இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தனக்கு ஆக்கம் வருங்காலத்தில் மாறுபாடு கொள்ளுதற்குக் கரணியம் ஏற்படினும் அதைக் கொள்ளக் கருதான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும்- தனக்குக் கேட்டை வருவித்தற்குக் கரணியமின்றியும் அம்மாறுபாட்டில் மேற்படுதலைக் கருதுவான். ஆக்கம் ஊழால் வருவது தோன்ற 'வருங்கால்' என்றும், கேடும் அதனால் தானே வருவித்தல் தோன்றத் 'தரற்கு' என்றும், கூறினார். 'மிகல்காணும்' என்பதும் 'மிகலூக்கின்' என்பதுபோல ஒரு சொற்றன்மைப்பட்ட செயப்படுபொருள் குன்றாவினையாம்.
கலைஞர் உரை:
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
Translation
Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.
Explanation
At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.