பால் பண்ணைகள், சில்லரை வியாபாரக் கடைகள், வங்கிகள், போன்ற பல்வேறு கூட்டுவணிக நிறுவனங்கள் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்குக் கீழ் இயங்கி வருகின்றன. இந்த சங்கத்தின் தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் அச்சங்களின் உறுப்பினர்களால் வாக்களிக்கப்படுவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தப் பல்வேறு அமைப்புகளை நிர்வாகம் செய்வதோடு இதிலும் மற்றும் வணிக நிறுவனங்களிலும் வேலைசெய்யும் பணியாளர்களை நியமிக்கின்ற பொறுப்பு இந்த நிர்வாகிகளுக்கு உள்ளது. மேலும் இது கட்சிகளின் உள்ளூர்க் குட்டித்தலைவர்களுக்கு ஒரு கெளரவப் பிரச்சினை.
எனவே தமிழகத்தில் இப்பதவிகளுக்கான போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும். இப்போட்டியின் மூலம் உண்டாகின்ற பகையால் தாக்குதல்கள், கொலைகள் ஏற்படுவதுண்டு. இதனால்தான், வன்முறை நடைபெறும் என்கிற காரணத்தைச் சுட்டிக்காட்டி ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் 2007 ஆம் ஆண்டு பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் தற்போது அந்தத் தடை நீங்குவதால் வரும் ஏப்ரல் மாதம் 5, ம் தேதி முதல் 12 , 19, 27 ஆகிய தேதிகள் வரை தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. கூட்டுறவு அமைப்புகள் 5 நிலைகளாக பிரிக்கப்பட்டு இந்த தேர்தல் நடத்தப்படும். இதற்கான தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.
இந்த அறிவிப்பு தமிழகக் கட்சிகளிடையே சுறுசுறுப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.
சும்மாவா, ஊர்க்காசாச்சே!
|