|
|||||
காய்ச்சலுக்கு தாமாக மருந்து வாங்கி பயன்படுத்தக் கூடாது: சுகாதாரச் செயலாளர் அறிவுரை! |
|||||
காய்ச்சலுக்கு தாமாகவே மருந்து வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என சுகாதாரச் செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழும்பூர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனினும், வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புற பகுதிகளை மக்கள் சுத்தம் சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு காய்ச்சல் பரவுதல் பன்மடங்கு குறைவாக இருந்தாலும், அக்டோபர் 1ம் தேதி முதல் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சியில் டெங்கு காய்ச்சல் தாக்கம் உள்ளது. நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உருவாகின்றன. டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. காய்ச்சலுக்கு தாமாக மருந்து வாங்கி பயன்படுத்தக் கூடாது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். டெங்குவைக் கண்டுபிடிக்கும் எலிசா பரிசோதனை வசதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது. பொதுமக்கள் அடிக்கடி கை கழுவினால் நோய் பரவாது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். காய்ச்சல் வந்த 48 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படும். பெரிய கட்டிடங்களில் மொட்டை மாடிகளில் கழிவுகளை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 63 பேர் டெங்குவால் இறந்தனர். இந்த நிலையில், பன்றிக் காய்ச்சலால் தினமும் சராசரியாக 5 பேர் பாதிக்கப்படுகின்றனர். பன்றிக்காய்ச்சல் குறையும்போது தான் பின்விளைவுகள் ஏற்படும். மருத்துவர்களின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|