சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் மீண்டும் ஊடுருவி இந்திய இராணுவத்தினர் அமைத்திருந்த பதுங்கு குழிகளை அளித்ததோடு மட்டுமல்லாமல், கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களையும், "இந்த இடம் சீனாவுக்கு சொந்தமான பகுதி" என மிரட்டி வெளியேற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீன ராணுவத்தின் இந்த அத்துமீறல் பற்றி மத்திய அரசுக்கு உளவுத்துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள இந்தோ ,திபெத் எல்லை படை போலீசாரும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி சமீபத்தில் சீன பயணம் மேற்கொண்டார். இந்த பயணத் திட்டம் முன்பே வகுக்கப்பட்டு இருந்த போதிலும், சீன ராணுவம் அதை பற்றி கவலைப்படாமல் இந்த அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளது. உத்தரகாண்ட் இயற்கை பேரழிவுக்கு எதிராக மத்திய அரசு போராடி கொண்டிருக்கும் இந்நிலையில், சீன ராணுவத்தின் செயலை சர்வதேச அளவில் எழுப்ப விரும்பாததால் மத்திய அரசு அதை மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.
|