குரூப் 2 தேர்வுக்கு இது வரை 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் இன்று(நேற்று), தேர்வாணைய (www.tnpsc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 220 காலி பணியிடங்களை நிரப்ப நடந்த இந்த தேர்வில் சுமர் 51,477 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், மதிப்பெண் அடிப்படையில், 652 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவு எண்கள் விவரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்கள் வரும், 18ம் தேதிக்குள் சான்றிழ்களை, தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும். மேலும், சான்றிதழ்களின் நகல்களை, தபால் மூலம் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப்பின், தகுதி வாய்ந்தவர்கள் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் வணிகவரித் துறை துணை அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, சார்பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 பிரிவில் உள்ள 1064 பணி இடங்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். இதுவரை குரூப் 2 தேர்வுக்கு சுமார் 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பத்துள்ளதாக நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
|