கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இணைந்திருக்கும் சாதிப் பெயர்களை நீக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கறிஞர், எஸ்.சரவணன் என்பவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, இன்று பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை இணைப்பது சர்வ சாதரணமாக உள்ளது. ஆனால், 1979–80–ம் ஆண்டில் பெரியாரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின்போது, தெருப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சாதி மோதலை தவிர்ப்பதற்காக 1997–ம் ஆண்டு போக்குவரத்துக்கழகத்துக்கு சூட்டப்பட்டிருந்த பெயர்கள் நீக்கப்பட்டன.
மக்கள் நலனை விரும்பும் அரசானது, ஜாதியின் பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்தக் கூடாது. கல்வி நிறுவனங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் இருப்பதற்கு எந்த தடையும் இல்லை; ஆனால், அவர்களின் பெயருக்குப் பின்னால், ஜாதி பெயரையும் இணைப்பது, அப்பாவி மக்களின் மனதில் ஜாதிய முறையை புகுத்துவது போலாகும். பள்ளிக் குழந்தைகளின் மனதில் பதிய ஆரம்பித்தால், இந்த சமூகத்தில், ஜாதி முறையை ஒழிக்க முடியாது. சட்டம் ஒருபோதும் ஜாதி பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதிக்கவில்லை. எனவே, அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஒட்டியிருக்கும், ஜாதி பெயர்களை நீக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி அகர்வால் (பொறுப்பு), நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, பென்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
|