ஒரு தமிழ் நாளிதழின்(தினகரன்) செய்தியாளர் மறைவுக்கு இந்தியப் பிரதமரும் தமிழக முதல்வரும் இரங்கல் தெரிவிப்பது இதுதான் முதல் முறை.அவர் உடல், அடக்கத்திற்காக சொந்த ஊரான குடியாத்தம் கொண்டு செல்லப்படும் முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அஞ்சலிக்காக ஒருமணிநேரம் மட்டுமே வைக்கப் பட்டிருந்தபோது , தமிழக போலீஸ் தலைமை இயக்குநர் ஓடோடி வந்து மரியாதை செலுத்தினார்.
இநாட்டையே திரும்பி பார்க்க வைத்த, பத்திரிகையாளர் மோகன் கொண்டிருந்த குணாதிசயங்கள் அசாத்தியமானவை.இத்தனைக்கும் அதிகாரவர்க்கத்துடன் இணங்கிப்போகாதவர். அவருடைய பண்புகளை இளம்பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
எம்.யூ.ஜே எனப்படும் மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸட் அமைப்பின் பொதுச்செயலாளராக நீண்ட காலம் இருந்ததால் எம்யூஜே மோகன் என்று அழைக்கப் பட்டார்.
சுயகவுரவம் அறவே இல்லாதவர்.உழைக்கும் பத்திரிகையாளர்கள் நலனில் பெரிதும் அக்கறை காட்டிவந்தவர். பத்திரிகையாளர்களுக்கு பிரச்சினை என்றால் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து எத்தகைய வல்லமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்து நிற்கும் மாவீரனாகத் திகழ்ந்தார்.
எழும்பூர் கோர்ட்டில் ஒரு பிரமுகர் ஆஜரானபோது, அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த எங்களிடம் ஒரு போதை வக்கீல் சண்டைக்கு வர, அது பெரும் பிரச்சினையாக மாறியது, அடுத்த சில நிமிடங்களில் "சிங்கம்"போல மோகன் அங்கு வந்து ஆற்றிய பங்களிப்பு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.
நக்கீரன் அலுவலகம் சென்னையில் தாக்கப்பட்டபோது , அங்கு சகநண்பர்களுடன்"அரண்"போல நின்று மோகன் செயல்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
ஊழல் எதிர்ப்பு பணிக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தால் துவக்கி வைக்கப்பட்ட "சட்டப்பஞ்சாயத்து இயக்கம்", ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு நிகழ்ச்சியை நடத்த இடம்தேடியது . சென்னையில் யாருமே அரங்கு தர முன்வரவில்லை.மோகன் கவனத்திற்கு இந்த விவகாரத்தை பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கொண்டு சென்றதும்,எம்.யூஜே அலுவலகத்தில் நடத்திக் கொள்ள அனுமதித்தார்.அவரைப் பொருத்தவரை "நாமார்க்கும் குடியல்லேம், நமனே அஞ்சோம்".
"வருமானமோ வேலை பார்க்கும் அலுவலகமோ ஒரு பத்திரிகையாளனை தீர்மானிக்காது.அவனுடைய நேர்மையான குணாதியங்கள் தான் அவனை உயர்த்திப்பிடிக்கும் என்பது அவர்கருத்து.
அத்தகைய குணாதிசயங்களை அவர் கொண்டிருந்ததால் எந்த இடத்திலும் மனதில் பட்டதை அவரால் பேச முடிந்தது.தான் வேலை பார்த்த நிர்வாகத்தைப் கூட கண்டித்துப்பேசினார்.காதில் கிசுகிசுத்த நண்பர்களிடம்,"விளைவு எதுவானாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்"என்றார்.
அவரால் பலன் அடைந்த பத்திரிகையாளர்கள் எண்ணற்றோர்.
கடந்த 5.11.17 அன்று அவருடைய "திடீர்" மறைவு கேட்டு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும்மீண்டு வரமுடியாத நண்பர்கள் நிறையபேர்.அவருடைய நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.அவர் பணிபுரிந்த அலுவலகமும் என் இல்லமும் மயிலாப்பூரில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர், கச்சேரி சாலையில் கம்பீரமாக நடந்து செல்லும் காட்சி என் கண்களில் நிரந்தரப்பதிவாகி விட்டது.
பத்திரிகை உலகிற்கு பெருமை சேர்த்து, உடலால் மறைந்துவிட்ட அருமைநண்பர் மோகனின் புகழ் தமிழ் பத்திரிகை உலகம் உள்ளவரை இருக்கும்.
ஆனால் இவரைப் போன்ற "வணங்காமுடியை நம் பத்திரிகை துறை இனி காண்பதென்பது அரிதினும் அரிது. -ம.வி..ராஜதுரை ( அருமை நண்பர் இரா.மோகன் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று(18.11.17) லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள பெர்ட்ரம் அரங்கில் நடைபெறுகிறது.அனைவரும் பங்கேற்போம்)
|