தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரிய மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கெனவே நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், “தீபாவளி மற்றும் பண்டிகைகளின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இரவு 11.55 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை வெடித்து கொண்டாடலாம்’’ என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், பட்டாசு வெடிப்பது தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்து கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில், புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. காலையில் ஓன்றரை மணிநேரம், மாலையில் ஒன்றரை மணிநேரம் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து உள்ளது.
|