|
|||||
கஜா புயலால் சாய்ந்த மரங்களுக்கு புத்துயிர் தரமுடியும்: வேளாண்மை அதிகாரி தகவல்! |
|||||
கஜா புயலால் சாய்ந்த மரங்களுக்கு புத்துயிர் தரமுடியும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்து உள்ளார். கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் மா மரங்கள், பலா மரங்கள், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இந்த மரங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வேளாண் அறிவியல் மைய இயக்குனர் செந்தூர்குமரன் கூறியதாவது: கஜா புயலால் சாய்ந்த மரங்களை ஒரு வாரத்திற்குள், அதே இடத்திலோ, வேறு இடத்திலோ நட்டு வைத்தால் ஒரு மாதத்திற்குள் மீண்டும் துளிர்விடும். எவ்வகை மரங்களாக இருந்தாலும் வேர்ப்பகுதி சேதமடையாமல் இருந்தால் காப்பாற்றலாம். நிலத்தில் 6 அடி நீளம், 6 அடி அகலம், 6 முதல் 8 அடி ஆழத்தில் பள்ளம் தோண்ட வேண்டும். சாய்ந்த மரங்களின் கிளைகளை 1 அடி விட்டு நேராக ‘உட்கட்டர்’ அல்லது ரம்பம் கொண்டு அறுக்க வேண்டும். பின்பு காப்பர் ஆக்ஸி குளோரைடு (COC) எனப்படும் பேஸ்ட்டை தடவி கிளைகள் கருகிவிடாமல் பாலித்தீன் கவர் கொண்டு சுற்ற வேண்டும். குழியின் கீழே ஒரு அடிக்கு ஆற்று மணலையும், இரண்டு அடிக்கு மேலே செம்மண்ணையும், மேலே குப்பை மணலையும் சேர்க்க வேண்டும். நடுவில் வேர் பதியும்படி கிரேன் மூலம் நட்டு வைக்க வேண்டும். பின்னர் வேர்கள் அழுகாமல் இருக்க சில வகையான உரங்கள் இடவேண்டும். இதைத்தொடர்ந்து தினந்தோறும் தண்ணீர் ஊற்றினால், 15 நாட்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும். அடுத்த ஆண்டிலேயே மரங்கள் காய்க்க ஆரம்பித்துவிடும். தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தால், அவற்றின் மட்டைகளை சீவி விட்டு, இதேபோன்று நட்டு வைத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலன் தந்துவிடும். எந்த வகை மரங்களையும் விறகுக்காக வெட்டாமல் மீண்டும் அதை பக்கத்து இடத்தில் வைத்தால் கண்டிப்பாக வளர்ந்து நல்ல முறையில் பலன் தரும். இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 21 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|