வறுமை, நோய், கடன், குடும்பத்தவர்களோடு கருத்து வேறுபாடு, பேராசை, பொறாமை, தனது அல்லது தனது சுற்றத்தாரின் மரணத்தைப் பற்றிய அச்சம். பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் இழப்பு இவற்றால் கவலைப்படுவோர் எண்ணிறந்தோர். வறுமையையும், கடனையும் முயற்சியாலும், சிக்கனச் செயலாலும் தான் தீர்க்க முடியும். நோயைச் செயலொழுக்கம், மருந்துண்ணல் என்பனவற்றால் தான் போக்க முடியும்.
கருத்து வேறுபாடுகளைக் காரணமறிந்து விட்டுக் கொடுத்தும், விளக்கம் கூறி மனநிறைவை ஏற்படுத்தியும் தான் தீர்க்க வேண்டும். பேராசை, பொறாமை என்பனவற்றின் விளைவறிந்து நிறைமனம் பெற்றுத் தான் அவற்றைப் போக்க வேண்டும். பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் இழப்பை முயற்சியாலும் ஒழுக்கத்தாலும் சமுதாய நலத் தொண்டாலும் தான் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய கடமைகளை மறந்து அவை உடனே தானாக தீர்ந்து விட வேண்டுமென்று நினைப்பது அறியாமையே.
|