மளிகைக் கடைகாரர் காமராஜின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.
திண்டுக்கல்ஆத்துார் சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது 43). இவர் மளிகைப் பொருட்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய்ரோட்டில் பின்னால் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம், காமராஜ் மீது மோதியது.
தடுமாறிக் கீழே விழுந்ததில் காமராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த அவரது இருதயம், சிறு நீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இயங்கின. மனைவி இந்திராவிடம் உறுப்பு மாற்று தானம் குறித்து மருத்துவ குழுவினர் கூறினர். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு அதனைப் பொருத்தி மறு வாழ்வு தரலாம் என்ற மருத்துவக் குழுவினரின் யோசனையை அவர் ஏற்றார்.
5 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வேறு வேறு நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள மலர் மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது குறிப்பிடத் தக்கது.
|