இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். இது தோற்றமுண்டா மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்- மாறுபாடு என்று சொல்லப்படும் துன்பந்தரு நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குவானாயின்; தவல் இல்லாத் தா இல் விளக்கம் தரும்- அது அவனுக்கு அழியாத குற்றமற்ற புகழைத் தரும். உலகுள்ள அளவும் நிலைத்து நிற்றலால் 'தவலில்லா' என்றும், எல்லாராலும் புகழப்படுவதாலும் பெயரை விளங்கச் செய்வதாலும் 'தாவில் விளக்கம்' என்றும், கூறினார்.
கலைஞர் உரை:
மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்
Translation
If enmity, that grievous plague, you shun,
Endless undying praises shall be won.
Explanation
To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.