|
|||||
பண்டிகைக்கால உணவுகளும் ! அதன் மகத்துவமும் ! |
|||||
ஒவ்வொருப் பண்டிகைக்கும் ஒரு உணவுவகை மிகவும் சிறப்பாக செய்யப்படும். உழவுத் தொழிலை செய்துவரும் மக்கள், தினமும் நல்ல உணவுவகைகளை செய்வது என்பது இயலாத காரியம். காரணம் மிகவும் அதிகாலையிலேயே அவர்கள் விவசாயம் செய்வதற்காக செல்ல வேண்டிவரும். அத்தகையோர் பண்டிகை நாட்களில் நல்ல அறுசுவை உணவினை செய்து படையலிட்டு உண்ண வேண்டும் என்பதற்காகவே பண்டிகைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் உண்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் உறவினர், நண்பர்கள மற்றும் ஏழை எளியவர்களுக்கும் அந்த உணவினைப் பகிர்ந்து உண்பதன்மூலம் அனைவருக்கும் பகிர்ந்துண்டு வாழ்வதையும் நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.
மேலும் நம்முடைய உணவில் அறுசுவையும் இணைந்திருக்க வேண்டும். தற்காலத்தில் அதிகமாக இருக்கும் நம்முடைய உடல்நலக் கோளாறுகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் நாம் கசப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை அறவே ஒதுக்கி விடுகிறோம். பண்டிகை நாட்களிலாவது அந்த சுவைகளை கடவுளின் பெயரால் சாப்பிடுவதன்மூலம் நமக்கு நன்மை ஏற்படும்.
உகாதி பச்சடி
தெலுங்கு வருடப்பிறப்பு அன்று அறுசுவையை தங்கள் உணவில் சேர்ப்பார்கள். முக்கியமாக அவர்கள் செய்யும் உகாதி பச்சடியில் வேப்பம்ப+, மாங்காய், புளி, வெல்லம் உள்பட அறுசுவையும் சேர்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனியான உணவுகள் தயாரிக்கப்படுகின்றது. கசப்பு சுவைக்கு வேப்பம்ப+ ரசம், இனிப்பு மற்றும் புளிப்பிற்கு மாங்காய் பச்சடி, துவர்ப்பிற்கு கோவைக்காய் கடலைக் கூட்டு போன்றவை அவர்கள் உணவில் இடம்பெறும்.
மேலும் இதே வருடப்பிறப்பில் அவர்கள் ‘முக்கல புலுசு’ என்ற ஒரு குழம்பை செய்கிறார்கள். நம்மூரின் சாம்பார் போன்றே இருக்கும் இதிலும் அறுசுவைகளும் சேர்க்கப்படுகின்றன.
ஓணத்திருநாள்
கேரளப் பண்டிகையான ஓணத்திருநாளில் தங்கள் வீட்டிற்கு வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றும் பொருட்டு, பலவிதமான உணவுப் பொருட்களை செய்து அவருக்கு படையலிட்டு, விருந்தினர்களுக்கும் கொடுப்பார்கள். மூன்று வகை பிரதமன் (பாயசம்), அவியல், காலம், ஓலன், தோரன், மோர்க்கறி, கூட்டுக்கறி, நேந்திரன் சிப்ஸ் (இனிப்பு, உப்பு), பப்படம் என இலை முழுவதும் உணவை வைத்து, உண்டு களித்து மகிழும் தன்னுடைய குடிமக்களைப் பார்த்து, மகாபலி, மன நிறைவுடன் திரும்புவான் என்பது ஐதீகம்.
அவர்கள் படைக்கும் இந்த விருந்துக்கு ;ஓணசத்ய’ என்று பெயர். இதில் அறுசுவையில் கசப்புத் தவிர்த்த சுவைகளில் உணவைத் தயாரிக்கிறார்கள். பலவகையாக காய்கறிகளைக் கொண்டு அவியல் பொறியல், பாயாசம் முதலியவை தயாரிக்கப் படுவதால், வயிறு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த விருந்தில் ‘இஞ்சிக்கறி’ என்ற பொருள் கண்டிப்பாக இடம்பெறும். இது ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இஞ்சிப்புளி, இஞ்சித்தயிர் ஆகியவையும் ஜீரணத்திற்கான உணவுகளே. இவர்கள் உணவில் பெரும்பாலும் தேங்காயும், தயிரும் அதிக அளவில் இடம்பெறுகிறது. ஒரு காலத்தில் இந்த விருந்தில் ஒன்பது வகை ஊறுகாய்கள் இடம் பெற்றனவாம். தற்பொழுது அது மூன்றாக சுருங்கிவிட்டது.
கார்த்திகை வடை
இந்த வடைக்கு தனியாக பெயர் ஏதும் இல்லை. பொதுவாக கார்த்திகை தினத்தன்று இந்த வடை செய்யப்படுவதால் கார்த்திகை வடை என்றே கூறப்படுகிறது. மேலும் கார்த்திகைத் திருநாளில் பால் அப்பம் மற்றும் நெல் பெரி உருண்டை ஆகியவையும் செய்யப்படுகிறது.
நவராத்திரி
நவராத்திரியின்போது கொலு வைக்கப்பட்டு தினமும் மாலை வேளையில் பலவித பட்சணங்கள் செய்யப்படுகின்றன. அவற்றுள் ஹயக்கரீவா, கொத்துக்கடலை சுண்டல் மற்றும் அரிசிப்புட்டு ஆகியவை முக்கியமானவை.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் கேக்குகள் தான் நினைவுக்கு வரும். கடைகளில் விதவிதமான சுவைகளில் இந்த கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். சிலர் வீட்டிலேயே இந்தக் கேக்குகளை செய்கின்றனர். மேலும் பலவிதமான பிஸ்கெட் வகைகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அதிகமாக செய்யப்படும்.
தீபாவளி என்றாலே இனிப்புதான்
தீபாவளி என்றாலே நமது வீடுகளில் அதிகப்படியான இனிப்புகள் செய்யப்படும். அதிரசம் மற்றும் முறுக்கு தீபாவளிப் பண்டிகையில் முக்கிய அம்சம் வகிக்கும். இதைத் தவிர்த்து, அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல மற்ற இனிப்பு வகைகளும் செய்யப்படும். தீபாவளியன்று நிறைய பலகாரங்களை சாப்பிடுவதால் ஜீரணக் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க ‘தீபாவளி லேகியம’; கொடுக்கப்படும். முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தின்பண்டங்களை செய்யத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் கடைகளில் வாங்கி வந்து தீபாவளிக் கொண்டாடப்படுகிறது.
பிள்ளையார் சதுர்த்தி
பிள்ளையார் சதுர்த்தி என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ‘மோதகம்’ என்று அழைக்கப்படும் கொழுக்கட்டைதான். அரைவட்ட வடிவில் செய்யப்படுவதை கொழுக்கட்டை என்றும், உருண்டையாக மேல்புறத்தில் சற்று குவித்து செய்யப்படுவதை மோதகம் என்றும் குறிப்பிடுவார்கள். இந்த வழக்கம் தென்னிந்தியாவில் வழக்கில் உள்ளது. வட இந்தியாவில் லட்டு செய்து படைப்பார்கள்.
எள் கொழுக்கட்டை சனி தோஷத்தையும், உளுந்துக் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியில் இருக்கும் அரிசி மாவு குரு, சுக்கிர பலன்களையும் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது.
_ சூர்யா சரவணன் |
|||||
by Swathi on 30 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|