ஆரோக்கியதாஸ் இயக்கத்தில், கவுண்டமணி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 49 ஒ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், கவுண்டமணி, சத்யராஜ், சிவகார்த்திகேயன் என பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் சிவகார்த்திகேயன் பேசும் போது, வாழ்க்கையில ரொம்ப கஷ்டமான நேரம் எதுன்னா அது கவுண்டமணி சார்கிட்ட உட்காந்திருக்கிறது தான். இப்படி திரும்புறத்துகுள்ள ஒரு பஞ்ச் அடிச்சி முடிச்சிடுவாறு. என்னால அந்த நேரத்துல சிரிக்கவும் முடியல, சிரிக்காம இருக்கவும் முடியல.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கவுண்டமணி சார், இந்த படத்துல காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லை. மக்கள் தியேட்டருக்கு வருவாங்களா என்றார். அதைக்கேட்டு அருகில் இருக்கும் சத்யராஜ் சார், அது இல்லன்னாதான் வருவாங்க என்றார். இப்படியாக ஏதாவது இருவரும் ஜாலியாக் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்த வரை கவுண்டமணி - சத்யராஜ் சார் மாதிரி ஒரு நல்ல காம்பினேஷன் பார்க்கவே முடியாது. எனக்கு ஒரு ஆசை கவுண்டமணி - சத்யராஜ் - நான் என ஒரு காம்பினேஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்க வேண்டும்.
விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே கவுண்டமணி சார் காமெடிகளை பார்த்து ரசிச்சுகிட்டு வர்றேன். இப்பவும் ரசிக்கிறேன். இனிமேலும் ரசிப்பேன். அவங்களை மாதிரி நடிகர்களை ரசித்ததினாலதான் என்னையும் ஒரு நடிகனா விதி கொண்டு வந்து இங்கே நிறுத்தி இருக்கு.
என்னைக்கேட்டால் கவுண்டமணி சார் தான் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியவர். இன்னும் ஐம்பது வரும் போனாலும் அவரோட இந்த டிரென்ட், பஞ்ச் இருக்கும். ஒரு முறை அவரோட ஆபீஸுக்கு போனப்ப, உங்களோட காமேடிகளைத்தான் நாங்க தேடித்தேடி எடுத்து திருடி வித்துக்கிட்டிருக்கோம் என்று அவரிடம் சொன்னபோது, அட இல்லாதவங்க எடுத்துக்கிட்டுமேப்பா என்று அதையும் நகைச்சுவையாக சொன்னார். அவருடன் இருந்த நேரம் முழுக்க நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன்.
இந்த மாதிரி விவசாயம், அரசியல் கலந்த கதைகளை கவுண்டமணி சார் மாதிரி நடிகருங்களால தான் சரியாக சொல்ல முடியும். அந்த வகையில் அவர் 49 ஒ என்றொரு நல்ல படத்துல நடித்திருக்கிறார். அவரிடம் அதே எனர்ஜியை இப்போதும் பார்க்கிறேன் என விழாவில் பொரிந்து தள்ளினார் சிவகார்த்திகேயன்.
|