|
|||||
உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.3.44 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு! |
|||||
உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில், 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க வகை செய்து, காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தன. நிகழ்ச்சி முடிவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த மாநாட்டில், எவ்வளவு ஒப்பந்தங்கள் வந்தன எவ்வளவு முதலீடுகள் கையெழுத்தாகின என்பது குறித்த தகவல் வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. இருநாட்களாக நடைபெற்ற 'தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு' -2019ன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ரூ.6300 கோடி முதலீடு செய்ய சிஆர்இடிஏஐ கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் சிஆர்இடிஏஐ கட்டுமான கூட்டமைப்பு தலைவர் அபீப், தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். டயர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய எம்.ஆர்.எஃப் நிறுவனம் ரூ.3,100 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில் மின்சாரக் கார்கள் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் ரூ.7,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.12,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளன. எம்.ஆர்.எஃப் நிறுவனம் ரூ.3,100 கோடிக்கும், பிஎஸ்ஏ நிறுவனம் ரூ.1,250 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளன. ஐசெர் நிறுவனம் ரூ.1,500 கோடி, சாய் பல்கலைக்கழகம் ரூ.580 கோடி மற்றும் அலைன்ஸ் நிறுவனம் ரூ.9,488 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளனர். விழாவில் பேசிய ஃபோர்டு மோட்டார் மேலாண்மை இயக்குநர் மைக்கேல் தமிழகத்தின் வலுவான எதிர்காலத்திற்கு பொறியாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்றும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். சென்னையில் தயாரிக்கும் ஃபோர்டு கார்கள் அமெரிக்கா ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி ஆகின்றன என்று அவர் தெரிவித்தார். தொழில்துறைக்கு இணக்கமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது ஹூண்டாய் சிஇஓ கிம் கூறினார். |
|||||
by Mani Bharathi on 25 Jan 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|