லாகூர் : பாகிஸ்தானின் தேரா காஜி கான் அணுசக்தி மையத்தை, தற்கொலைப்படை தீவிரவாதிகள் தகர்க்கப் போவதாக வெளிவந்த தகவலை அடுத்து, அங்கு ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காஜி கான் அணுசக்தி மையத்தில் யுரேனியம் பிரிப்பு தொழிற்சாலை மற்றும் யுரேனியம் செறிவூட்டல் மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த அணுசக்தி மையத்தை சுற்றிலும் எப்போதும் பாதுகாப்பு இருக்கும். கடந்த மாதம் 16 ஆம் தேதி கம்ரா விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, எல்லா முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தீவிரவாதிகளின் போன் உரையாடல்களை தீவிரமாக ஒட்டுகேட்டு வந்தது. அதில், தேரா காஜி கானில் உள்ள அணுசக்தி மையத்தை தற்கொலைப்படை தாக்குதல் மூலம் தகர்ப்பது என்று தெரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்தது. ஆப்கனில் உள்ள அமெரிக்க படையினருக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
|