டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் 55 காசுகள் உயர்த்தப்பட்டது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல் விலையை மட்டும் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு சமீபத்தில் ஒப்படைத்தது. மேலும் டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை நிர்ணயிப்பதை மத்திய அரசு தன்வசமே வைத்துகொண்டது.இருப்பினும், டீசல் விலை லிட்டருக்கு ஒன்பது ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் விற்கப்பட்டு வந்ததால், அந்த நஷ்டத்தை ஈடுசெய்யும் பொருட்டு, மாதந்தோறும் 50 காசுகள்வரை டீசல் விலையை உயர்த்திக் கொள்ளும்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்தது.அதன்படி, டீசல் விலை கடந்த ஜனவரி 18–ந்தேதி லிட்டருக்கு 45 காசுகளும், பிப்ரவரி 16–ந்தேதி 45 காசுகளும் உயர்த்தப்பட்டது. அடுத்தபடியாக, கடந்த 16–ந்தேதி டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்தால் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளி வைத்தன.பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு இன்று முதல், ஒரு மாதகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
|