LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

கொய்யா சாகுபடியில் புதிய வேளாண் தொழில்நுட்பம்

நாட்டின் மிக முக்கிய பழப்பயிர்களுள் ஒன்றானது கொய்யா. குறிப்பாக ஏப்ரல்- மே மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் ஆகிய இரண்டு பருவ காலங்களில் கொய்யா அறுவடைக்குத் தயாராகி அதிகளவு விற்பனைக்கு வரும். மழை பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்யா பழங்கள் மகசூல் அளவில் அதிகரித்து காணப்பட்டாலும் அவற்றின் தரம் குறைவாகக் காணப்படுகிறது.


இத்தகைய சூழலில் பழ சந்தையின் சந்தை தேவையை கருத்தில் கொண்டு கொய்யா உற்பத்தியைப் பெருக்க மேற்குவங்க கொய்யா விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகள் பங்களிப்புடன் புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் வாயிலாக பயிரிட்டு அதிகளவு லாபம் பெற்று வருகின்றனர். புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீண் தெரிவித்தது:


கொய்யாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி இப்போது அதிகளவு தரத்துடன், அதிக மகசூல் பெறும் வண்ணம் இப்புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.


இப்புதிய தொழில்நுட்பத்தில் கொய்யா மரத்தின் கிளைகள் வளைக்கப்படுகின்றன.


பூக்கும் காலத்துக்கு முன்பு 5-60 நாட்களுக்கு முன்பாக கொய்யா மரத்தின் கிளைகள் வளைக்கப்பட்டு மரத்தை உள்ளே நோக்கி கட்டப்படுகிறது.


இதன் வாயிலாக நல்ல சூரிய ஒளி, காற்றோட்டம் மரத்துக்கு கிடைப்பதுடன் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.


இவ்வாறு கிளைகளை வளைத்து கட்டிய பின்பு சிறிய கிளைகள் மற்றும் இலைகளை விவசாயிகள் அகற்றிவிட வேண்டும்.


சுமார் 30 நாளில் வளைக்கப்பட்ட கிளைகளில் இருந்து புதிய துளிர்கள் வெளிவர துவங்கும், பின்னர் வளைக்கப்பட்ட கிளைகள் விடுவிக்கப்பட்டதுடன் 25 முதல் 40 சதவீதம் வரை அதிகளவு பூக்களை மரத்தில் காணமுடியும்.


இதை முந்தைய கோடை மற்றும் பிந்தைய இலை உதிர்காலத்தில் காணப்படுவதுடன் விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரை அதிகளவு மகசூல் கிடைக்கிறது.


இப்புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் கொய்யாவின் 3-வது ஆண்டு முதல் 8-வது ஆண்டு வரை கடைபிடிக்கலாம்.


மேலும் நீண்ட வயதுடைய மரங்களின் வளர்ச்சிக்கு ஏற்பவும் இத்தொழில்நுட்பத்தை முன்பு செயல்படுத்தவில்லை என்றால் செயல்படுத்த முயன்று பார்க்கலாம். நடைமுறைபடுத்தும் காலம்:


கொய்யா மரங்களை கோடை காலத்தில் வளைத்தால் இலை உதிர்காலம் மற்றும் குளிர் காலத்தில் அதிகளவு பழங்கள் கொடுக்கும், கோடையில் வளைக்கும்போது அதிகளவு கிளைகள், புதிய இலைகள் காணப்படும்.


இலைஉதிர் காலத்தை விட பூ மற்றும் காய் உருவாக்கம் குறைவாகக் காணப்படும்.


இலை உதிர் காலத்தில் வளைக்க அக்டோபர் மாதம் உகந்தது. இதன் வாயிலாக அதிகளவு பழங்களை கோடை பருவத்தில் நாம் பெற முடியும்,


இலைஉதிர் கால வளைத்தல் வாயிலாக புதிய கிளைகள், பூக்கும் திறன், காய்க்கும் திறன் மற்றும் பழத்தின் எடை அதிகரித்து வேளாண் சந்தையில் நல்ல விற்பனை விலை கிடைக்கும்.


புதிய தோட்டக்கலை தொழில்நுட்பத்தின் பயன்கள்:


சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது


குறைந்த செலவில், தொழில்நுட்பத்தில் செயல்படுத்த முடியும்.


விலைஉயர்ந்த வளர்ச்சி ஊக்கிகளைவிட விவசாயிகளுக்கு நல்ல பொருளாதார பயன்களை பெற்றுத் தரும்


எனவே கொய்யா சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிகள் இப்புதிய தோட்டக்கலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்குவங்க விவசாயிகள் போன்று அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம் 


என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீண்.


கொய்யாவில் அடர் நடவில் அசத்தும் விவசாயிகள்


கொய்யா கன்றுகளை அடர் நடவு முறையில் கவாத்து செய்து, கூடுதல் மகசூல் பெறும் முயற்சியில் விழுப்புரம் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.


ஏழைகளின் ஆப்பிள், வெப்ப மண்டலங்களின் ஆப்பிள் என கொய்யாப்பழம் அழைக்கப்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை காய்க்கும் தன்மை கொய்யாவிற்கு உண்டு. மா, வாழை, ஆரஞ்சு மற்றும் ஆப்பிளுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கொய்யா உள்ளது.


கொய்யாப் பழத்தில் மனிதர்களுக்கு தேவையான நார்சத்து அதிகம் உள்ளது.


பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் லைக்கோபின் ஆகியன மற்ற பழங்களை விட, இதில் அதிகம் உள்ளது.


இருப்பினும் மற்ற பழங்களை விட கொய்யாப் பழம் விழுப்பரம் மாவட்டத்தில் அதிகம் விளைவதால், குறைந்த விலையில் விற்கப்படுகிறது.


கொய்யாவின் முக்கியத்துவம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால், பலரும் ஆர்வமாக வாங்கிச் சாப்பிடுகின்றனர்.


அடர் நடவுஇதனால் பழைய முறைப்படி கொய்யா சாகுபடி செய்த விவசாயிகள், பல புதிய முறைகளை கையாண்டு சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.


புதிய விவசாயிகள் பலரும் கொய்ய சாகுபடியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.


இதனால் பலர் பழைய முறைப்படி 6 மீட்டர் இடைவெளியில் கொய்யா கன்று நட்டு பராமரிப்பதை தவிர்த்து வருகின்றனர்.


மேலும் தற்போது அடர் நடவு முறையில், 3 மீட்டர் இடைவெளியில் கொய்யா கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்கின்றனர்.


இதனால் இரட்டிப்பு அளவு மகசூல் கிடைக்கிறது.


இரட்டிப்பு லாபம் அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்வதால் களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிக்கு ஆட்களின் தேவை குறைக்கப்படுகிறது.


வரிசைகளுக்கு இடையே ஊடு பயிராக மணிலா, உளுந்து மற்றும் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.


இதனால் கொய்யா மரங்கள் மூலமும், ஊடு பயிர்கள் மூலமும் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது.


ஆனால் பழைய முறைப்படி, வளர்ந்துள்ள கொய்யாச் செடிகளின் நுனிப் பகுதியை வளைத்து, அதில் மணல் பைகளை கட்டி, புதிய தளிர்களை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.


இம்முறையில் புதிய தளிர்கள் குறைந்தளவே உருவாகின்றன. இதனால் செடிகளுக்கு உரமிடல், சூரிய வெளிச்சம் போன்றவை குறைவாகவே கிடைப்பதால், மகசூலும் குறைகிறது.


மேலும் பழைய முறையை கையாளும் வயல்களில் ஊடு பயிர்கள் செய்ய வாய்ப்புகள் இல்லை.


எனவே புதிய முறைப்படி அடர் நடவு முறையை மேற்கொண்டு, வளர்ந்த கிளைகளை வெட்டி விட வேண்டும்.


இதனால் பல இடங்களில் புதிய தளிர்கள் துளிர் விட்டு, அதிக பூக்கள் வைப்பதால், கூடுதல் மகசூல் கிடைக்கிறது. ஜனவரி அல்லது ஜூன் மாதங்களில் கவாத்து செய்வது நல்லது.


நடவு செய்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பராமரித்தால், மற்ற ஆண்டுகளில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்பதால், அடர் நடவில் காவத்து செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். 


கொய்யாவில் பூச்சி, நோய் தடுப்பு


கொய்யாவில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கும் முறை குறித்து வேளாண் அலுவலர்கள் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளனர்.


ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் தரக்கூடிய கொய்யா பயிர், பழ ஈ, கொய்யா தண்டு துளைப்பான், மாவு பூச்சிகளாலும், நோய்களில் வாடல் நோய், ஆந்தரக்நோஸ், நுனியில் இருந்து காய்தல், பழ அழுகல் போன்ற நோய்களின் தாக்குதலுக்கும் இலக்காக வாய்ப்புள்ளது.


சிறந்த சாகுபடி முறைகளைக் கையாண்டு மேலாண்மை செய்வதால் மேற்கண்ட பூச்சி மறறும் நோய்களை கட்டுப்படுத்தி கொய்யாவில் சிறந்த வருமானம் பெற வழிவகுக்கும்.


பழ ஈ:


மழைக் காலங்களில் கொய்யாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.


கொய்யா பழங்கள் நிறம் மாறும் தருணத்தில் பழ ஈக்கள் பழங்களின் மேல்புறத்தில் முட்டையிடும்

.

முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவந்ததும் பழங்களை துளைத்து புழுக்கள் உள்ளே சென்று மென்மையான சைதைப்பகுதியை சாப்பிடும்.


பழ ஈ தாக்குதலுக்கு வாய்ப்புள்ள இடங்களில் மழைக்காலத்தில் கொய்யா மகசூலை தவிர்க்கவும், பழுத்த அனைத்து பழங்களையும் அறுவடை செய்யவும்.


கீழே விழுந்த பழங்களை அப்புறப்படுத்தி 2 அடி ஆழத்தில் புதைக்கவும்.


அறுவைக்குப் பின்னர் கலப்பை மூலம் உழவு செய்வதால் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் 4-6 செ.மீ. ஆழத்தில் புதைக்கப்படுகிறது.


ஜூலை மாதம் முதல் பாதிக்கப்பட்ட தோப்புகளுக்கு எண்டோசல்பான் 35 இசி அல்லது மாலத்தியான் 50 இசி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் 500 லிட்டர் நீரில் கலந்து வார இடைவெளியில் அறுவை முடியும் வரை தெளிப்பு செய்யவும்.


மேலும் மருந்து தெளித்த 3 நாள்களுக்குப் பிறகு பழ அறுவடை மேற்கொள்ள வேண்டும்.


கொய்யா தண்டு துளைப்பான்:


நாற்றங்காலில் இளஞ்செடிகளையும், முதிர்ந்த மரங்களையும் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது.


பாதிக்கப்பட்ட துளைகளுக்கு கீழாக அதிக எண்ணிக்கையில் இளந்தளிர்களை உற்பத்தி செய்வதால் கொய்யா மரங்கள் அடர்வாக தெரியும். பாதிக்கப்பட்ட குருத்து காய்ந்து வாடிவிடும்.


பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மோனோசில் 36 இசி 280 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 20 இசி 400 மி.லி. மருந்து ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பு செய்வதால் தண்டுதுளைப்பான் தாக்குதல் குறைய வாய்ப்புள்ளது.


கொய்யா மாவு பூச்சி:


இளங்குருத்துகள், பழங்கள் மற்றும் இலை நரம்புகளை ஒட்டிய பகுதிகளில் இந்த பூச்சிகள் ஒட்டிக்கொண்டு சாற்றினை உறிஞ்சி கொய்யா இலைகளில் ஒழுங்கற்ற வளர்ச்சியையும், இலைகளின் இயல்பான வளர்ச்சியையும் பாதிக்கிறது.


தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் கொய்யா கிளைகள் காய்ந்துபோக வாய்ப்புள்ளது.


தாக்குதலின் ஆரம்ப நிலையில் பாதித்த குச்சிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.


பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் மோனோகுரோட்டோபாஸ் 36 இசி 2 மி.லி, ஒரு லிட்டர் நீர் அல்லது மருந்து ட்ரையசோபாஸ் 2 மில்லி, ஒரு லிட்டர் நீர் மற்றும் வேம்பு எண்ணை 5 மி.லி., ஒரு லிட்டர் நீர் மருந்து கலவையோ அல்லது பாஸலோன் 0.5 மில்லி மற்றும் வேம்பு எண்ணை 5 மி.லி ஆகிய மருந்து கலவைகளில் ஏதேனும் ஒன்றினை கலந்து மரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மரம் முழுவதும் நனையுமாறு தெளித்து இந்த பூச்சியை கட்டுப்படுத்தலாம்.


வாடல் நோய்:


இந்த நோய் பியுசேரியம், செபாலோஸ்போரியம், ரைசோக்டோனியா போன்ற பூஞ்சாணங்களால் ஏற்படுகிறது.


கொய்யாவின் வேர்கள் பாதித்த பல மாதங்களுக்குப் பின்னரே கொய்யா கிளைப்பகுதிகள் காய்ந்து வாடி நோயின் தாக்குதலை வெளிப்படுத்தும்.


தாக்குண்ட மரங்களில் இலைகள் உதிர்ந்தும், இலைகள் மஞ்சள் நிறத்திலும் தென்படும்.


வேரில் பட்டைக்கும் நடுமரத்திற்கும் இடைப்பட்ட கேம்பியம் பகுதியில் நிறம் மாறி இருப்பதிலிருந்து இந்த நோயின்தாக்குதலை அறியலாம்.


கொய்யா நடவிற்கு தண்ணீர் தேங்கும் நிலங்களை தவிர்த்து நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களை தேர்ந்தெடுத்து நடவு செய்யவும், முழுவதும் பாதிக்கப்பட்ட மரங்களை வேருடன் பிடுங்கி அப்புறப்புறப்படுத்தி தீயிட்டு எரித்து விடவும்.


மழை நீரோ, பாசன நீரோ மரங்களுக்கு அருகில் தேங்குவதை தவிர்க்கவும்.


ஆந்தரக்நோஸ், நுனியிலிருந்து காய்தல், பழ அழுகல்:


இந்த நோய் கிளயோஸ்போரியம் சிடி, பைட்டோப்தோரா பாரசிடிகா, ரைசோபஸ் மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் போன்ற பூஞ்சைகளால் தோன்றுகிறது.


மழைக்காலங்களில் சிறிய மரங்கள் மற்றும் குச்சிகளை தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது.


பாதித்த கிளைகள் நுனியிலிருந்து வாடி வதங்கி பின்னர் இறந்துவிடும்.


முற்றிய பழங்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகும்.


வட்ட வடிவ சற்றே குழுவிழுந்த மரநிற தோற்றத்திலான புள்ளிகள் ஆங்காங்கே பழங்கள் மீது தென்படும்.


புள்ளிகளின் மத்தியில் வெளிர்சிகப்பு நிறத்தில் இருக்கும் பாதித்த பழங்கள் இரண்டு அல்லது 3 நாள்களில் முழுவதுமாக அழுகிவிடும்.


பாதித்த குச்சிகளையும், பழங்களையும் அப்புறப்படுத்தவும்


பாதித்த குச்சிகள் மற்றும் மரக்கிளைகளை கவாத்து செய்த பின்னர் கேப்டான் 300 கிராம் மருந்தினை 100 லிட்டர் நீரில் கலந்து 10 முதல் 15 நாள்கள் இடைவெளியில் அறுவடை முடியும் வரை தெளிப்பு செய்யவும்.


மரங்களில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும், பாதித்த மரங்களை மண்ணில் புதைத்து நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.


விவசாயிகள் நடவு செய்த காலத்திலிருந்து கவனமாக செடிகளை கண்காணித்து வரவேண்டும்.அதில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அதுகுறித்து அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக் கலைத்துறை அலுவலர்களை அணுகி விவரம் பெற்று, உரிய தடுப்பு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். கொய்யாவை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும் கொய்யா காய் துளைப்பான்


சேதத்தின் அறிகுறி:


புழுக்கள் காய்களில் துளையிட்டுச் சென்று உண்ணும், பின்பு காய்ந்து பழுக்கும் முன்னரே விழுந்துவிடும்.


பூச்சியின் விபரம்:


புழு பழுப்பு நிற தலையையும், இளஞ்சிவப்பு உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும் பெற்றிருக்கும்


தாய்ப்பூச்சி சிறியதாக மஞ்சள் நிற இறக்கையில் நிளைய கருப்புப் புள்ளிகளுடன் இருக்கும்


ஆண்பூச்சி உம்பின் பின்பகுதி நுணியில் கருமையான முடிக்கொத்தும் காணப்படும்


கட்டுப்படுத்தும் முறை:


தாக்கப்பட்ட பழங்களை எழுத்து அழித்து விடவும்


விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.


மாலத்தியான் 50 இ.சி. 0.1 சதவிதம் (அ) என்டோசல்பான் 35 இ.சி 0.07 சதவிதம் மருந்தினை பூக்கும் தருணத்திலும் காய்ப்பிடிக்கும் தருணத்திலும் தெளிக்கவேண்டும்


2. பழ துளைப்பான், வீரச்சோளா ருசோக்கிரேட்டல் 


சேதத்தின் அறிகுறி:


காய்கள் துளைக்கப்பட்டு விதைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கும்


பூச்சியின் விபரம்:


புழு அழுக்கடைந்த பழுப்பு நிறமாக சிறிய உரோமங்களுடன் இருக்கும்


தாய் வண்ணத்துப்பூச்சி நீலமும் பழுப்புமாக அழகான முன் சிறக்கைகளில் ஆரஞ்சு நிற புள்ளிகளுடன் காணப்படும்


கட்டுப்படுத்தும் முறை:


தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்


விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்


மாலத்தியான் 50 இ.சி 0.1 சதவிதம் (அ) என்டோசல்பான் 35 இ.சி 0.07 சதவிதம்


பழ துளைப்பான்


சேதத்தின் அறிகுறி


புழுக்கள் பூ மொட்டுகளிலும் பழங்களிலும் காணப்படும்


பூச்சியின் அறிகுறி:


வண்ணத்துப்பூச்சி சிவப்பாக காணப்படும்


கட்டுப்படுத்தும் முறை:


தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்


விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்


மாலத்தியான் 50 இ.சி 0.1 சதவிதம் (அ) என்டோசல்பான் 35 இ.சி 0.07 சதவிதம்


4. கொய்யாப்பழ ஈ


சேதத்தின் அறிகுறி:


புழுக்கள் மற்றும் ஈக்கள் பாதி கணிந்த பழங்களையே தாக்கும்


பழத்தின் மீது முட்டையிட துளைகள் காணப்படும்


பழத்திலிருந்து துர்நாற்றம் வீச துவங்கும்


பூச்சியின் விபரம்:


பூச்சியின் கால்கள் மஞ்சள் நிறமாகவும் இறக்கைகள் பழுப்பு நிறமாகவும் காணப்படும்


கட்டுப்படுத்தப்பட்ட முறை:


தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்



கோடை உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்


மெத்தில் யூணஜீனால் கவர்ச்சிப் பொறியை ஹெக்டர்க்கு பத்து வீதம் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்


மெத்தில் யூஜீனால் மற்றும் மாத்தியான் 50 இ.சி 1:1 என்ற கலவையில் கலந்து கவர்ச்சிப் பொறியில் வைத்து ஈக்களை அல்லது மாலத்தின் 50 இ.சி 0.05 சதவிதம் மருந்தினை தெளிக்கலாம்


மொலஸஸ் அல்லது வெல்லத்தை 10 கிராம் / லிட்டர் கீழ்வரும் ஏதாவது ஒரு பூச்சி மருந்தினை இரண்டு முறை தெளிக்கவும்


பென்தியான் 100 இ.சி 1 மி.லி / லிட்டர்


மாலத்தியான் 50 இ.சி 2 மி.லி / லிட்டர்


டைமித்தோயேட் 30 இ.சி 1 மி.லி / லிட்டர்


(பழங்கள் பழுப்பதற்கு முன்னால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை)


ஒப்பியல் காம்பன்ஜேட்டஸ், ஸ்பாலன்ஜியா பிலிப்பைனன்ஸிஸ், டையகாஸ்மிமார்பா கிரெளசி இவ்வொட்டுண்ணிகளை களத்தில் விட்டு பழ ஈயினை கட்டுப்படுத்தலாம்


5. மரப்பட்டைப்புழு


தாக்குதலின் அறிகுறிகள்:


பட்டை துளைப்பான் இளம் வயது மரங்களை அதிக அளவில் தாக்குகிறது


புழு மரப்பட்டையை துளைத்து உள்ளே சென்று வலைப்பின்னலை உருவாக்கி உணவுக் கடத்தும் திசுவை உண்கிறது


புழு இரவு நேரங்களில் மட்டும் மரப்பட்டையை உண்ணுகிறது பகல் நேரங்களில் மரத்துளைகளில் மறைந்து வாழ்கிறது


பூச்சியின் விபரம்:


புழு – பழுப்பு நிறத்தில் இருக்கும்


வண்டு – மஞ்சள் நிறமுடையது முன் இறக்கையில் பழுப்பு நிற கோடும், பின் இறக்கையில் வெண்ணிற பட்டைக்கோடு இருக்கும்


ஆண் வண்டு சிறியதாகவும் பெண் வண்டு பெரியதாகவும் இருக்கும்


6. தேயிலைகொசு


சேதத்தின் அறிகுறி


இலை மற்றும் பூங்கொத்துகளில் நுனிக்கருத்துகள் வாடிவிடும்


பூச்சி சாறு உறிஞ்சிய இடங்களில் ஈரமான பழுப்பு நிறக் கசிவு தெரியும்


பூச்சியின் விபரம்


செந்நிற உடலில் கருநிற தலையைக் கொண்ட மெல்லிய நாவாய்ப்பூச்சி


கட்டுப்படுத்தும் முறை:


தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கவும்


பூக்கும் தருணத்தில் மாதத்திற்கு இருமுறை மாலத்தியான் 50 இ.சி 0.2 சதவிதம் (அ) என்டோசல்பான் 35 இ.சி 0.07 சதவிதம் ஏதாவது ஒரு பூச்சிமருந்தினை தெளிக்கலாம்


7. பச்சை செதிள் பூச்சி


சேதத்தின் அறிகுறி:


குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலைகளின் சாறுகளை உறிஞ்சும்


இலைகள் மஞ்சலாக மாறும்


பூச்சியின் விபரம்:


குஞ்சுகள் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்


பூச்சிகள் தட்டையாகவும் மேற்பாகம் லேசாக குவிந்து மஞ்சள் கலந்த பச்சை நிறமாக இருக்கும்


கட்டுப்படுத்தும் முறை:


தாக்குதல் ஆரம்பிக்கும் பருவத்திலேயே கிளைகளை வெட்டி அழித்துவிட வேண்டும்


மானோகுரோட்டோபாஸ் 1 மி.லி / லிட்டர்

(அ )


இரண்டு வாரங்கள் கழித்து மரத்திற்கு 20 என்ற விகிதத்தில் கிர்டோலேமஸ் மான்ட்ரொஸரி பொரிவண்டை விடலாம்


பாஸ்போமிடான் 215 மிலி (அ) மானோகுரோட்டோபாஸ் 40 மிலி (அ) எண்டோசல்பான் 80 மிலி மருந்து தண்ணீருடன் கலந்து தெளித்தால் நாற்றங்காலில் செதில் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்

நடவு வயலில் – பாஸ்போமிடான் 300 மிலி மானோகுரோட்டோபாஸ் 30 மிலி மருந்தைத் தெளிக்கவும்.


8. மாவுப்பூச்சி


சேதத்தின் அறிகுறி:


இலை மற்றும் காய்களின் மீது அடை அடையாக மாவு போன்று காணப்படும்


முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்


பூச்சியின் விபரம்:


பெண் பூச்சியின் பிற்பகுதியில் நீண்டவால் போன்று காணப்படும்


கட்டுப்படுத்தும் முறை:


முட்டை குவியலையும் குழுக்களையும் எடுத்து அழிக்க வேண்டும்


கூட்டமாக காணப்படும் புழுக்களை தீயிட்டு அழிக்க வேண்டும்


விளக்குப் பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்


மெதில் டெமட்டான் 25 இ.சி 0.05 சதவிதம்

(அ)

டைமீதோயேட் 30 இ.சி. 0.06


மரத்திற்கு 20 என்ற விகிதத்தில் கிர்ப்டோலேமஸ் மான்ட்ரொஸரி பொறிவண்டை விடலாம்


9. வெள்ளை ஈ, அலிரோடைக்கஸ் டிஸ்பர்சஸ்:


சேத்தின் அறிகுறி:


குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சும்


பூச்சிகளின் தேன் போன்ற கழிவுப் பொருளின் படிவால் இலை மற்றும் பூங்கொத்துக்களில் கருமையான பூசணம் வளரும்


இலைகள் மஞ்சளாக மாறும்


தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்


பூச்சியின் விவரம்:


சிறு வெண்ணிற பூச்சிகள் இலைகளில் அடை அடையாக மாவுப்பூச்சிகளைப் போன்று காணப்படும். அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும்


கட்டுப்படுத்தும் முறை:


வயலை சுத்தமாக வைக்க வேண்டும்


களைகளை அகற்ற வேண்டும்


மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்


தாக்குதல் அதிகமாக இருந்தால் இமிடாகுளோப்ரிட் 200 எஸ்.எல் 0.01 சதவீதம் (அ) ட்ரை அசோபாஸ் 40 இ.சி. 0.06 சதவிதம் தெளிக்கலாம்


வேப்ப எண்ணெய் 3 சதவிதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவிதம் தெளிக்கலாம்


கிரிப்டோலேமஸ் மாண்டரொஸரி பொறிவண்டை விட்டு கட்டுப்படுத்தலாம்


என்கார்சியா ஷெய்டெரிஸ், என்கார்சியா காடெல்பே ஆகிய ஒட்டுண்ணிகளை விடலாம்

by Swathi   on 20 Mar 2014  3 Comments
Tags: Guava Cultivation   கொய்யா சாகுபடி                 
 தொடர்புடையவை-Related Articles
கொய்யா சாகுபடியில் புதிய வேளாண் தொழில்நுட்பம் கொய்யா சாகுபடியில் புதிய வேளாண் தொழில்நுட்பம்
கருத்துகள்
15-Jul-2018 03:16:34 Elangamoni said : Report Abuse
கொய்யாவில் நூர்புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி தெளிவுபடுத்தவும், இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்
 
12-Mar-2017 08:16:52 s .ராஜீவ் said : Report Abuse
உரம் வைக்கும் முறைகள் மற்றும் சத்து மருந்துகள்
 
19-Sep-2014 09:59:57 karthik said : Report Abuse
வாடல் நோயாள பாதித்த engal கொய்யா தொப்பெற்கு வளி koorungal.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.