'ஆதார்' அடையாள அட்டை, சட்டப்படி செல்லும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில், தேர்தல் கமிஷன் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் திட்டப்படி, குழந்தை முதல் முதியோர் வரை, தனி நபர் ஒவ்வொருவருக்கும், ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 125 கோடி பேருக்கு, ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
அரசின் சில சலுகைத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்களின் கீழ் பயன் பெற, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதால், தேவையற்ற மானிய சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளதாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பஞ்சாயத்து தேர்தல் முதல், லோக்சபா தேர்தல் வரை, தேர்தல் கமிஷனால் நடத்தப்படும் தேர்தல்களில், போலி வாக்காளர்கள் ஓட்ட ளிப்பதை தடுக்க, பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.
மொத்தம், 75 கோடி வாக்காளர்கள் உள்ள நம் நாட்டில், 2015 வரை, 38 கோடி வாக்காளர் அடையாள அட்டையுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. ஆதாருக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவை யில் இருந்ததால், அந்த பணி அப்போது நிறுத்தப் பட்டது.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பின் அவசியம் குறித்து, 2017-ல், தேர்தல் கமிஷன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதார் எண்ணை, எதற்கு பயன் படுத்தலாம், எதற்கு பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஆதார் எண், சட்ட ரீதியில் செல்லும் என தெரிவித்தது.
இதையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மீண்டும் தொடர, தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. இதை கட்டாயம் என்ற வகையில் செய்யாமல், வாக்காளர்களின் விருப்பத்தின் படி, இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து, சட்டவல்லுனர்களுடன், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
|