செம்மை
DATE | TIMINGS |
---|---|
03 May 2015 |
பிரண்டைத் திருவிழா தன்னார்வர்களை அழைக்கிறது!
ஊர்களை இழந்து மாநகரங்களில் தஞ்சமடைந்த சந்ததிக்கான திருவிழா இது. ஊர்த் திருவிழாவில் உணவுப் பொருட்களுக்கான கடைகள், நடனங்கள், காட்சிப் பொருட்கள், நாட்டு வைத்திய அரங்குகள், பலகாரக் கடைகள், காய்கறிக் கடைகள் போன்றவை இருக்குமல்லவா. பிரண்டைத் திருவிழாவிலும் இவை அனைத்தும் உண்டு. இந்த அனைத்துக் கடைகளும் அவற்றின் பொருட்களும் மரபுவழிப்பட்ட உற்பத்தி முறையில் உருவாக்கப்பட்டவையாக இருக்கும்.
விளம்பரங்களில் வரும் ஒரு பொருளும் நம் திருவிழாவில் கிடைக்காது. பெருநிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை இங்கே காண இயலாது.
நமது நலனில் அக்கறை கொண்ட, நம்மைப் போன்ற எளிய மனிதர்களின் தயாரிப்புகளை இத்திருவிழாவில் சந்தைப்படுத்துகிறோம்.
காலை முதல் இரவு வரையிலான தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன. பழங்குடிகளின் நடனங்கள், குழந்தைகளின் பறையாட்டம், பழங்குடிப் பாடல் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் உள்ளிட்டவை அரங்கேறக் காத்திருக்கின்றன.
இப் பணிகளில் உங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினால், ’பிரண்டைத் திருவிழா தன்னார்வராக’ உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
தன்னார்வர்களின் பணிகள்:
1. திருவிழா செய்திகளைச் சக மனிதர்களிடம் எடுத்துச் செல்வதும், அழைப்பதும்.
2. அவரவர் திறன் மற்றும் விருப்பத்திற்கேற்ற பணிகளை மேற்கொள்ளுதல். சான்றாக, ஒளிப்படம், படத் தொகுப்பு தெரிந்தோர், திருவிழாவிற்கான பல காணொளிகளைப் பதிவு செய்து தரலாம். கணினி வரைகலை அறிந்தோர் நமக்கான விளம்பரங்களில் பணியாற்றலாம். இவை தவிர, எந்தப் பணியில் ஈடுபாடு இருப்பினும் அப்பணி நமக்குத் தேவை.
3. நடன நிகழ்ச்சிகளுக்கான குழந்தைகளை அவரவர் பகுதிகளில் ஒருங்கிணைப்பதும், பயிற்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதும்.
4. நிகழ்ச்சிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து விழாப் பணிகளில் ஈடுபடுதல்.
5. இவை தவிர, அவ்வப்போது எழும் தேவைகளுக்கேற்ப இயன்ற பணிகளில் ஈடுபடுதலும் ஒத்துழைப்புகளைச் செய்தலும்.
இது நமது சமூகத்தின் மறுகட்டுமானப் பணி. இழந்தவற்றை மீட்டெடுக்கும் காலம் இது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நமது சமூகத்தை நாமே கட்டுவோம் வாருங்கள்.