கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என சென்னையை சேர்ந்த தலித் இலக்கியப் படைப்பாளி மீஞ்சூர் கோபி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கின் மனுவில், மீஞ்சூர் கோபி கூறியிருப்பதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன் என் ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. அப்போது எனது ஊரில் ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து 'மூத்த குடி' என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினேன். இந்தக் கதையை தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் சொன்னேன். அப்போது ஜெகன் என்பவரும் எங்களுடன் இருந்தார். மூன்று மணி நேரம் அந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் 'இப்போது என்னால் இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடியாது' என்று விஸ்வாஸ் சுந்தர் சொன்னார். ஆனால் அப்போது அவருடன் இருந்த ஜெகன், 'இந்தக் கதை ரொம்ப நல்லாயிருக்கு. இதைத் திரைப்படமாக தயாரிக்க நான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்' என்று சொல்லி என்னை ஏ.ஆர்.முருகதாஸிடம் அழைத்துச் சென்றார்.
கதையைக் கேட்டுவிட்டு பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ், சில திருத்தங்களைச் சொல்லி, கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் மாற்றச் சொன்னார். அதன்பின் என்னை இயக்குநராக வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவும் ஏ.ஆர்.முருகதாஸ் சம்மதித்தார். கதையை மேம்படுத்தும் வேலைகள் மட்டும் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு திடீரென்று அந்த வேலையை நிறுத்திவிட்டு 'என்னால் இப்போது இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடியாது' என்று சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுங்கிக் கொண்டார்.
அதன்பிறகு திடீரென்று நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அது பற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது 'கத்தி' திரைப்படத்தின் கதை நான் சொன்ன 'மூத்த குடி' கதைதான் என்று எனக்குத் தெரிய வந்தது. எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இயக்குநர் முருகதாஸ் மற்றும் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் 'கத்தி' திரைப்படம் வெளியாகும் முன் எனக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மீஞ்சூர் கோபி தன் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீஞ்சூர் கோபியும், ஏ.ஆர்.முருகதாஸும் தங்களது கதையின் நகலை அட்வகேட் கமிஷ்னரான வழக்கறிஞர் சங்கரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்கும் படி கூறியுள்ளார். மேலும் இரண்டும் ஒரே கதையா என்பதை வழக்கறிஞர் சங்கர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|