|
|||||
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், பொருளாதாரம் வீழ்ச்சிக்கும் மத்திய அரசே காரணம் - திருச்சி மாநாட்டில் மோடி குற்றச்சாட்டு !!! |
|||||
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதற்கு, மத்திய அரசின் பலவீனமே காரணம் என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பா.ஜ.க.வின் இளந்தாமரை மாநாடு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாடு காரணமாக திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாடு மேடை டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேளராவில் இருந்து தனி விமானம் மூலம் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி திருச்சி வந்தனர். அவர்களை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். இந்த மாநாட்டில் நரேந்திர மோடி மாலை 6.15 மணியளவில் தனது உரையை தொடங்கி, இரவு 7.25 மணிக்கு பேசி முடித்தார்.
மவுன அஞ்சலி :
நரேந்திர மோடி மைக்கைப் பிடித்ததும், ''காஷ்மீரிலும், நைரோபியிலும் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான இந்திய ராணுவத்தினருக்கும், தியாகிகளுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்துவோம்'' எனக் கூறி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் தனது உரையை ஆரம்பித்த மோடி, சில வரிகளை தமிழிலேயே பேசினார். தொடர்ந்து ஹிந்தியில் பேசத் தொடங்கினார்.
உரையை தமிழில் தொடங்கிய மோடி :
அஞ்சலி செலுத்திய பிறகு உரையை ஆரம்பித்த மோடி, ' பாரத் மாதாஹே ஜே, தமிழ் மண்ணே வணக்கம்! பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப சிங்கங்களே! அனைவருக்கும் வணக்கம்!, தமிழ்நாடு பெருமை வாய்ந்த நாடு, கம்பன், வள்ளுவன் பிறந்த நாடு இந்த தமிழ்நாடு. தமிழ்நாடு என்று சொன்னால் காதில் தேன் வந்து பாயும் என்று பாடினார் பாரதியார். திருச்சி தமிழ்நாட்டின் இதயம் போல் மத்தியில் இருக்கும் மாவட்டம், காவிரியும் அலங்கரிக்கும் மாவட்டம், சோழர்கள் ஆண்ட திருச்சியில் வசிக்கும் அனைவருக்கும் மீண்டும் வணக்கம்' என தமிழில் வீர உரையை ஆரம்பித்தார் மோடி,
மேலும் அவர் பேசகையில், தமிழர்தான் இ மெயிலையும் கண்டுபிடித்தவர். உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். தமிழகமும், குஜராத்தும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் நாட்டு விடுதலைக்காகப் போராடி இருக்கின்றனர். குஜராத்தில் இருந்து காந்தி தமிழகத்துக்கு வருவாரேயானால் இங்கே ராஜாஜி நம்பிக்கைக்குரியவர். தமிழகத்தில் இருந்து குஜராத்தை மான்செஸ்டர் என்று அழைக்கிற அளவுக்கு ஏராளமானோர் முன்னேற்றியிருக்கின்றனர். இங்கே ஒரு சிறிய குஜராத் என்று சொல்லும் அளவுக்கு செளகார்பேட்டை இருக்கிறது. குஜராத்திலேயே ஒரு சிறிய தமிழகமாக மணிநகர் இருக்கிறது. அந்த மணிநகர்தான் எனது சட்டசபை தொகுதி. மணிநகர் தமிழ் வாக்காளர்கள்தான் என்னை பெரும் வெற்றி பெற வைத்தனர். பாலில் சக்கரை இரண்டற கலந்து இருப்பதைப் போல தமிழர்களும் குஜராத்திகளும் வாழ்கின்றனர். இரண்டு மாநிலங்களுமே கடற்கரை மாநிலங்கள். இரண்டு மாநிலங்களுமே கடல் மார்க்கமாக பல நாடுகளுடன் வர்த்தகங்களை நடத்தியிருக்கின்றன. கடற்கரையை ஒட்டி இருக்கிற நமது இரு மாநிலங்களுக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. எப்படி குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனரோ, அதேபோல் இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஏன் தூக்கி செல்கிறது? தமிழக மீனவர்களை இலங்கை ஏன் தூக்கி செல்கிறது? இதற்கான தைரியம் இந்த நாடுகளுக்கு எப்படி வந்தது? பிரச்சனை கடல் மத்தியில் அல்ல.! மத்தியில் இருக்கிற பலமற்ற அரசால்தான் இந்த தைரியம் இந்த நாடுகளுக்கு வந்துள்ளது!!
குஜராத் அல்லது தமிழகம் அல்லது கேரளா அல்லது கர்நாடகாவாக இருந்தாலும் மீனவர்கள் தினசரி வேலைக்கு நிம்மதியாக செல்ல வேண்டுமெனில் மத்தியில் இருக்கும் பலவீனமான அரசு தூக்கி எறியப்பட வேண்டும். குஜராத்தில் இருக்கிற மீனவர்களை 6 மாதம் சிறையில் வைத்து பாகிஸ்தான் சித்திரவதை செய்கிறது. இதே நிலைமைதான் தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் நேருகிறது. ஆனால் வாஜ்யாப் ஆட்சிக் காலத்தில்தான் இப்படி எதுவும் நடைபெறவில்லை என்று பேசினார்.
பிரதமருக்கு கண்டனம் :
சொந்த நாட்டு மீனவர்களை அண்டைநாட்டுப் படையினர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் தீவிரவாதிகளால் நம் படையினர் கொல்லப்படுகிறார்கள். அண்டை நாடுகளால், சொந்த நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அளவில் இன்னல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற வேளையில், அதே அண்டை நாட்டின் பிரதமருடன் வெளிநாட்டிலே உணவருந்திருக்கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பினார்.
பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம் !
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை மேற்கோள்காட்டி, நாட்டின் பொருளாதர நிலை குறித்துப் பேசியவர், இந்த ஆட்சி தொடர்ந்து இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்குமானால், இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று வீதியிலே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நம் நாட்டின் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். மத்திய அரசின் கொள்கை காரணமாக, தொழிலதிபர்கள், நிறுவனங்கள், இங்குள்ள பெல் நிறுவனம் என அனைத்துத் தரப்பும் பிரச்சினையில் இருக்கிறது. ஆனால், முதல் 50 இடங்களில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு சாதகமாக இருந்து வருகிறது. சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது என மோடி உரையாற்றினார். |
|||||
by Swathi on 26 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|