பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப் போல போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் விக்ரமன். தற்போது இவர் புதுமுகங்களை வைத்து நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
வழக்கமாக என் படத்தில் குடும்ப கதையுடன் காதலும் இணைந்திருக்கும். இப்படம் இளைஞர்களின் காதலை மட்டுமே சொல்லும் கதையாக உருவாகி இருக்கிறது. இதில் நடித்துள்ள ஹீரோ ரஜித், ஹீரோயின் நிமிஷா இருவரையுமே பேஸ்புக் மூலம் தேர்வு செய்தேன். உடன் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களும் புதுமுகம் தான். இசை அமைப்பாளர் பால்ராஜ், ஒளிப்பதிவாளர் பிரதாப் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள் பி.ரமேஷ், இமானுவேல் ஆகியோரும் புதுமுக தயாரிப்பாளர்கள்தான். வரும் 30ம் தேதி படம் ரிலீசாக உள்ளது.
இனி 100 கோடி ரூபாய் கொடுத்து பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கச் சொன்னாலும் ஏற்க மாட்டேன். பெரிய நடிகர்களை இயக்கும்போது ரசிகர்களின் திருப்திக்காக சண்டை காட்சி திணிக்க வேண்டி இருக்கிறது. வானத்தைப் போல, சூர்யவம்சம் போன்ற படங்களில் ஹீரோக்களே சண்டை காட்சி வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபோதும் சிலரின் வற்புறுத்தலுக்காக சண்டை காட்சியை வைத்தேன் என விக்ரமன் தெரிவித்தார்.
|