சமீபத்தில் அமெரிக்கா மற்ற நாடுகளின் இ-மெயில் மற்றும் தொலைபேசி உரையாடகளை உளவு பார்ப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பல நாடுகள், தங்களின் தகவல் பாரிமாற்றத்திற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், இந்திய அரசு, பல துறைகளின் இ-மெயில் தகவல் பரிமாற்றத்துக்கு, ஜி-மெயில், யாகூ இணையதள சேவைகளை பயன்படுத்த விரைவில் தடைவிதிக்க உள்ளது. இது குறித்து, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர், சத்யநாராயணா பேசியதாவது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில், இ- மெயில் மூலமான, தகவல் பரிமாற்றங்களுக்கு, ஜி-மெயில், யாகூ ஆகிய சேவைகள் பயன்படுத்தப் படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் பரிமாற்றங்களும், இதன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதில், பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் பரிமாற்றங்களில், வெளி நபர்கள் ஊடுருவி, விஷமத்தனம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், மத்திய அரசின் துறைகளுக்கான, தகவல் பரிமாற்றத்துக்காக, என்.ஐ.சி., என்ற, பிரத்யேக, இ-மெயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் உள்ள இந்த சேவை குறித்து, மத்திய அமைச்சகங்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவற்றில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட உள்ளன. இதன் பின்னர் வரும் டிசம்பர் மாதம் இ-மெயில் சேவை பயன்பாடிற்கு வரும் என சத்யநாராயணா கூறியுள்ளார்.
|