அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், நாட்டில் விலைவாசி மேலும் கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது., டீசல் விற்பனையால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் முதல், எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியது. இதனால் மாதம் தோறும் டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டது. இருப்பினும், ரூபாயின் மதிப்பு சரிந்து வந்ததால், தயாரிப்பு விலைக்கும், சில்லரை விற்பனைக்கும் உள்ள வித்தியாசம், 9.29 ரூபாயாக உள்ளது.
டீசல் விலை உயர்வு குறித்து, பெட்ரோலியத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்த அனுமதி வழங்கிய போதும் அது எண்ணெய் நிறுவனங்களுக்கு போதுமானதாக இல்லை. நாங்கள் இன்னும் விலையை உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, டீசல் விலையை ஒரே தடவையில், 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் உயர்த்தினால், நிலைமையை சமாளிக்கலாம் என,அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த விலை உயர்வு குறித்தது மத்திய அரசு விரைவில் பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|