண்டபத்தில் பல்வேறு விதமான விற்பனையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இசைக்கருவிகள், கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், உணவுத் தயாரிப்பு தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி க்கள், சி.டி க்கள், ஆன்மிக புத்தகங்கள், பூஜை பொருட்கள், இசைக்கருவிகள் குறித்த புத்தகங்கள் கொண்ட அரங்குகளும் இடம் பெறுகின்றன. மேலும் பதிப்பகங்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் மையங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவன மையங்கள், சமூக சேவை மையங்கள், போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
அறிவுத்திறன் போட்டி மூலம் ரசிகர்களுக்குக் குவியும் பரிசுகள்:
அரங்கிற்குள் வருகின்ற ரசிகர்கள், நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் அறிவுத்திறன் கேள்விக்கான பதிலை தங்கள் நுழைவுச் சீட்டில் குறிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எழுதி, அரங்கில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு நிகழ்ழ்ச்சியிலும் நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்களில் ஐந்து பேரை குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிகழ்வை வழங்கும் கலைஞரின் கரங்களால் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட அந்தக் கலைஞரே ரசிகர்களுக்குப் பரிசுகள் வழங்குவது சிறப்பம்சமாகும்.
ரசிகர்களை அதிசயிக்க வைக்கும் பம்பர் மற்றும் மெகா பரிசுகள்:
நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று, எட்டு நாட்களிலும் கலந்து கொண்ட அனைத்து ரசிகர்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ”அமெரிக்கா” சென்று வருவதற்கான இரண்டு விமான டிக்கெட்டுகள் கும்பகோணம் ”அரசு ஜுவல்ஸ்” நிறுவனத்தின் சார்பாக பம்பர் பரிசாக வழங்கப்படும்.
உணவுத்திருவிழா: 2017
”சென்னையில் திருவையாறு” இசை விழாவுடன் உணவுத்திருவிழா எப்படி இணைந்தது ?
”செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பர்.
”சென்னையில் திருவையாறு” இசை விழாவில், ரசிகர்களின் செவிகளை திகட்டத் திகட்ட நிரப்பும் தேனினும் இனிய இசை விருந்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் காலை 7.00 மணிக்குத் துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெறும் இடைவிடா இசை மழைக்கு இடையே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு காபி குடிக்க வேண்டும் என்றால் கூட காமராஜர் அரங்கில் இருந்து வெளியேறி, சாலையைக் கடந்து சிறிது தூரம் நடந்து, கடையைத் தேட வேண்டியிருக்கும். தரமான உணவகம் கண்டுபிடித்து சாப்பிட்டுத் திரும்புவதற்குள், போதும் போதுமென்றாகிவிடும்.
ரசிகர்களின் செவிக்கு பல்வேறு இசை வடிவங்கள் கேட்கக் கிடைப்பது போல், வயிற்றுக்கும் பல்வேறு உணவு வகைகள் கிடைத்தால் ஏராளமான ரசிகர்கள் விழாவுக்கு வருவார்கள் என்ற நோக்கத்தில் உணவுத்திருவிழாவினை வடிவமைத்தோம். குறிப்பாக இந்த ஏற்பாடு வெளிநாட்டு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அறுபது அடி உயர பிரம்மாண்டமான தேசிய கொடி
உணவுத்திருவிழாவின் நுழைவு வாயிலில் ரசிகர்களை பரவசப்படுத்தவும், உலகசாதனைக்காகவும் இந்தியத் தாய்த்திருநாட்டைப் போற்றும் வகையில் 60” அடி அகலத்தில் 24” அடி உயரத்தில் முற்றிலும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேசியக்கொடி அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு உணவுத்திருவிழாவின் சிறப்பம்சமாக வீடுகளில் மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாடித்தோட்டம் வடிவமைத்தல், பராமரித்தல், அவற்றிற்கான உபகரணங்கள், விதை, உரம் மற்றும் மூலிகை செடிகள் வளர்ப்பு போன்ற அனைத்து விவரங்களையும் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் நேரிலேயே செய்முறை விளக்கம் அளிக்க உள்ளார்கள்.
முப்பதாயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் பிரமாண்டமான அரங்கத்திற்குள் தமிழகத்தின் முன்னணி உணவகங்களின் அறுபதுக்கும் மேற்பட்ட உணவு அரங்கங்களும், 300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான வசதிகளும் செய்யப்படுகின்றன.
பசியாற்றும் உணவகங்கள் மட்டுமே என்றில்லாமல், உணவுத்திருவிழாவின் ஒரு பகுதியில் தனி மேடை அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த சமையல்கலை வல்லுநர்களின் அனுபவங்கள், பிரபல சமையல் கலைஞர்கள் மற்றும் உணவுக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் செயல் விளக்க நிகழ்ச்சிகள், பார்வையாளர்களும் பங்கேற்று தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சமையல் கலைப்போட்டிகள், ஒவ்வொரு போட்டியிலும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவுகள், நாள் முழுக்க நடக்கும் உணவுத் திருவிழாவின் இடையே மேடைக்கும் உணவரங்கங்களுக்கும் வந்து செல்லும் இசையுலக ஜாம்பவான்கள், திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள், ஆகியோர் அனைவரையும் அருகில் கண்டு பேசி மகிழும் வாய்ப்பு, சிறுவர்களுக்குண்டான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விளையாடுவதற்கான வசதிகள்,
குழந்தைகளோடு வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த சிறுவர்களைக் கவரும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் வித்தியாசமான கலைப்படைப்புகளையும், சிற்பங்களையும் செதுக்கும் அரங்குகள், நிபுணர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் என்று பல வித்தியாசமான ஏற்பாடுகள் இந்த உணவுத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக அணிவகுக்கின்றன.
அதேபோல் உணவுத்திருவிழாவினை மட்டுமே காண வருவோர் காமராஜர் அரங்கத்திற்கு உள்ளே என்ன நடக்கின்றதென்று எட்டிப் பார்க்கின்ற வேளையில், சங்கீதத்தில் நீந்துகின்ற வாய்ப்பு ஏற்படும். கர்நாடக இசையில் ஆர்வமில்லாதோரும் சற்று நேரம் அதைக் கேட்கும் தருணத்தில் தங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பிப்பர். அதுதான் நம் மண்ணின் இசைக்கான மகத்துவம். இசைவிழாவிற்கு புதுப்புது ரசிகர்கள் வரத்துவங்குவர். இதன் மூலம் நமது பாரம்பரிய இசை பல திசைகளுக்கும் பரவும் வாய்ப்பு உண்டாகும். கடந்த வருடங்களில் இப்படி வருகை தந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இசை விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வர ஆரம்பித்துவிட்டார்கள்.
முதியவர்களுக்கு முதல் மரியாதை:
இந்த இசை விழாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, முதியவர்களுக்கு மரியாதை செய்யப்படுவது சிறப்பம்சம். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து தினந்தோறும் 500 மூத்த குடிமக்கள் தனி பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனம், உபன்யாசம், பக்தி பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு திரும்புகின்ற பொழுது அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காபி வழங்குவதுடன் அத்தியாவசியப் பொருட்கள், ஆன்மிக புத்தகங்களின் குறிப்பேடுகள், முதலுதவி உபகரணங்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்துண்டு, குளிருக்கான ஆடைகள், பேனா, தொலைபேசிக் குறிப்புப் புத்தகங்கள் ஆகியன அடங்கிய விசேஷ கைப்பை ஒன்றும் வழங்கப்படுகிறது.
நமது கர்நாடக இசையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு, உலகின் எந்தவொரு இசைக்கும் நமது மண்ணின் சங்கீதம் குறைந்ததில்லை என்பதை பறைசாற்றும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய தாங்கள், இச்செய்திக் குறிப்புகளை உலகெங்கும் பரவிக் கிடக்கும் இசை ரசிகர்களை சென்றடைய ஆவன செய்து உதவிடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
லஷ்மன் ஸ்ருதி நிறுவனம் - ஒரு சிறு குறிப்பு :
’லஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழு எனும் இந்த நிறுவனத்தை 1987ஆம் ஆண்டு முதல் 30 வது வருடமாக நடத்தி வருகின்றோம். எங்கள் இசைக்குழு 10,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்தியிருக்கிறது. 1994 ஆம் ஆண்டு 36 மணி நேரம் தொடர்ந்து இசை நிகழ்ச்சி என்ற உலக சாதனை இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினோம். தமிழர்கள் அதிகமாய் வசிக்கின்ற நாடுகளுக்கெல்லாம் சென்று இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளோம்.
லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ்
எமது குழுவின் சார்பாக 2003 ஆம் ஆண்டு இசைக்கருவிகள் விற்பனை செய்வதற்காக ”லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ்” என்ற பெயரில் புதிய பாதையில் தடம் பதித்தது. இந்த இசை வளாகத்தில் இசைக்கருவிகள், ஒலி நாடாக்கள், ஆடியோ வீடியோ கேசட்டுகள், சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், இசை சம்பந்தமான புத்தகங்கள், நாட்டிய சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் இசைக்கலையுடன் உருவாக்கப்பட்டுள்ள பரிசுப்பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
எங்கள் இசை வளாகத்தில்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும், இசை நடனம் மற்றும் பல்வேறு துறை ஆராய்ச்சியாளர்களுக்காகவும், திரைப்படத் துறையினரின் ஒலிப்பதிவு மற்றும் படப்பிடிப்புக்காகவும் இசைக்கருவிகளை வாடகைக்கு வழங்கும் பிரிவு (Rental Division)
லஷ்மன்ஸ்ருதி.காம் (www.lakshmansruthi.com) என்கிற இணையதளம், இசை ரசிகர்களுக்கான தகவல்களை வாரி வழங்கும் வகையில் இயங்கி வருகின்றன.
”சென்னையில் திருவையாறு” இசைவிழாவின் ஆதரவாளர்கள்:
மெயின் – ஸ்பான்சர் :
கோ-பிரசன்டட்-பை:
டைமன் ஸ்பான்சர் :
ஹெல்த் பார்ட்னர் :
பிரஸ் பார்ட்னர் :
கோல்டு ஸ்பான்சர் :
சில்வர் ஸ்பான்சர் :
ரேடியோ பார்ட்னர்
மீடியா ஸ்பான்சர் :
அஃபீஷியல் பி ஆர் ஓ
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:
உணவுத் திருவிழாவிற்கான ஆதரவாளர்கள்
மெயின் – ஸ்பான்சர்:
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
by Swathi on 08 Dec 2017 1 Comments | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Tags: Chennaiyil Thiruvaiyaru Chennaiyil Thiruvaiyaru Live Telecast Isai Thiruvizha Lakshman Sruthi Thiruvaiyaru Isai Thiruvizha சென்னையில் திருவையாறு இசை திருவிழா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|