திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க. ('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான்.
இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் தம் வினைசெய்தற்கண் , தம் நிலைமையொடு பொருந்தாத ஆம்புடைகளை வேற்றரசரிடத்துக் கையாளுவாராயின் , உயர்ந்தோர் அவற்றை நல்லனவென்று ஒப்புக்கொள்ளார் ; எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆதலால் , அவ்வுயர்ந்தோர் இழிவென்று , கருதாதவற்றை எண்ணியறிந்து செய்தல் வேண்டும் .
தம் நிலைமையொடு பொருந்தாத ஆம்புடைகளைச் செய்தலாவது , தாம் வலியாராயிருந்தும் மெலியார் கையாளவேண்டிய இன்சொல் கொடை பிரிப்பைக் கையாளுதலும் , மெலியாராயிருந்தும் வலியார் கையாள வேண்டிய தண்டனையைக் கையாளுதலுமாம் . இவ்விரண்டும் அரசிய லறிவிலார் செயலாதலின் , உலகு கொள்ளாதென்றார் . 'தம்' என்பது ஆகுபொருளது . எள்ளாதன செய்தலாவது இயன்றவரை தமக்கு இழிவும் இழப்பும் முயற்சியு மில்லாதவற்றைச் செய்தல் முந்தின குறளிரண்டும் ஆம்புடை செயப்படுவார் திறத்தையும் , இது அதனைச் செய்வார் திறத்தையும் பற்றியன , 'உலகு' வரையறுத்த இடவாகுபெயர் .
கலைஞர் உரை:
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர்
பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே
செய்திடல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.
Translation
Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.
Explanation
Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.