LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

இந்தியாவில் மாநில உருவாக்கம்: சில வரலாற்றுக் குறிப்புகள்

இந்தியத்துணைக்கண்டத்தின் பல்வேறு ராஜ்ஜியங்கள், பிரதேசங்கள், தேசங்கள், பழங்குடியினர் பகுதிகள் ஆகியவை ஒரு குடைக்கீழ் கொண்டுவரப்பட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் உருவானது என்பதை நாம் அறிவோம். பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டனின் நேரடி கட்டுப்பாட்டில் மாகாணங்களும் மறைமுக கட்டுப்பாட்டில் சமஸ்தானங்களும் தனித்தனி அலகுகளாக இருந்தன. அந்த மாகாணங்களை பிரிட்டிஷார் உருவாக்கியபோது. பல்வேறு மொழிபேசும் பிரிவினரின் பகுதிகளை வலுக்கட்டாயமாக இணைத்து தமது நிர்வாக வசதிக்காக ஒற்றை அலகுகளாக மாற்றினர். ஒரு மொழியைப் பேசுவார் ஒரே மாகாணத்துக்குள்ளும், பல மாகாணங்களுக்கிடையிலும் அல்லது மாகாணங்களுக்கும் பல சமஸ்தானங்களுகிடையிலும் பிரிந்துகிடந்தனர்.


தொடக்கத்தில் இது பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களாலும் ஐரோப்பிய அரசியல் கருத்துகளின் நுழைவாலும் இந்திய அரசியல் தளத்தில் பல மாற்றங்கள் நடந்தபோது மக்களின் மொழிசார் அடையாளமும் ஓர் அரசியல் காரணியாக முன்னுக்குவந்தது. ஒரு மொழி பேசும் மக்கள் - மதம், சாதி, வட்டார அடையாளங்களுக்கு அப்பால் - தங்களுக்கான தேசிய அல்லது பிரதேச அடையாளங்களை கண்டடைவே செய்தனர். காலனிய காலகட்டம் எவ்வாறு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்ததோ அதைப் போலவே இந்திய மக்கள் என பொத்தம்பொதுவாக அறியப்பட்ட மக்களின் மொழிசார் அடையாளத்தையும் உருவாக்கியது, அல்லது ஏற்கனவே இருந்ததை மீள்கொணர்ந்தது.


இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு மிக நீண்டது. தனி மாநிலம், தனி நாடு கோரிக்கைகள் எல்லாம் ஏதோ 1947க்குப் பிறகுதான் எழுந்தன என இன்று ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் பிரிட்டிஷ் காலத்திலேயே அவை தொடங்கிவிட்டன. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது! 

தனி மாநில/மாகாண கோரிக்கைகளின் தொடக்கம் ஒரிசாதான் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 1895 இல் சம்பல்பூரில் உருவான ஒரு மொழிக்கிளர்ச்சியைத் தொடர்ந்து ஒரிசா மாநில கோரிக்கை எழுந்தது. அப்போது சம்பல்பூர் பகுதி மத்திய மாகாணத்துடன் இணைந்திருந்தது. ஆங்கிலேயே அரசு சம்பல்பூரில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்க முயற்சி செய்தபோது, ஒரிய மொழியினர் அதை எதிர்த்து களம்கண்டார்கள். இந்தியாவின் முதல் பெரும் மொழிப்போராட்டமான அதில் ஒரிய மக்கள் தோற்றுப்போனார்கள். இந்தி, ஒரியமொழியை (தற்காலிகமாக) அதிகார பீடத்திலிருந்து ஒழித்துக்கட்டியது. வரலாற்றுப் புகழ்பெற்ற கலிங்க நாட்டவர்கள் அந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து ஒரியர்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பினார்கள். அப்போது ஒரிய மக்கள் வாழும் பெரும் பகுதிகள் மத்திய மாகாணத்திலும் பிஹாருடனும் இருந்தன. சென்னை, கல்கத்தா மாகாணங்களிலும் கலிங்கம் துண்டாடப்பட்டுக்கிடந்தது. பல சமஸ்தானங்களிலும் ஒரிய மக்கள் வாழ்ந்தார்கள். ஒரிய தேசியத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மதுசூதன் தாஸ் உள்ளிட்டோர் ஒருபுறம் இந்திய விடுதலைக்கான போராட்டங்களில் மகாத்மா காந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டுக்கொண்டே மறுபுறம் ஒரிய மாநிலத்துக்கான போராட்டத்தையும் நடத்தினார்கள். 1912 இல் வங்கத்திலிருந்து பிஹாரும் ஒரிசாவும் பிரிக்கப்பட்டு பிஹார்-ஒரிசா மாகாணம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகும் ஒரிய மக்கள் தொடர்ந்து போராடினார்கள். சைமன் கமிஷன், லண்டன் வட்டமேஜை மாநாடு போன்ற களங்களிலும் இது எதிரொலித்தது. இறுதியில் 1935 இல் பிஹார்-ஒரிசா மாகாணத்திலிருந்து பிரிந்து ஒரிசா தனி மாகாணமாக ஆனது. (இதைப் போலவே பம்பாய் மாகாணத்திலிருந்து சிந்தி பேசும் மக்களின் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு சிந்து மாகாணம் உருவாக்கப்பட்டது). இந்தித் திணிப்பு எதிர்ப்பும் மொழி அடையாளத்துக்கான போராட்டமும் ஏதோ தமிழ்நாட்டுச் சரக்கென்றும் தேசவிரோதம் என்றும் நினைப்பவர்களுக்காக இந்த ஒரிய வரலாற்றை நினைத்துப்பார்க்கவேண்டும்.


ஒரியர்களைப் போலவே மராத்தியரும் தமக்கான மொழிசார்ந்த புவி அடையாளத்தை கண்டடைவதில் பின்தங்கியிருக்கவில்லை. 1906 இல் பால கங்காதர திலகர் முதன் முதலில் மகாராஷ்ட்டிரா என்கிற மராத்திய தேசத்தைப் பற்றி கனவுகண்டார். 1919 இல் அவர் மகாராஷ்ட்டிர மாநிலம் குறித்த கோரிக்கையை காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் கோரிக்கைகளில் ஒன்றாக்கினார். 1938 இல் மத்திய மாகாணம் இருமொழி பேசும் பம்பாய் மாகாணத்திலிருந்து விதர்பாவை தனி மாநிலமாக ஆக்க தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டு விதர்ப்பாவையும் பிற மராத்தி பேசும் பகுதிகளையும் உள்ளடக்கி தனி மராத்தி மாநில கோரிக்கைக்கு அறைகூவல் விடுத்தவர் வேறு யாருமல்ல, வீர சவர்க்கர் என்று இந்துத்துவவாதிகளால் அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சவர்க்கர்! ஆனால் மராத்திய அடையாளம் என்பது வெறுமனே இந்துத்துவ அடையாளம் மட்டுமல்ல. அது பெருவாரியான மக்களின் ஏற்பு பெற்றிருந்தது. அதனால்தான் 1948 அக்டோபர் 14 ஆம் தேதி பம்பாயை தலைநகராக கொண்ட மராத்திய மாநிலம் வேண்டும் என தர் கமிஷனிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார் அண்ணல் அம்பேத்கர்.


ஒரியாவும் மராத்தியமும் விதிவிலக்குகள் அல்ல. 1905 இல் ஒரு மொழி பேசும் வங்கத்தை கர்சன் பிரபு இரண்டாக உடைத்த பிறகே இந்தியாவில் மொழிக்கும் நிலத்துக்கும் இடையிலான உறவுகள் புலப்படலாயின. மொழி அரசியல் பருண்மையான வடிவம் எடுத்தது. 1913 இல் பாப்தாலாவில் ஆந்திர மாநிலத்துக்கான முதல் கோரிக்கை எழுப்பப்பட்டது. 1915 இல் ஆந்திர காங்கிரசுக்காரரகள் இந்திய தேசிய காங்கிரசையே மொழிவாரி மாகாண கிளைகளாக பிரிக்கும்படி கோரினார்கள். 1921 இல் இதை காங்கிரஸ் கட்சி ஏற்றது. இந்தியாவை மொழிவாரியாக பிரித்து அணுகும் போக்கை பிரிட்டிஷாரும் ஏற்கத் தொடங்கினர். 1919 மான்ட்டேகு – செம்ஸ்போர்டு அறிக்கை இந்த யதார்த்தத்தை அங்கீகரித்தது. 1920 இல் தேசபந்து சி ஆர் தாஸும் தன் சுயராஜ்ய திட்டத்தில் மொழிவாரி மாநிலங்களை அங்கீகரித்தார். 1927 இல் சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் 40க்கு 32 பேர் என ஆந்திர மாகாண உருவாக்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். 

பெருந்தேர்ச்சக்கரம் உருண்டோடத் தொடங்கிவிட்டது. இந்திய சுதந்திர உணர்வை மாகாண உணர்வு நசுக்கிவிடுமோ என்கிற அச்சம் இருந்ததே தவிர, பெரும்பாலான மக்கள் தலைவர்கள் மொழிவாரி பிரிவுகளை நியாயமானதாகவே கருதினர். 1927 இல் சைமன் கமிஷனும் மொழிவாரி மாகாண அடிப்படையை அங்கீகரித்தது. 

அடுத்தப் பத்தாண்டுகளில் காங்கிரஸ் தலைவர்கள், இந்து மகாசபாவினர் (ஒரு பகுதியினர்), கம்யூனிஸ்ட்கள், நீதிக் கட்சியினர்,. முஸ்லீம் தலைவர்கள் பலர், தீவிர ஜனநாயகவாதிகள் கட்சியினர் என இந்தியாவில் எல்லா தரப்பினருமே மொழிவாரி மாகாணங்கள் என்கிற கருத்தாக்கத்தையே வந்தடைந்தனர். இந்தியா இத்தகைய மொழிவாரி மாகாணங்களின் ஒன்றியமே என்கிற புரிதலும் பெரும்பாலோனோரை சென்றடைந்தது. 1938 இல் சென்னை மாகாணத்தை தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள பகுதிகளாக பிரிக்கும் தீர்மானத்தை கொண்ட வெங்கடப்பய்யா பந்துலு கொண்டுவந்தார். உருவாகவுள்ள சுதந்திர இந்தியாவுக்கான அரசியல்சாசன நிர்ணய சபை, மொழிவாரி மாகாணங்கள் என்கிற கருத்தாக்கத்தை புதிய அரசியல்சாசனத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக ஆக்கவேண்டும் என்று அனைத்தந்திய மொழிவாரி மாகணங்களின் லீக் என்கிற ஒரு அமைப்பு 1947 மே 13 ஆம் தேதி பெஸ்வாடாவில் கூடி தீர்மானமியற்றியது. சென்னை சட்டமன்றமும் 1946 இல் இத்தகைய தேவையை வலியுறுத்தி தீர்மானம் இயற்றியிருந்தது: “இந்தியாவுக்கான அரசியல்சாசனத்தை உருவாக்குவதில் இது அதியத்தியாவசியமான தேவையாகும்” என அந்தத் தீர்மானம் கூறியது.


மத்திய சட்டசபை 1948 இல் எஸ்.கே.தர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளை ஆராய்ந்தது. மொழிவாரி மாகாணங்கள் தொடர்பான யதார்த்தத்தை தர் கமிட்டி அங்கீகரித்தது. ஆனால் அது தேச நலன்களுக்கு எதிரானது என்று முடிவு செய்தது. அதாவது சுதந்திரத்துக்கு முந்திய காங்கிரஸ் இப்போது மொழிவாரி மாநிலங்கள் விஷயத்தில் தனது சுயமுகத்தைக் காட்டத்தொடங்கியது. ராஜாஜி, கோல்வாக்கர் போன்றோர் மொழிவாரி மாநிலங்களை ஏற்கவில்லை. ஆனால் இந்த துரோகத்தை மாகாணங்களில் இருந்த எல்லா காங்கிரஸ் தலைவர்களும் ஏற்கவில்லை. இந்திய சுதந்திரத்துக்காக போராடிய பலர் அடுத்த போராட்ட களமாக கண்ட்டைந்தது மொழிவாரி மாநிலங்களுக்காகத்தான். 1952 டிசம்பர் 16 இல் பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்க்கொடைக்குப் பின் நேரு அரசு தனது தூக்கத்தை கலைக்கவேண்டியதாயிற்று. 1913 முதல் போராடிவந்த ஆந்திர மக்களின் தனி மாகாண கனவு 1953 அக்டோபர் 1 இல் புதிய ஆந்திர மாநிலம் என்கிற வடிவில் நிறைவேறியது . இது இந்தியா முழுக்க தனி மாநிலக் கனவுகளிலிருந்த மக்களுக்கு உற்சாகமளித்தது. 

1953 இல் மத்திய அரசு மாநில மறுஒழுங்கமைப்பு குழுவை அமைத்த்து. 1955 இல் அந்த குழு 16 மொழிவழி மாநிலங்களையும் 3 யூனியன் பிரதேசங் களையும் அமைக்க பரிந்துரை செய்தது. அதன் அமலாக்கம் மாநில மறுஒழுங்குமைவுச் சட்டம் 1956 மூலமாக நடந்தேறியதெல்லாம் நாம் அறிந்த வரலாறாகும்.


பிரிட்டிஷ் காலத்தில் மலபார் பகுதி சென்னை மாகாணத்திலும் வட கேரளத்தின் சில பகுதிகள் தென் கர்நாடக பகுதியுடனும் இருந்தன. கொச்சி பகுதியும் திருவிதாங்கூர் பகுதியும் தனித்தனி சமஸ்தானங்களாக இருந்தன. 1949 இல் இரு சம்ஸ்தானங்களும் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி உருவானது. பிறகு மாநில மறுஒழுங்கமைவுச் சட்டத்தின் கீழ் 1956 நவம்பர் 1 இல் இவையாவும் இணைந்து கேரள மாநிலமாக உருவாயின. இதற்காக அடித்தளமிட்டு போராடிய ஐக்கிய கேரள இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் இருதரப்பினரும் இருந்தனர். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும் இந்திய தேசிய கவி வள்ளத்தோள் நாராயணன் மேனனும் ஐக்கிய கேரள இயக்கத்தின் பிரதான முகங்களாக இருந்தார்கள். கர்நாடகமும் அதே வழியிலேயே சென்றது. மைசூர் சமஸ்தானம், சென்னை மற்றும் பம்பாய் சமஸ்தானங்களில் அடங்கியிருந்த கன்னடர்கள் பெருவாரியாக வசித்த பகுதிகள், ஹைதராபாத் கர்நாடகப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய மைசூர் மாநிலம் 1956 நவம்பர் 1 இல் உருவானது. இது 1973 இல் கர்நாடகம் என பெயர் மாற்றம்செய்யப்பட்டது. 

மேற்கே மகாராஷ்டிரத்துக்கு பிறகு குஜராத்தும் அவ்வாறே உருவானது. பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்து பிரிந்து போனதிலிருந்தே குஜராத்திகளும் தங்களுக்கு தனி்மாநிலம் வேண்டும் என விரும்பினார்கள். குஜராத் காங்கிரஸ் தலைவர்களான இந்துலால் யக்னிக்கும் மொரார்ஜி தேசாயும் இந்த குஜராத் மாநில போராட்டத்தின் முக்கிய முகங்கள். மகாகுஜராத் இயக்கம் என்கிற பெயரில் பம்பாய் மாநிலத்தின் குஜராத்தி பகுதிகளையும் செளராட்டிர, கட்சி பகுதிகளையும் இவர்கள் இணைத்தார்கள்.


இவ்வாறாக இந்தியாவில் மொழிவாரி மாநிலப் பிரிவினை சூறாவளியாக சுழன்றடித்த வேளையில் தமிழகம் ஒரு வினோதமான சூழலைச் சந்தித்தது. மொழி அரசியலுக்கும் மாநில உரிமைகளுக்கும் முன்னோடி என கருதப்படும் தமிழகம் 1940-1950களில் இவ்விஷயத்தில் மிகவும் குழம்பிப்போயிருந்தது. 

தமிழகம் கிட்டத்தட்ட மறந்துவிட்ட ஒரு முக்கிய முன்னெடுப்பு குறித்து இங்கே பேசவேண்டும். அது 1920களின் இறுதியில் நடந்தது. காங்கிரஸ்காரராக இருந்த சர் சி.சங்கரன் நாயர் (சென்னை மாகாண அரசியல் தலைவர்களில் ஒருவர்) 1926 இல் மத்திய சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்திலுள்ள பத்து தமிழ் மாவட்டங்களை தனியாக பிரித்து பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீ்ழ் டொமினியன் அந்தஸ்து உள்ள பிரதேசமாக – கிட்டத்தட்ட சுயாட்சி உள்ள பகுதியாக – தமிழகத்தை உருவாக்கவேண்டும் என ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அது அப்போது ஏற்கப்படவில்லை. ஆனால் அதன் பிறகு தமிழ்நாட்டில் தனி மாகாண அல்லது தனி நாடு கோரிக்கைகள் மெல்ல மெல்ல உருவாகத்தொடங்கின. முதன்முதலாக இந்தியா என்பது ஒரு நேஷனா என தந்தை பெரியார் கேள்வி எழுப்பியது இதற்கு பின்புதான். தொடக்க கால தமிழ்த்தேசியவாதிகள் அல்லது தமிழறிஞர்கள் இக்காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்குட்பட்ட தமிழ் மாகாணம் ஒன்றை இந்திய எல்லைக்கு உட்பட்டோ அல்லது அதற்கு வெளியிலோ கேட்டார்கள். ஆனால் அவை எதுவுமே பெரும்போராட்டங்களாக வெடிக்கவில்லை. 1947க்குப் பிறகு இவை எல்லாம் இந்திய தேசியத்திலோ அல்லது திராவிட நாட்டு பெருங்கனவிலோ கரைந்துபோயின. 

சங்கரன் நாயரின் கோரிக்கையான டொமினியன் அந்தஸ்துள்ள தமிழ்நாடு என்பதும் பெரியாரின் தமிழ்நாடு தமிழருக்கே என்கிற முழக்கமும் சோமசுந்திர பாரதியார் உள்ளிட்டோரின் தமிழ்நாட்டு கோரிக்கையும் நாற்பதுகளில் பலமிழந்தன. ஐம்பதுகளில் மற்ற இடங்களில் ஐக்கிய கேரளம், சம்யுக்த மகாராஷ்டிரம், விசாலாந்திரம், கர்நாடக ஏகிகரண இயக்கம் என்றெல்லாம் இயக்கங்கள் தோன்றி மொழி அடையாள அரசியல் பரவிய நேரத்தில், தமிழகத்தின் தலைவர்கள் தமக்கான வியூகத்தை வகுத்திருக்கவில்லை. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் எல்லைக் காப்பு போராட்டங்களே மாநில உருவாக்க போராட்டமாக இருந்தது. காங்கிரசும் திராவிட அமைப்புகளும் புதிய யதார்த்தத்தை புரிந்துகொண்டிருந்ததாகவே தெரியவில்லை. மபொசி, நேசமணி போன்றோரின் போராட்டங்கள் எல்லைக் காப்பை மையமாக கொண்டிருந்தன. சென்னை மாகாணத்திலிருந்து தமிழ்நாட்டை நோக்கிய பயணம் திசைகெட்டுப்போயிருந்தது. இதனால் பெரும்பாலுமான தமிழர்கள் மத்தியில் மொழிவாரி மாநிலக் கோரிக்கை குறித்து குழப்பமே நீடித்தது.


முப்பதுகளில் ஒரு ஒரளவுக்காயினும் ஏற்கத்தக்க வரலாற்று யதார்த்தமாக இருந்த திராவிட நாடு கோரிக்கை ஐம்பதுகளில் காலப்பொருத்தமற்றதாகவே மாறியிருந்தது. நூற்றாண்டின் தொடக்க பதிற்றாண்டுகளிலேயே தெலுங்கு, கன்னட, மலையாளம் பேசுவார் சென்னை மாநிலத்தை உடைத்து தங்களுக்கான மாகாணங்களைக் கோரி போராடிக்கொண்டிருந்த தருணத்தில், யாருக்காக திராவிட இயக்கத்தினர் திராவிட நாட்டுக் கனவை கண்டுகொண்டிருந்தார்கள் என்கிற கேள்வி எழுப்பப்படுவதில் நியாயமில்லாமல் இல்லை. வடக்கின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, அல்லது புதியதோர் சமூக நீதிக்கான உருவகமாக திராவிட நாடு இருந்தது. ஆனால் ஐம்பதுகளின் சூழல் அதை நிர்மூலமாக்கிவிட்டது. குறைந்தபட்சம் பெரியார் திராவிட நாட்டு கனவை 1956 நவம்பர் 1 ஆம் தேதி கலைத்துக்கொண்டுவிட்டார். ஆனால் அண்ணாவால் அது முடியவில்லை. 1962 இல்தான் அவர் அதை கைவி்ட்டார், ஆனால் வேறு காரணங்களுக்காக. திராவிட மயக்கத்தில் தமிழகம் இருந்தபோதுதான் இந்தியா முழுக்க மொழிவாரி ரீதியாக இடங்கள் பிரிக்கப்பட்டபோது, தேவிகுளமும் பீர்மேடும் மட்டும் "புவியியல்" காரணங்களுக்காக கேரளத்திடமே இருக்கும்படி அனுமதிக்கப்பட்டது. அது திராவிட நாட்டில் இருப்பதால் அண்ணா சகித்துக்கொண்டார். காமராசருக்கோ அவை இந்தியாவில்தானே இருக்கிறது என்பதால் கவலை இல்லை. பெரியாரோ தான் சமூக முன்னேற்றதுக்காக போராடுகிறவனே ஒழிய, விஸ்தீரணத்துக்காக போராடுபவன் இல்லை என்று அறிவித்துவிட்டார் என்பதால் அவரிடம் எதிர்பார்ப்பது வீண் என்றானது. இவ்வாறாக சென்னை மாகாணத்தின் எச்சமாக தமிழ்நாடு - வேறுவழியில்லாமல் - உருவானது. அதனால்தான் தமிழகத்தில் நவம்பர் 1 ஒரு கொண்டாடப்படக்கூடிய நிகழ்வாக இருந்ததில்லை. 

ஆனால் இந்த நாளை கொண்டாடவேண்டியதன் அவசியம் நமக்கு இருக்கிறது. இந்தியாவில் மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது இந்தியாவின் பன்மைத்தன்மையை அங்கீகரித்த ஒரு செயல்பாடாகும். அது மக்கள் போராடி வென்ற ஒரு உரிமையாகும். அதுவும் எப்படிப்பட்ட ஒரு நேரத்தில்?


இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் தாக்கம் ஐம்பதுகள் நெடுக இருந்தது. காஷ்மீரும் நாகாலாந்தும் ஹைதராபாதும் நேரு அரசை அச்சுறுத்திய காலம் அது. மாகாணங்களையும் சமஸ்தானங்களையும் இணைத்து புதிய மத்திய - மாகாண அதிகாரப் பகிர்வு பற்றி பேசும்போதெல்லாம் வலுவான மத்திய அரசே வேண்டும் என எல்லா ஆட்சியாளர்களும் விடாப்பிடியாக இருந்த காலமும்கூட. இந்திய ஒன்றிய அரசு வெறுமனே இந்திய மத்திய அரசாக மாறிக்கொண்டிருந்தது.


ஆனால் அந்த சூழலிலும் மக்கள் தங்களுக்கான மொழிவாரி மாநிலங்களுக்காக போராடினார்கள். அவர்கள் அதை இந்தியாவுக்கு எதிரானதாக ஒரு நடவடிக்கையாக பார்க்கவில்லை. இந்தியாவின் வரலாற்று நிதர்சனமாக பார்த்தார்கள். ஆனால் இந்தியா குறித்த ஒரு குறுகிய பார்வை வைத்திருந்த சில காங்கிரஸ் தலைவர்களும் ஆர் எஸ் எஸ் தலைவர்களும்தான் அதை தேசவிரோதமாக பார்த்தார்கள். இன்றுவரை மொழிவாரி மாநிலப் பிரிவினை தவறானது என பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.


மாநிலப் பிரிவினையின் பிரதான வரையறை காரணியாக மொழியை வேறு வழியின்றிதான் நேரு அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்தியா என்பது ஒரு பல்தேசிய கூட்டமைப்பு என்பதை அங்கீகரித்த முதல் முக்கியமான செயல்பாடாக இதை நாம் பார்க்கவேண்டும். இரண்டாயிரம் ஆண்டு காலமாக ஒரு மொழிப் பிரதேசமாக இருந்துவந்த தமிழகம் அன்று ஒரு நவீன அரசியல் அமைப்பாக மாறியது. பல அரசுகளாக பிரிந்திருந்த தமிழர் நிலம், அல்லது பல்வேறு அரசுகளோடு தன்விருப்பின்றி பிணைக்கப்பட்டிருந்த தமிழர் நிலம், அன்று தனக்கான நிலமாக மாறியது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் ஒரு தமிழ் அரசாக அது உருவான நாள் அந்த 1956 நவம்பர் 1 தான் என்கிற உண்மையை யார் மறுக்கவியலும்?


நன்றி : ஆழி செந்தில்நாதன்



by Swathi   on 05 Nov 2014  1 Comments
Tags: Historical Notes   Indian States   இந்திய மாநிலம்   வரலாற்று குறிப்புகள்           
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் மாநில உருவாக்கம்: சில வரலாற்றுக் குறிப்புகள் இந்தியாவில் மாநில உருவாக்கம்: சில வரலாற்றுக் குறிப்புகள்
கருத்துகள்
07-Jan-2019 15:16:43 சதீஷ் குமார் said : Report Abuse
மிக மிக அற்புதமான தகவல். தமிழில் இது போன்ற முக்கிய பதிவுகள் அதிகம் வருவது இல்லை. குறிப்பாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் இருப்பதும் இல்லை. இந்த பதிவில் தனி மாநில கோரிக்கைகள் பற்றி இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் மிக தெளிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளது. மேலும் தொடர்க உங்க பணி. நன்றி! வாழ்த்துக்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.