|
|||||
ஐ இசை வெளியீட்டு விழா - சுவாரசிய நிகழ்வுகள் ஒரு பார்வை !! |
|||||
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், விக்ரமின் அசுரத்தனமான நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ஐ. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மேலும், நடிகர் திலகம் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசை புயல் ஏஆர்..ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் இரண்டு வருட காலமாக தயாரிப்பில் இருக்கும் இந்த படம் வரும் தீபாவளியை ஒட்டி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், ஹாலிவுட் நடிகர், அர்னால்டு, ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார், லட்சுமி ராய், சிபிராஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், விஜய் அமலாபால், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் உட்பட பல திரைப்பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஐ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆறு மணிக்கு துவங்குவதாக இருந்தது, ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் எட்டு மணிக்கு துவங்கியது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும், விக்ரம், எமியின் நடனமும் : ஐ படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ரஹ்மான் உடன் பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரண் ஆகியோர் ஐ படத்தின் பாடல்கள் பாடி அசத்தினர். இதனை தொடர்ந்து, ஐ படத்தில் இடம்பெற்றுள்ள என்னோடு நீயிருந்தால்... பாடலுக்கு விக்ரமும், எமி ஜாக்சனும் நடனம் ஆடினர். இந்தப்பாடலுக்கு விக்ரம் ஓநாய் மனிதன் போன்ற தோற்றத்தில் வந்து, ரசிகர்களையும், திரை பிரபலங்களையும் மிரட்டி விட்டு சென்றார். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அர்னால்டுக்கு பிடித்த பாடி பில்டிங் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கலைஞர்கள் தங்களது அழகிய உடற்கட்டை காண்பித்தனர். இதனை அர்னால்டு மிகவும் ரசித்து பார்த்தார். இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், திரை பிரபலங்கள் பேசியதாவது, ஷங்கர் இயக்கத்தில் இந்திய படங்களில் நடிக்க ஆசை : அர்னால்ட் விழாவில் அர்னால்ட் பேசியதாவது : நான் இந்த விழாவில் இறுதியாகத்தான் பேச வேண்டியிருந்தது. ஆனால் இப்போதே பேசி விடுகிறேன். எப்போதும் என் விருப்பம் எதுவோ அதைத்தான் செய்வேன். ஷங்கர் ஓர் அற்புதமான இயக்குநர். அவரது படங்கள் அனைத்தும் உலகளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகின்றன. "பாடிபில்டர்'களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நானும் ஒரு "பாடிபில்டர்'. விழாவில் நான் பார்த்த "பாடிபில்டர்'கள் அனைவரும் தங்களது உடலை நன்றாக வைத்துள்ளனர். நான் தற்போது சென்னைக்கு வந்திருப்பதை இயக்குநர் ஷங்கரிடம் வேலைவாய்ப்பு கேட்டு, அவரைச் சந்திக்க வந்திருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். ஷங்கர் அவர்களே என்னை வைத்து எப்போது படமெடுக்கப் போகிறீர்கள்? என்னை வைத்து "கானான் தி கிங்' என்ற படத்தை எடுக்கத் தயாரா? சென்னை அற்புதமான இடம். இதற்குமுன் இந்தியாவுக்கு பலமுறை வந்திருந்தாலும் முதல்முறையாக இப்போதுதான் சென்னைக்கு வருகிறேன். சென்னை மக்களின் பாசம், இந்த நகரத்தின் அழகு, ரசிகர்களின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவேன் என்றார் அர்னால்டு. விக்ரமைப் போன்ற நடிகர் ஹாலிவுட்டிலும் இல்லை : ரஜினிகாந்த் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது: "ஐ' படத்தின் டிரைலரை பார்க்கும்போதும், பாடல்களை கேட்கும்போதும் எப்போது இந்தப் படத்தை பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் எனக்குள் ஏற்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் பயணித்துக்கொண்டு இருப்பவர் ஷங்கர். எந்த இடத்தில் இருந்து வந்தாரோ அதற்கு மேலே போய்க் கொண்டிருக்கிறார். அவரது பயணத்தில் இந்தப் படம் உச்சமாக இருக்கும். ஹாலிவுட் தரத்தில் இந்திய சினிமாவை கொண்டு செல்வதுதான் ஷங்கரின் எண்ணமாக உள்ளது. "ரியல் சினிமா இந்தியன்' என்று ஷங்கரைக் குறிப்பிடலாம். அதேபோல் நடிகர் விக்ரமை "ஐ' சியான் விக்ரம் என்று அழைக்கலாம். விக்ரம் மாதிரியான நடிகனை நான் ஹாலிவுட்டிலும் பார்த்ததில்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட உழைக்கிறார் விக்ரம். அவருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள் என பேசி முடித்தார் ரஜினிகாந்த். ஷங்கரின் உழைப்பு தான் என் கதாபாத்திரத்தை மேறுகேற்றியது : விக்ரம் விழாவில் விக்ரம் பேசியதாவது, வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஒவ்வொரு நடிகனும் நடிக்க விரும்புவார்கள். சில கதாபாத்திரங்களைக் கனவு என்பார்கள். "ஐ' படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத கதாபாத்திரம். இயக்குநர் ஷங்கரின் உழைப்புதான் இந்தக் கதாபாத்திரத்தை முன்னெடுத்து வந்தது. இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைக்கும்போது பசி, வலி, இவையெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக உடலை வருத்தி இந்த கதாபாத்திரத்தில் நடித்தது சிரமமாகத்தான் இருந்தது. இதை விட என் உடலைப் பற்றி ஏன், எப்படி என்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது அதை விட கஷ்டமாக இருந்தது. இப்போது மகிழ்ச்சி என்றார் விக்ரம். ஐ படத்தின் இசையை ரஜினி வெளியிட அதை கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். |
|||||
by Swathi on 16 Sep 2014 0 Comments | |||||
Tags: ஐ I I Movie Audio Launch I Movie | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|