ஓய்வு பெற்ற உடனேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷன் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
தற்போதைய விதிகளின் படி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அல்லது பதவி விலகியதும் உடனடியாக தனியார் துறையில் பணியில் சேர முடியாது. குறைந்தது ஒரு வருடத்துக்குப் பிறகுதான் அவர்கள் பிற வேலைக்கு செல்ல முடியும். ஆனால் அவர்கள் உடனடியாக அரசியலில் ஈடுபடுவது குறித்தும், தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அரசு விதிகள் எதுவும் கூறவில்லை. இதனால், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உடனடியாக அரசியலில் களம் இறங்குகிறார்கள். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றன. அதைத் தடுக்கிற விதத்தில் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, சட்டத்துறை அமைச்சகங்களுக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு ஒரு கடிதம் எழுதியது. அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ‘ஏ’ வகுப்பு அதிகார வர்க்கத்தினர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பதவியை ராஜினாமா செய்த பின்னர் குறிப்பிட்ட காலம் வரை அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க விதியை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதியின் கருத்தை மத்திய அரசு கேட்டது. இதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் ஓய்வு பெற்ற உடனையே அரசியலில் ஈடுபட தடை விதித்தால், அது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14–க்கு எதிரானதாக அமையும் என கருத்து தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தேர்தல் கமிசன் கோரிக்கையை நிராகரித்தது.
|