தினம் தினம் வெயில், புகை, தூசு என நமது சருமத்தை பதம் பார்க்கும் விஷயங்கள் இன்றைய இயந்திர உலகில் அதிகம்... அவற்றில் இருந்து தப்பித்து உங்களது சருமத்தை மாசு, மருவில்லாமல் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறைக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் தரும் அந்தப் பொருட்களைப் பற்றி இப்போது பார்ப்போமா..
முகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
வறண்ட சருமம் பளபளக்க :
வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.
கருவளையம் மறைய :
கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல் போகும்.
மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை என மூன்று வேளையும் ஏதாவது ஒரு பருப்பை ஒரு வேளைக்கு இரண்டு என சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சினைகள் தீரும். கீரை வகைகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் சருமம் பொலிவு பெற :
எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவுபெறும்.
சாதாரண சருமம் பளபளக்க :
சாதாரண சருமத்துகென பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. எப்போதும் போல முகத்தைப் பராமரித்து வந்தாலே போதும். கன்னங்கள் ஒட்டிப்போய் இருப்பவர்கள், சாமந்திப் பூ, சிறு பருப்பு சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் கன்னங்கள் உப்பி வரும்.
நன்றி : சித்த மருத்துவர் அருண் சின்னையா
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |