போலியாக ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்படுத்துவோர் குறித்து தகவல் கொடுப்போருக்கு, ரூ.5,000 வரை பரிசு வழங்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக, இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் விண்ணப்பித்து ஐ.எஸ்.ஐ என்னும் தரச் சான்று பெற்றுக் கொள்வது வழக்கம். ஆனால், முறையான அனுமதி பெறாமல், போலியாக ஐ.எஸ்.ஐ., முத்திரை போட்டு பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க, இந்திய தர நிர்ணய ஆணையம், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்பாடு குறித்து, தகவல் கொடுப்போருக்கு, 5,000 ரூபாய் வரை, பரிசு வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குறித்த புகார்களை 044 - 2254 1442, 2254 1216 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
|