பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் நேற்று கைது செய்யப்பட்டு, இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இரண்டு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், பிரதமர் நவாஸ் ஷரீப் அரசை கவிழ்த்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார். 2008ல், நடந்த நாடாளமன்ற தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால், அதிபர் பதவியிலிருந்து விலகினார். இவர் ஆட்சியில் இருந்தபோது, போதிய பாதுகாப்பு இல்லாததால் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டது, அறுபது நிதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டது, தேவையில்லாமல் அவசர நிலை பிறப்பித்தல் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இருந்து அவர் தப்பிக்க துபாய் மற்றும் லண்டனில் இவர் சில ஆண்டுகளாக தங்கியிருந்தார்.அடுத்த மாதம், பாகிஸ்தானில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக, கடந்த மாதம் நாடு திரும்பினார்.நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு செய்திருந்தார்."அரசியலமைப்பை மீறி நடந்த முஷாரப்பை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது' என, வழக்கறிஞர்கள் பலர், தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தனர். இதையடுத்து, தேர்தல் தீர்பாயம், முஷாரப்பின், நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்து விட்டது. இதனால் இவர் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமீனை நீடிக்க கோருவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்த முஷாரபை கைது செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை கேட்டதும் , முஷாரப் தந்து ஆதரவாளர்களுடன், அங்கிருந்து வெளியேறினார். முஷாரப் தனது பண்ணை வீட்டில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாகிஸ்தான் போலீசார், அவரை கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில், முஷாரப்பை ஆஜர்படுத்தக்கூறிய, மாஜிஸ்திரேட், அவரை இரண்டு நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், முஷாரப்பை கொல்ல திட்டமிட்டுள்ளன. எனவே, அவருக்கு சிறையில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால், இஸ்லாமாபாத் பண்ணை வீட்டிலேயே, பாதுகாப்பு கருதி அவரை சிறை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை வீடு துணை சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|