LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

ஐந்தாம் திருமுறை இரண்டாம் பகுதி


5.51 திருப்பாலைத்துறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

510    நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே.     5.51.1
511     கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே.     5.51.2
512     மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னாரவர் பாலைத் துறையரே.     5.51.3
513     நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே
ஆடி னாரழ காகிய நான்மறை
பாடி னாரவர் பாலைத் துறையரே.     5.51.4
514     சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்த னேநமை யாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.     5.51.5
515     விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே.     5.51.6
516     குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.     5.51.7
517    தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
தடரும் போதர னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே.     5.51.8
518    மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியற்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.     5.51.9
519    வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற் கரியவர்
பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே.     5.51.10
520    உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாவருள் செய்தபா லைத்துறைக்
கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே.     5.51.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாலைவனநாதர், தேவியார் - தவளவெண்ணகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.52 திருநாகேச்சரம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

521     நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.     5.52.1
522    நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.     5.52.2
523    ஓத மார்கட லின்விட முண்டவர்
ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம்
மாதோர் கூறர் மழுவல னேந்திய
நாதர் போல்திரு நாகேச் சரவரே.     5.52.3
524    சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.     5.52.4
525    பண்டோ ர் நாளிகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத்
தண்ட மாவிதா தாவின் றலைகொண்ட
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.     5.52.5
526    வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர் போல்திரு நாகேச் சரவரே.     5.52.6
527    மானை யேந்திய கையினர் மையறு
ஞானச் சோதியர் தியர் நாமந்தான்
ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்குந்
தேனர் போல்திரு நாகேச் சரவரே.     5.52.7
528    கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி
அழகர் ஆல்நிழற் கீழற மோதிய
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.     5.52.8
529    வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.     5.52.9
530    தூர்த்தன் றோண்முடி தாளுந் தொலையவே
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல்
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடுந்
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.     5.52.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.53 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

531     கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங்
காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.1
532    பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
அண்ண லையம ரர்தொழு மாதியைச்
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம்
நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.2
533    உற்ற வர்தம் உறுநோய் களைபவர்
பெற்ற மேறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங்
கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.13
534    முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங்
கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.4
535    பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன்
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங்
கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.5
536    வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்
கொண்டான் கோல மதியோ டரவமும்
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.6
537    அரையார் கோவண ஆடைய னாறெலாந்
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற்
கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.7
538    நீறு டைத்தடந் தோளுடை நின்மலன்
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங்
கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.8
539    செங்கண் மால்விடை யேறிய செல்வனார்
பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர்
அங்கண் ஞாலம தாகிய வீரட்டங்
கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.9
540    பூணா ணாரம் பொருந்த வுடையவர்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற்
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.10
541    வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந்
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.11
542    உலந்தார் வெண்டலை உண்கல னாகவே
வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச்
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.     5.53.12

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப



5.54 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

543    எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமாற்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி சேரு மவருக்கே.     5.54.1
544     நீள மாநினைந் தெண்மலர் இட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே.     5.54.2
545    கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண்
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.     5.54.3
546    பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.     5.54.4
547    தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே.     5.54.5
548    ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.     5.54.6
549    உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.     5.54.7
550    ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற்
காலை யேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.     5.54.8
551    தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற்
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.     5.54.9
552    அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே.     5.54.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.55 திருநாரையூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்


553     வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே.     5.55.1
554    புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.     5.55.2

555    வேடு தங்கிய வேடமும் வெண்டலை
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.     5.55.3
556    கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்
கக்கி னாரமும் அம்ம அழகிதே.     5.55.4
557    வடிகொள் வெண்மழு மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம அழகிதே.     5.55.5
558    சூல மல்கிய கையுஞ் சுடரொடு
பாலு நெய்தயி ராடிய பான்மையும்
ஞால மல்கிய நாரையூர் நம்பனுக்
கால நீழலும் அம்ம அழகிதே.     5.55.6
559    பண்ணி னான்மறை பாடலொ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.     5.55.7
560    என்பு பூண்டெரு தேறி இளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது அம்ம அழகிதே.     5.55.8
561    முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுவான்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்
கரவும் பூணுதல் அம்ம அழகிதே.     5.55.9
562    கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.     5.55.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசுவரர், தேவியார் - திருபுரசுந்தரநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.56 திருக்கோளிலி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

563    மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.     5.56.1
564    முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனைக்
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் மல்லலே.     5.56.2
565    வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர்
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக்
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.     5.56.3
566    பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவுங் கங்கையுந் திங்களும் ஒண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.     5.56.4
567    அல்ல லாயின தீரும் அழகிய
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.     5.56.5
568    ஆவின் பால்கண் டளவில் அருந்தவப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.     5.56.6
569    சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற்
கூத்த னாருறை யுந்திருக் கோளிலி
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.     5.56.7
570    மால தாகி மயங்கு மனிதர்காள்
காலம் வந்து கடைமுடி யாமுனங்
கோல வார்பொழிற் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.     5.56.8
571    கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது
தேடி நீர்திரி யாதே சிவகதி
கூட லாந்திருக் கோளிலி ஈசனைப்
பாடு மின்னிர வோடு பகலுமே.     5.56.8
572    மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னும் இரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.     5.56.9
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலிநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

5. 57 திருக்கோளிலி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

573    முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேயடி யேனை மறவலே.     5.57.1
574    விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப்
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.     5.57.2
575    நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே
கோளி லியரன் பாதமே கூறுமே.     5.57.3
576    விழவி னோசை ஒலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப் பாதமே கூறுமே.     5.57.4
577    மூல மாகிய மூவர்க்கு மூர்த்தியைக்
கால னாகிய காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன் பாதந் தொழுமினே.     5.57.5
578    காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
ணீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.     5.57.6
579    வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.     5.57.7
580    நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினை
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.     5.57.8
581    மாலும் நான்முக னாலும் அறிவொணாப்
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.     5.57.9
582    அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற்
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.     5.57.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.58 திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

583     தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.     5.58.1
584    மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை
தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக்
காக்கி னானணி யாறை வடதளி
நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே.     5.58.2

585    குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில்
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை
அண்ட ரைப்பழை யாறை வடதளிக்
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.     5.58.3
586    முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப்
படைய ரைப்பழை யாறை வடதளி
உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே.     5.58.4
587    ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங்
கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை
அள்ள லம்புன லாறை வடதளி
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.     5.58.5
588    நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.     5.58.6
589    திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை
அருட்டி றத்தணி யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.     5.58.7
590    ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
*வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே.
* வேது என்பது - வெப்பம்.     5.58.8
591    வாயி ருந்தமி ழேபடித் தாளுறா
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்
பாயி ரும்புன லாறை வடதளி
மேய வன்னென வல்வினை வீடுமே.     5.58.9
592    செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.     5.58.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமேசுவரர், தேவியார் - சோமகலாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.59 திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

593     பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே.     5.59.1
594    ஆலத் தார்நிழ லில்லறம் நால்வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்றொழு வார்க்கிட ரில்லையே.     5.59.2
595    துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.     5.59.3
596    தீத வைசெய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே.     5.59.4
597    வார்கொள் மென்முலை மங்கையோர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.     5.59.5
598    பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே.     5.59.6
599    மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரைத்
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக் கில்லை துயரமே.     5.59.7
600    முன்ன வனுல குக்கு முழுமணிப்
பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை யாளுடை யார்களே.     5.59.8
601    வேட னாய்விச யன்னொடும் எய்துவெங்
காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.     5.59.9
602    கருத்த னாய்க்கயி லாய மலைதனைத்
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே.     5.59.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.60 திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

603    ஏது மொன்று மறிவில ராயினும்
ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்
பேத மின்றி அவரவர் உள்ளத்தே
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.     5.60.1
604    அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே.     5.60.2
605    சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.     5.60.3
606    இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.     5.60.4
607    சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற்
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.     5.60.5
608    ஈட்டு மாநிதி சால இழக்கினும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.     5.60.6
609    ஐய னேயர னேயென் றரற்றினால்
உய்ய லாமுல கத்தவர் பேணுவர்
செய்ய பாத மிரண்டும் நினையவே
வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே.     5.60.7
    இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     5.60.8-9

610    உந்திச் சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே.     5.60.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.61 திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

611     முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.     5.61.1
612    பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.     5.61.2
613    அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.     5.61.3
614    வேத னைமிகு வீணையின் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை
நாத னைந்நினைந் தென்மனம் நையுமே.     5.61.4
615    அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.     5.61.5
616    பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப்
பூம்பு னலும்பொ திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ்
சாம்பல் என்பு தனக்கணி யாகுமே.     5.61.6
617    கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.     5.61.7
618    காற்றி னுங்கடி தாகி நடப்பதோர்
ஏற்றி னும்மிசைந் தேறுவர் என்பொடு
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப்
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.     5.61.8
619    முன்னு முப்புரஞ் செற்றன ராயினும்
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம்
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.     5.61.9
620    செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங்
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.     5.61.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசுவைத்தநாதர், தேவியார் - அழகாம்பிகை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.62 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

621     ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர்
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய
திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.     5.62.1
622    யாவ ருமறி தற்கரி யான்றனை
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை
நாவின் நல்லுரை யாகிய நாதனைத்
தேவனைப் புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.     5.62.2
623    அன்ப னையடி யாரிடர் நீக்கியைச்
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே
கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.     5.62.3
624    மாத னத்தைமா தேவனை மாறிலாக்
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக்
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.     5.62.4
625    குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட்
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக்
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண் டருவினை யற்றேனே.     5.62.5
626    பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட
மைந்த னைம்மண வாளனை மாமலர்க்
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.     5.62.6
627    உம்ப ரானை உருத்திர மூர்த்தியை
அம்ப ரானை அமலனை ஆதியைக்
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.     5.62.7
628    மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனைப்
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேயென இன்பம தாயிற்றே.     5.62.8
629    இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட்
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே.     5.62.9
630    அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட்
டிரக்க மாகி அருள்புரி யீசனைத்
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே.     5.62.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்ணபுரீசுவரர், தேவியார் - சொர்ணபுரிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

5.63 திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

631     இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப்
புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே.     5.63.1
632    முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர் சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே.     5.63.2
633    குளிர்பு னற்குரங் காடு துறையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.     5.63.3
634    மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங் காடு துறைதனில்
அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே.     5.63.4
635    ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன்
காலத் தானுயிர் போக்கிய காலினன்
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங் காடு துறையனே.     5.63.5
636    ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங்
கூட்டி னான்குரங் காடு துறையனே.     5.63.6
637    மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை
ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண்
போத்தன் றானவள் பொங்கு சினந்தணி
கூத்தன் றான்குரங் காடு துறையனே.     5.63.7
638    நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்னழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடங்
கூடு மின்குரங் காடு துறையையே.     5.63.8
639    தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற வந்தக னையயிற் சூலத்தாற்
கொன்ற வன்குரங் காடு துறையனே.     5.63.9
640    நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநற்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே.     5.63.10
641    கடுத்த தேரரக் கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே.     5.63.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பவளக்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.64 திருக்கோழம்பம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

642     வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய்
ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள்
கோழம் பத்துறை கூத்தன் குரைகழற்
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.     5.64.1
643    கயிலை நன்மலை யாளுங் கபாலியை
மயிலி யன்மலை மாதின் மணாளனைக்
குயில்ப யில்பொழிற் கோழம்ப மேயவென்
உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே.     5.64.2
644    வாழும் பான்மைய ராகிய வான்செல்வந்
தாழும் பான்மைய ராகித்தம் வாயினால்
தாழம் பூமணம் நாறிய தாழ்பொழிற்
கோழம் பாவெனக் கூடிய செல்வமே.     5.64.3
645    பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தலர் கோழம்பத் துண்மகிழ்ந்
தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே.     5.64.4
646    தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்
பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன்
குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான்
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே.     5.64.5
647    நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம்
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற்
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண்
டாதி பாத மடையவல் லார்களே.     5.64.6
648    முன்னை நான்செய்த பாவ முதலறப்
பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும்
அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர்
பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே.     5.64.7
649    ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண்
கோழை மாரொடுங் கூடிய குற்றமாங்
கூழை பாய்வயற் கோழம்பத் தானடி
ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே.     5.64.8
650    அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக்
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத்
துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே.     5.64.9
651    சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்ப மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே.     5.64.10

652    துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப்
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென்
றிட்ட கீத மிசைத்த அரக்கனே.     5.64.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோகுலேசுவரர், தேவியார் - சவுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.65 திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

653    பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான்
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.     5.65.1
654    என்ன னென்மனை எந்தையெ னாருயிர்
தன்னன் றன்னடி யேன்றனமாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே.     5.65.2
655    குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.     5.65.3
656    ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.     5.65.4
657    புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே.     5.65.5
658    அனுச யப்பட்ட துவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரிற்றலை யான மனிதரே.     5.65.6
659    ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.     5.65.7
660    பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.     5.65.8
661    ஏவ மேது மிலாவம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.     5.65.9
662    நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே.     5.65.10

663    மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.     5.65.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர் தேவியார் - கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.66 திருவலஞ்சுழி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

664    ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.     5.66.1
665    கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப்
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.     5.66.2
666    இளைய காலமெம் மானை யடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.     5.66.3
667    நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவ னையினி என்றுகொல் காண்பதே.     5.66.4
668    விண்ட வர்புர மூன்று மெரிகொளத்
திண்டி றற்சிலை யாலெரி செய்தவன்
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.     5.66.5
669    படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே.     5.66.6
670     நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.     5.66.7
671    தேடு வார்பிர மன்திரு மாலவர்
ஆடு பாத மவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி யீசனைத்
தேடு வானுறு கின்றதென் சிந்தையே.     5.66.8
672    கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்
வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.     5.66.9
673    இலங்கை வேந்தன் இருபது தோளிற
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே.     5.66.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலஞ்சுழிநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.67 திருவாஞ்சியம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

674    படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.     5.67.1
675    பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.     5.67.2
676    புற்றி லாடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர் பிரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.     5.67.3
677    அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியந்
தங்கு வார்நம் மமரர்க் கமரரே.     5.67.4
678    நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியந்
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.     5.67.5
679    அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை யாவான் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.     5.67.6
680    அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.     5.67.7
    இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     5.67.8-10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர், தேவியார் - வாழவந்தஅம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.68 திருநள்ளாறு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

681    உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாவென நம்வினை நாசமே.     5.68.1
682    ஆர ணப்பொரு ளாமரு ளாளனார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை ஞானக் கடவுளே.     5.68.2
683    மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத்தொட் டானவன்
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.     5.68.3
684    மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.     5.68.4
685    உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன்
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.     5.68.5
686    செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரமருள் செய்த சதுரரே.     5.68.6
687    வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.     5.68.7
688    அல்ல னென்று மலர்க்கரு ளாயின
சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்
வல்ல னென்றும்வல் லார்வள மிக்கவர்
நல்ல னென்றுநல் லார்க்குநள் ளாறனே.     5.68.8
689    பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனுந்
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.     5.68.9
690    இலங்கை மன்னன் இருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.     5.68.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருநள்ளாற்றீசர், தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.69 திருக்கருவிலி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

691    மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.     5.69.1
692    ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.     5.69.2
693    பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.     5.69.3
694    வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.     5.69.4
695    உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்
கையி னானுறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.     5.69.5
696    ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.     5.69.6
697    நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.     5.69.7
698    பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக்
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.     5.69.8
699    நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.     5.69.9
700    பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.     5.69.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணநாதர், தேவியார் - சர்வாங்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.70 திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

701     கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணு மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.     5.70.1
702    சுற்ற முந்துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர்
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.     5.70.2
703    மாடு தானது வில்லெனின் மானிடர்
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத் திருத்துமே.     5.70.3
704    தந்தை தாயொடு தார மெனுந்தளைப்
பந்த மாங்கறுத் துப்பயில் வெய்திய
கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச்
சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே.     5.70.4
705    கேளு மின்னிள மையது கேடுவந்
தீளை யோடிரு மல்லது வெய்தன்முன்
கோள ராவணி கொண்டீச் சுரவனை
நாளு மேத்தித் தொழுமின்நன் காகுமே.     5.70.5
706    வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.     5.70.6
707    அல்ல லோடரு நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரற்
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே.     5.70.7
708    நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறி லாமலை மங்கையோர் பாகமாக்
கூற னாருறை கொண்டீச் சுரநினைந்
தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.     5.70.8
709    அயிலார் அம்பெரி மேருவில் லாகவே
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.     5.70.9
710    நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழிற் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.     5.70.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.71 திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

711    குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.     5.71.1
712    ஆதி நாதன் அடல்விடை மேலமர்
பூத நாதன் புலியத ளாடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.     5.71.2
713    கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற உருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.     5.71.3
714    திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்
அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.     5.71.4
715    பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே.     5.71.5
716    கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென் பாருக்குத் தென்றிசை
எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே.     5.71.6
717    கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.     5.71.7
718    பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையாற்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே.     5.71.8
719    வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே.     5.71.9
720    இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்கள் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.     5.72.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விசையநாதேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.72 திருநீலக்குடி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

721     வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.     5.72.1
722    செய்ய மேனியன் றேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங்
கையி லாமல கக்கனி யொக்குமே.     5.72.2
723    ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.     5.72.3
724    நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே.     5.72.4
725    நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.     5.72.5
726    கொன்றை சூடியைக் குன்ற மகளொடு
நின்ற நீலக் குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.     5.72.6
727    கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.     5.72.7
728    அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.     5.72.8
729    கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.     5.72.9
730    தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கோர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தனன் என்பரே.     5.72.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர், தேவியார் - நீலநிறவுமையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.73 திருமங்கலக்குடி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

731     தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே.     5.73.1
732    காவி ரியின்வ டகரைக் காண்டகு
மாவி ரியும்பொ ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி ரமனுந் தேடொணாத்
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.     5.73.2
733    மங்க லக்குடி ஈசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.     5.73.3
734    மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடி
நஞ்ச மாரமு தாக நயந்துகொண்
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.     5.73.4
735    செல்வ மல்கு திருமங் கலக்குடிச்
செல்வ மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வ மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே.     5.73.5
736    மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் றன்பெயர்
உன்னு வாரு முரைக்கவல் லார்களுந்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.     5.73.6
737    மாத ரார்மரு வும்மங்க லக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.     5.73.7
738    வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.     5.73.8
739    கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேச மேது மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங்க லக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.     5.73.9
740    மங்க லக்குடி யான்கயி லைமலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.     5.73.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிராணேசவரதர், தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.74 திருஎறும்பியூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

741    விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.     5.74.1
742    பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.     5.74.2
743    மருந்து வானவர் தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.     5.74.3
744    நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.     5.74.4
745    நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.     5.74.5
746    கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.     5.74.6
747    மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.     5.74.7
748    இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட னேவைத்த சோதியான்
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகும் எறும்பியூ ரீசனே.     5.74.8
749    கண்ணி றைந்த கனபவ ளத்திரள்
விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உண்ணி றைந்துரு வாயுயி ராயவன்
எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே.     5.74.9
750    நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே.     5.74.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எறும்பீசுவரர்,
தேவியார் - நறுங்குழல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.75 திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

751     மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.     5.75.1
752    கட்டா றேகழி காவிரி பாய்வயல்
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா
முட்டா றாவடி யேத்த முயல்பவர்க்
கிட்டா றாவிட ரோட எடுக்குமே.     5.75.2
753    கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.     5.75.3
754    மிக்க னைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்க னைநவில் வார்வினை நாசமே.     5.75.4
755    விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா
இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.     5.75.5
756    மேலை வானவ ரோடு விரிகடல்
மாலும் நான்முக னாலுமளப் பொணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்
பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.     5.75.6
757    ஆல நீழ லமர்ந்த அழகனார்
கால னையுதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்
பால ருக்கருள் செய்வர் பரிவொடே.     5.75.7
758    செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்க ரையரெம் மாதிபு ராணனார்
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.     5.75.8
759    உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர்
கரிய கண்டன் கழலடி தன்னையே
குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.     5.75.9
760    இரக்க மின்றி மலையெடுத் தான்முடி
உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங்
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா
வரத்த னைப்பெற வானுல காள்வரே.     5.75.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொந்தளக்கருணைநாதர், தேவியார் - கொந்தளநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.76 திருக்கானூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

761    திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்
கருவ னாகி முளைத்தவன் கானூரிற்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.     5.76.1
762    பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள்
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்
புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே.     5.76.2
763    தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன் கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.     5.76.3
764    குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே.     5.76.4
765    பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்
அத்தன் பாத மடைதல் கருமமே.     5.76.5
766    கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்
செல்வ மல்கு திருக்கானூ ரீசனை
எல்லி யும்பக லும்மிசை வானவர்
சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே.     5.76.6
767    நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங்
காரு மாருதங் கானூர் முளைத்தவன்
சேர்வு மொன்றறி யாது திசைதிசை
ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே.     5.76.7
768    ஓமத் தோடயன் மாலறி யாவணம்
வீமப் பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.     5.76.8
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     5.76.9
769    வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை
உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.     5.76.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.77 திருச்சேறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

770     பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்
கூரி தாய அறிவுகை கூடிடுஞ்
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன் நாமம் நவிலவே.     5.77.1
771    என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.     5.77.2
772    பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.     5.77.3
773    மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே.     5.77.4
774    எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.     5.77.5
775    தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.     5.77.6
776    வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.     5.77.7
777    குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.     5.77.8
778    பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.     5.77.9
779    பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.     5.77.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செந்நெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.78 திருக்கோடிகா - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

780     சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
எங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே.     5.78.1
781    வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங்
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.     5.78.2
782    முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.     5.78.3
783    நாவ ளம்பெறு மாறும னன்னுதல்
ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற்
கோம ளஞ்சடைக் கோடிகா வாவென
ஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே.     5.78.4
784    வீறு தான்பெறு வார்சில ராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற்
கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால்
ஏறு வேனும்மால் ஏசப் படுவனோ.     5.78.5
785    நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி யேசற வுந்தெரி யாததோர்
கோடி காவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலிற் பட்டுக் கழியுமே.     5.78.6
    இப்பதிகத்தில் 7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     5.78.7-9
- 786    வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென
இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே.     5.78.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.79 திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

787     வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.     5.79.1
788    மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லிரேற் புள்ளிருக் குவேளூர்
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.     5.79.2
789    அரும றையனை ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர்
உருகி நைபவர் உள்ளங் குளிருமே.     5.79.3
790    தன்னு ருவை யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக் குவேளூர்
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.     5.79.4
791    செங்கண் மால்பிர மற்கு மறிவொணா
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர்
பொங்க ரவனைப் புள்ளிருக் குவேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.     5.79.5
792    குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.     5.79.6
793    கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்
பொய்யி லாவரன் புள்ளிருக் குவேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.     5.79.7
794    உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.     5.79.8
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     5.79.9
795    அரக்க னார்தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர்
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே.     5.79.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வைத்தியநாதர், தேவியார் - தையல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.80 திருஅன்பில்ஆலந்துறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

796    வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக்
கோனெஞ் செல்வனைக் கூறிடக் கிற்றியே.     5.80.1
797    கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறை
நார ணற்கரி யானொரு நம்பியே.     5.80.2
798    அன்பினா னஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்
அன்பி லானையம் மானையள் ளூறிய
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.     5.80.3
799    சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை
பங்க னாரடி பாவியே னானுய
அங்க ணனெந்தை அன்பிலா லந்துறைச்
செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.     5.80.4
800    கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்க ரையினர் அன்பிலா லந்துறை
நக்கு ருவரும் நம்மை யறிவரே.     5.80.5
801    வெள்ள முள்ள விரிசடை நந்தியைக்
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வயல் அன்பிலா லந்துறை
உள்ள வாறறி யார்சிலர் ஊமரே.     5.80.6
802    பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை
மறவா தேதொழு தேத்தி வணங்குமே.     5.80.7
803    நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.     5.80.8
804    பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக்
கையன் மாருரை கேளா தெழுமினோ
ஐயன் எம்பிரான் அன்பிலா லந்துறை
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.     5.80.9
805    இலங்கை வேந்தன் இருபது தோளிற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பிலா லந்துறை
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.     5.80.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.81 திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

806    சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.     5.81.1
807    பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவன் எம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.     5.81.2
808    ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனும் இத்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.     5.81.3
809    தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.     5.81.4
810    நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டுமிது கைகண்ட யோகமே.     5.81.5
    இப்பதிகத்தில் 6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     5.81.6-10

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.82 திருவான்மியூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

811    விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.     5.82.1
812    பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.     5.82.2
813    மந்த மாகிய சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத் தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.     5.82.3
814    உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள முமர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.     5.82.4
815    படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.     5.82.5
816    நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.     5.82.6
817    நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.     5.82.7
818    ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.     5.82.8
819    ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.     5.82.9
820    பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே.     5.82.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.83 திருநாகைக்காரோணம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

821     பாணத் தான்மதில் மூன்று மெரித்தவன்
பூணத் தானர வாமை பொறுத்தவன்
காணத் தானினி யான்கடல் நாகைக்கா
ரோணத் தானென நம்வினை ஓயுமே.     5.83.1
822    வண்ட லம்பிய வார்சடை ஈசனை
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை யான கழலுமே.     5.83.2
823    புனையு மாமலர் கொண்டு புரிசடை
நனையு மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
நினைய வேவினை யாயின நீங்குமே.     5.83.3
824    கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநட மாடும் இறைவனைக்
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை யானவை சோருமே.     5.83.4
825    மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.     5.83.5
826    அலங்கல் சேர்சடை ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.     5.83.6
827    சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவ ரேத்திய ஈசனைக்
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.     5.83.7
828    அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந்
தெந்தை யீசனென் றேத்தும் இறைவனைக்
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.     5.83.8
829    கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழத் தீவினை தீருமே.     5.83.9
830    கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன்
வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை
அடர வூன்றிய பாதம் அணைதரத்
தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே.     5.83.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.84 திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

831    மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது
ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங்
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.     5.84.1
832    மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.     5.84.2
833    தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.     5.84.3
834    அருத்த முமனை யாளொடு மக்களும்
பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங்
கருத்தன் கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித்
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.     5.84.4
835    சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்
அற்ற போதணை யாரவ ரென்றென்றே
கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்
பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.     5.84.5
836    அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.     5.84.6
837    மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்
ஐயன் றன்னடி யேயடைந் துய்மினே.     5.84.7
838    வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே.     5.84.8
839    இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள்
ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.     5.84.9
840    எண்ணி லாவரக் கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர் தம்வினை நாசமே.     5.84.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியசுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.85 திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

841     மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.     5.85.1
842    அரிய யன்றலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்றொழ அங்கிருப் பார்களே.     5.85.2
843    அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.     5.85.3
844    தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே.     5.85.4
    இப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     5.85.5-10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.86 திருவாட்போக்கி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

845     கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.     5.86.1
846    விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே.     5.86.2
847    வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரகத் திடாமுனம்
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.     5.86.3
848    கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற்
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே
ஆற்ற வுமருள் செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.     5.86.4
849    மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்
கூறி யூறி உருகுமென் னுள்ளமே.     5.86.5
850    கான மோடிக் கடிதெழு தூதுவர்
தான மோடு தலைபிடி யாமுனம்
ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார்
ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.     5.86.6
851    பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார்
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.     5.86.7
852    நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.     5.86.8
853    கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க்
கிட்ட மாகி யிணையடி யேத்துமே.     5.86.9
854    இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.     5.86.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இரத்தினகிரீசுவரர், தேவியார் - சுரும்பார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.87 திருமணஞ்சேரி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

855     பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ்
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.     5.87.1
856    துன்னு வார்குழ லாளுமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின ஓயுமே.     5.87.2
857    புற்றி லாடர வாட்டும் புனிதனார்
தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.     5.87.3
858    மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை
முத்தர் முக்குணர் மூசர வம்மணி
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம்
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.     5.87.4
859    துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்
அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம்
வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே.     5.87.5
860    நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர்ப ரந்த உரகம் அணிபவர்
சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்
ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.     5.87.6
861    சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார்
விண்ணத் தம்மதி சூடிய வேதியர்
மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார்
வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.     5.87.7

862    துன்ன வாடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.     5.87.8
863    சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் தேரமண் கையர் புகழவே
மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்
அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.     5.87.9
864    கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்த வனெடு நீண்முடி பத்திறப்
படுத்த லுமணஞ் சேரி யருளெனக்
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.     5.87.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருள்வள்ளல்நாயகர், தேவியார் - யாழின்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.88 திருமருகல் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

865    பெருக லாந்தவம் பேதைமை தீரலாந்
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோ ரானந்தம்
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.     5.88.1
866    பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.     5.88.2
867    சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம்
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே.     5.88.3
868    ஓது பைங்கிளிக் கொண்பால் அமுதூட்டிப்
பாது காத்துப் பலபல கற்பித்து
மாது தான்மரு கற்பெரு மானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.     5.88.4
869    இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம்
உன்னி யொண்கொடி உள்ள முருகுமே.     5.88.5
870    சங்கு சோரக் கலையுஞ் சரியவே
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும்
அங்க வீதி அருகணை யாநிற்கும்
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.     5.88.6
871    காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.     5.88.7
872    நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
மாட நீண்மரு கற்பெரு மான்வரிற்
கூடு நீயென்று கூட லிழைக்குமே.     5.88.8
873    கந்த வார்குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.     5.88.9
874    ஆதி மாமலை அன்றெடுத் தானிற்றுச்
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.     5.88.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுவரர், தேவியார் - வண்டுவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.89 தனி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

875    ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை யோடு முடுத்தது
ஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தே
ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.     5.89.1
876    இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில்
இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள்
இரண்டு மில்லிள மானெமை யாளுகந்
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.     5.89.2
877    மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.     5.89.3
878    நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம்
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி
நாலு போலெம் அகத்துறை நாதனே.     5.89.4
879    அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை
அஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம்
அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன்
அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே.     5.89.5
880    ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்
ஆறு போலெம் அகத்துறை ஆதியே.     5.89.6
881    ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.     5.89.7
882    எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்
எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை
எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே
எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.     5.89.8
883    ஒன்ப தொன்பதி யானை யொளிகளி
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.     5.89.9
884    பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்
பத்து நூறவன் பல்சடை தோண்மிசை
பத்தி யாமில மாதலின் ஞானத்தாற்
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.     5.89.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.90 தனி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

885     மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.     5.90.1
886    நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.     5.90.2
887    ஆளா காராளா னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
*தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.
* தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்    5.90.3
888    நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.     5.90.4
889    பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.     5.90.5
890    குறிக ளுமடை யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.     5.90.6
891    வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.     5.90.7
892    எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.     5.90.8
893    நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப ரவர்தமை நாணியே.     5.90.9
894    விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.     5.90.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.91 தனி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

895     ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.     5.91.1
896    முன்னை ஞான முதற்றனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.     5.91.2
897    ஞானத் தாற்றொழு வார்சில ஞானிகள்
ஞானத் தாற்றொழு வேனுனை நானலேன்
ஞானத் தாற்றொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.     5.91.3
898    புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடையேன்புனி தன்றமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.     5.91.4
899    மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் றமர்களைக்
கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே.     5.91.5
900    கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.     5.91.6
901    மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே.     5.91.7
902    என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானுமு னேது மறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலுந்
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.     5.91.8
903    தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர்
உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே.     5.91.9
    இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     5.91.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.92 காலபாராயணம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

904     கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.     5.92.1
905    நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக்
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.     5.92.2
906    கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.     5.92.3
907     சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.     5.92.4
908     இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.     5.92.5
909     வாம தேவன் வளநகர் வைகலுங்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.     5.92.6
910     படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்னம தீசன் அடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.     5.92.7
911     விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.     5.92.8
912    இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.     5.92.9
913     மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.     5.92.10

914    அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ்
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.     5.92.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.93 மறக்கிற்பனே என்னும் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

915     காச னைக்கன லைக்கதிர் மாமணித்
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்
மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம்
ஈச னையினி நான்மறக் கிற்பனே.     5.93.1
916    புந்திக் குவிளக் காய புராணனைச்
சந்திக் கண்ணட மாடுஞ் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே.     5.93.2
917    ஈசன் ஈசனென் றென்றும் அரற்றுவன்
ஈசன் றானென் மனத்திற் பிரிவிலன்
ஈசன் றன்னையு மென்மனத் துக்கொண்டு
ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.     5.93.3
918    ஈசன் என்னை யறிந்த தறிந்தனன்
ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால்
ஈசன் சேவடி யேத்தப் பெற்றேனினி
ஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.     5.93.4
919    தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.     5.93.5
920    கன்ன லைக்கரும் பூறிய தேறலை
மின்ன னைமின் னனைய வுருவனைப்
பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய
என்ன னையினி யான்மறக் கிற்பனே.     5.93.6
921    கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச்
சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர்
விரும்பும் ஈசனை நான்மறக் கிற்பனே.     5.93.7
922    துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை
வஞ்ச னேனினி யான்மறக் கிற்பனே.     5.93.8
923    புதிய பூவினைப் புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான்மறக் கிற்பனே.     5.93.9
924    கருகு கார்முகில் போல்வதோர் கண்டனை
உருவ நோக்கியை ஊழி முதல்வனைப்
பருகு பாலனைப் பான்மதி சூடியை
மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே.     5.93.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.94 தொழற்பாலனம் என்னும் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

925    அண்டத் தானை அமரர் தொழப்படும்
பண்டத் தானைப் பவித்திர மாந்திரு
முண்டத் தானைமுற் றாத இளம்பிறைத்
துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.1
926    முத்தொப் பானை முளைத்தெழு கற்பக
வித்தொப் பானை விளக்கிடை நேரொளி
ஒத்தொப் பானை ஒளிபவ ளத்திரள்
தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.2
927    பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர்
வண்ணத் தானை வகையுணர் வான்றனை
எண்ணத் தானை இளம்பிறை போல்வெள்ளைச்
சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.3
928    விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப்
படலை யானைப் பலிதிரி வான்செலும்
நடலை யானை நரிபிரி யாததோர்
சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.4
929    பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய
பிரிதி யானைப் பிறரறி யாததோர்
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.5
930    ஆதி யானை அமரர் தொழப்படும்
நீதி யானை நியம நெறிகளை
ஓதி யானை உணர்தற் கரியதோர்
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.6
931    ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழுங்
கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை
மூலத் தானை முதல்வனை மூவிலைச்
சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.7
932    ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச்
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள்
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.8
933    நீற்றி னானை நிகரில்வெண் கோவணக்
கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை
ஆற்றி னானை அமரர்தம் ஆருயிர்
தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.9
934    விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு
பட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ்
சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.10
935    முற்றி னானை இராவணன் நீண்முடி
ஒற்றி னானை ஒருவிர லாலுறப்
பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச்
சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.     5.94.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.95 இலிங்கபுராணம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

936    புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
மிக்குக் காணலுற் றாரங் கிருவரே.     5.95.1
937    அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர்
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச்
செலவு காணலுற் றாரங் கிருவரே.     5.95.2
938    ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.     5.95.3
939    நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே.     5.95.4
940    எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர்
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.     5.95.5
941    மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.     5.95.6
942    கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர்
அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய
பட்ட கட்டமுற் றாரங் கிருவரே.     5.95.7
943    வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறுகந் தேறெரி வண்ணனை
அந்தங் காணலுற் றாரங் கிருவரே.     5.95.8
944    இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற் றாரங் கிருவரே.     5.95.9
945    கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர்
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்
கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.     5.95.10
946    செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. 11     5.95.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.96 மனத்தொகை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

947    பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.     5.96.1
948    முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
டக்க ணும்மரை யாயரு ளெய்தலா
தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே.     5.96.2
949    பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல கம்முழு தாளினுந்
தனியாய் நீசரண் நீசல மேபெரி
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே.     5.96.3
950    மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்
குறையு மாயினை கோளர வோடொரு
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே.     5.96.4
951    பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
ஆர்த்தா யாடர வோடன லாடிய
கூத்தா நின்குரை யார்கழ லேயல
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே.     5.96.5
952    பைம்மா லும்மர வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும்
அம்மா லல்லது மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலன் எந்தை பிரானிரே.     5.96.6
953    வெப்பத் தின்மன மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.     5.96.7
954    திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழு மொண்பொரு ளாயின நீதியென்
புகழு மாறு மலானுன பொன்னடி
இகழு மாறிலன் எந்தை பிரானிரே.     5.96.8
955    கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை
எப்பற் றியறி தற்கரி யாயருள்
அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.     5.96.9
956    எந்தை யெம்பிரான் என்றவர் மேல்மனம்
எந்தை யெம்பிரான் என்றிறைஞ் சித்தொழு
தெந்தை யெம்பிரான் என்றடி யேத்துவார்
எந்தை யெம்பிரான் என்றடி சேர்வரே.     5.96.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.97 சித்தத்தொகை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

957    சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வானிறத் தானணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
வந்திப் பாரவர் வானுல காள்வரே.     5.97.1
958    அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே.     5.97.2
959    ஆதி யாயவ னாரு மிலாதவன்
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்
பாதி பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.     5.97.3
960    இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
அட்ட மூர்த்தி யருளென் றடைவரே.     5.97.4
961    ஈறில் கூறைய னாகி எரிந்தவெண்
ணீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறி லாதன செய்யினும் விண்ணவர்
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.     5.97.5
962    உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப்
பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம்
பிச்சை யேபுகு மாகிலும் வானவர்
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.     5.97.6
963    ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.     5.97.7
964    எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவளப் பாரடைந் தார்களே.     5.97.8
965    ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்
ஆனை யீருரி போர்த்தன லாடிலுந்
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே.     5.97.9
966    ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடிப் பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.     5.97.10
967    ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே.     5.97.11
968    ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னேயரு ளாயென்று நாடொறுங்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.     5.97.12
969    வ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே.     5.97.13
970    அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ராற்றொழு வானையே.     5.97.14
971    கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.     5.97.15
972    நகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.     5.97.16
973    சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூவெயி லெய்தவ னல்லனே.     5.97.17
974    ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.     5.97.18
975    இடப மேறியும் இல்பலி யேற்பவர்
அடவி காதலித் தாடுவர் ஐந்தலைப்
படவம் பாம்பரை யார்த்த பரமனைக்
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.     5.97.19
976    இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த உள்ளத் தவருணர் வார்களே.     5.97.20
977    தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.     5.97.21
978    நமச்சி வாயவென் பாருள ரேலவர்
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே.     5.97.22
979    பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
புற்ப னிக்கெடு மாறது போலுமே.     5.97.23
980    மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே.     5.97.24
981    இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே.     5.97.25
982    அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்
பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
கரவில் நான்முக னுங்கரி யல்லரே.     5.97.26
983    அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான்
தழலுந் தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.     5.97.27
984    இளமை கைவிட் டகறலும் மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி ஆயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே.     5.97.28
985    தன்னிற் றன்னை அறியுந் தலைமகன்
தன்னிற் றன்னை அறியிற் றலைப்படுந்
தன்னிற் றன்னை அறிவில னாயிடிற்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.     5.97.29
986    இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே.     5.97.30

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.98 உள்ளம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

987     நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத்
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.     5.98.1
988    பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடுந்
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச்
சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்
எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.     5.98.2
989    வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்
கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின்
றுள்ளத் தில்லொளி யைக்கண்ட துள்ளமே.     5.98.3
990    அம்மா னையமு தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழுஞ்
செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.     5.98.4
991    கூறே றும்முமை பாகமோர் பாலராய்
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை யேந்திப் பலஇலம்
ஏறேறு மெந்தையைக் கண்டதெ னுள்ளமே.     5.98.5
992    முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
தன்னெஞ் சந்தமக் குத்தாம் இலாதவர்
வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லிரே
என்னெஞ்சி லீசனைக் கண்டதெ னுள்ளமே.     5.98.6
993    வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.     5.98.7
994    மருவி னைமட நெஞ்சம் மனம்புகுங்
குருவி னைக்குணத் தாலே வணங்கிடுந்
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.     5.98.8
995    தேச னைத்திரு மால்பிர மன்செயும்
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.     5.98.9
996    வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலை
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
கறுத்தா னைக்கா லில்விர லொன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.     5.98.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.99 பாவநாசம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்


997    பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.     5.99.1
998    கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீசனெ னாதவர்க் கில்லையே.     5.99.2
999    பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
எட்டு மொன்றும் இரண்டு மறியிலென்
இட்ட மீசனெ னாதவர்க் கில்லையே.     5.99.3
1000    வேத மோதிலென் வேள்விகள் செய்கிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ ராறும் உணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி இல்லையே.     5.99.4
1001    காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென் பார்க்கன்றி இல்லையே.     5.99.5
1002    கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி இருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்டல் ஒழிந்துவா னோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.     5.99.6
1003    கூட வேடத்த ராகிக் குழுவிலென்
வாடி யூனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கல் லாற்பயன் இல்லையே.     5.99.7
1004    நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி யிருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி இல்லையே.     5.99.8
1005    கோடித் தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.     5.99.9
1006    மற்று நற்றவஞ் செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க் குப்பயன் இல்லையே.     5.99.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.100 ஆதிபுராணம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

1007    வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.     5.100.1
1008    செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ
அத்த னென்றரி யோடு பிரமனுந்
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.     5.100.2
1009    நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.     5.100.3
1010    வாது செய்து மயங்கு மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம்
மாதே வனலாற் றேவர்மற் றில்லையே.     5.100.4
1011    கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போற்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.     5.100.5
1012    பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார்க்
கீவ னையிமை யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.     5.100.6
1013    எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.     5.100.7
1014    அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்
கருத்தி னைநினை யார்கன் மனவரே.     5.100.8
1015    தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.     5.100.9
1016    அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்
பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையை
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.     5.100.10

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.