கைத்தறி துணி உற்பத்தி மற்றும் கைத்தறித் துறையில் மகத்தான பங்களிப்பிற்காக, தமிழக அரசு நிறுவனமான கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு முதல் முறையாக இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.
1256 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனமாகும். இந்தியா முழுவதும் கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு 200 இடங்களில் விற்பனை நிலையம் உள்ளது. கடந்த பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், புதிய நிர்வாக இயக்குநராக சகாயம் பொறுப்பேற்றதிலிருந்து, லாபத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு மட்டும் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் லாபம் மட்டுமே ரூபாய் ரெண்டே கால் கோடி கிடைத்தது. அதில் ஒரு கோடியை கைத்தறி நெசவாளர்களுக்கே ஊக்கத் தொகையாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார் சகாயம்.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கைத்தறித் தயாரிப்புகளோடு விலைப் பட்டியலுடன் சேர்ந்து அந்தத் துணியை நெய்த நெசவாளியின் புகைப்படம், பெயர், அந்தத் துணியை நெய்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள், உடல் உழைப்பு பற்றிய விவரங்களையும் தனி அட்டையில் அச்சிட வைத்தார் இயக்குனர் சகாயம். முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நெசவாளிகள் 100 பேர் நெய்து கொடுத்த சேலைகள் அவர்களைப் பற்றிய விவர அட்டையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் 2013-ல், அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்காகவும் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். இந்த விருதுகளை, கடந்த மாதம் டெல்லியில் நடந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ். தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திடம் வழங்கினார்.
|