ஆடம்பரமாக அரசு விழாக்களை நடத்தியதாகவும், விழா விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 20,000 அரசு அதிகாரிகள் கடந்தாண்டு தண்டிக்கப் பட்டுள்ளதாக சீன அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீன அதிபராக ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு பதவியேற்றது முதல் நாட்டில் நிலவிய அதிகாரிகளின் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் மற்றும் ஊதாரித்தனம் குறித்து களை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக அரசு விழாக்கள் குறைக்கப்படவேண்டும் என்றும், வரவேற்பு விழாக்கள் முற்றிலும் நீக்கப்படவேண்டும் என்றும், அதிகாரிகள் தங்களின் அர்த்தமற்ற பேச்சுகளைக் கைவிடவேண்டும் என்றும் அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டார்.
அதிபரின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு மற்றும் ஒழுக்கம் குறித்து ஆய்வு செய்யும் மத்தியக் குழு இந்த விதிமுறைகளை மீறிய அதிகாரிகளுக்கு அலுவலக அளவிலோ அல்லது உட்கட்சி அளவிலோ தண்டனைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தது. ஆனால் தண்டனை பெற்றவர்களின் விபரங்களை அரசு வெளியிடவில்லை. ஆனால், இணையத்தள தகவல் ஒன்றில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களது அலுவலக கார்களை பயன்படுத்தியதிலும், 903 அதிகாரிகள் விரிவான கொண்டாட்ட விழாக்களை ஏற்பாடு செய்ததிலும் விதிமுறைகளை மீறியதாக இந்தக் குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சென்ற ஆண்டு மட்டும் ஆடம்பரமாகவும், விழாக்கள் குறித்த விதிமுறைகளை மீறியதற்காகவும் கிட்டத்தட்ட 20,000 அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|