மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும், பிரபல நடிகர் சஞ்சய்தத்தின் தண்டனை காலத்தை குறைப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்டுள்ளது.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 263 பேர் பலியாகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இறுதியாக 5 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி சஞ்சய்தத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய மனுவில், 'சஞ்சய் தத் மற்றும் இரண்டு பேருக்கு, மனிதாபிமான அடிப்படையில் விடுதலைஅளிக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நடிகர் சஞ்சய் தத்திற்கு தண்டனை காலத்தை குறைப்பது பற்றி, கருத்து தெரிவிக்கும்படி, மகாராஷ்டிரா மாநில அரசை கேட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு பரிந்துரை அளித்த பின், உள்துறை அமைச்சகம், ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை அளிக்க இருக்கிறது.
|